தினமலர் சென்னை பதிப்பு, 01-06-2008 ஞாயிறு இதழில் வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. புது தி்ல்லியிலிருந்து வெளியாகி இருக்கும் அந்த செய்தியில், பிரபல வங்கிகளின் ஏடிஎம்களில் கள்ளநோட்டுக்கள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இத்தகைய புகார்கள் சென்னையிலிருந்தும் சில காலத்திற்கு முன் எழுந்தது. எனினும் பலம் வாய்ந்த வங்கிகளின் குரலுக்கு முன் சாமானிய நுகர்வோரின் குரல்கள் எடுபடாமல் போனது. .
தற்போது புது தில்லியிலும் இத்தகைய புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தப் புகாராவது விழவேண்டியவர்களின் காதுகளில் விழுமா? என்பது 'சிதம்பர' ரகசியமாகவே உள்ளது.
.
தினமலர் செய்தியில் சில விஷயங்கள் குழப்பமாக கொடுக்கப் பட்டுள்ளது. நுகர்வோர் ஏடிஎம்-கள் மூலமாக கள்ளநோட்டுகளை செலுத்துவது போலவும், அந்த கள்ள நோட்டுகளே ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் நுகர்வோரிடம் செல்வது போலவும் கூறப்பட்டுள்ளது.
.
ஏடிஎம்-மில் (ஒரு கவர் மூலம்) செலுத்தப்படும் பணம் தனியாகவே பெறப்படுகிறது. வங்கி அலுவலர் கவரில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, உள்ளே இருக்கிறதா என்பதை சரிபார்த்தப் பிறகே அது வரவு வைக்கப்படுகிறது. அந்த தொகை நேரடியாக ஏடிஎம்-மில் உள்ள பணத்தோடு சேர்க்கப்படுவதில்லை.
.
நுகர்வோருக்காக ஏடிஎம்-மில் வைக்கப்படும் பணம் வங்கி அதிகாரிகள் மூலமாகவே வைக்கப்படுகிறது. எனவே வங்கி ஏடிஎம்களில் கள்ளநோட்டு இருந்தால் அதற்கு வங்கியே பொறுப்பேற்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
.
ஆனால் கிரெடிட் கார்டு வணிகம் குறித்து ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் முதன்மை சுற்றறிக்கையை எந்த தனியார் வங்கியும் கண்டு கொள்வதில்லை. அது குறித்து ரிசர்வ் வங்கியோ, நிதி அமைச்சகமோ கண்டு கொள்வதில்லை. அதுபோல இந்த சட்டங்களையும் வங்கிகள் மதித்து நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
-சுந்தரராஜன்


