சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரம் – வழக்கு நிலவரம்

கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மாலை, லண்டன்வாழ் தமிழரான திரு இளஞ்செழியன் குடும்பத்தினருடன் தி.நகர், ரங்கநாதன் தெரு, சரவணா ஸ்டோர்ஸ்-க்கு சென்றார். அங்கு நடந்ததை அவரே விவரிக்கிறார்.


‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.

.
லண்டனில் கடந்த பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறேன். விடுமுறையைக் கழிக்க கடந்த ஜூன் மாதம் 25 ம் தேதி மனைவி சுதர்ஷினி, மகள்கள் நளாயினி, சிந்து ஆகியோருடன் சென்னை வந்தேன். கடந்த 21_ம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் லண்டன் கிளம்ப ஆயத்தமானோம். விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்க 20_ம் தேதியன்று, இரவு ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸுக்குச் சென்றோம்.
குழந்தைகளுக்கு பொம்மை, துணிமணிகள் உள்பட பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கினோம். அப்போது என் மூன்று வயது மகள் நளாயினி கடையில் இருந்த ஒரு பந்தைக் காட்டி அதைக் கேட்டாள். அங்கிருந்த ஊழியர் என் மகள் கையில் பந்தைக் கொடுத்தார்.

.
அந்தப் பந்துக்கான பத்து ரூபாயைச் செலுத்தி ரசீதையும் என் மனைவி வாங்கிக் கொண்டாள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து கீழ்த்தளத்துக்கு வந்தோம்.
அப்போது என் மகளை நான் தூக்கி வைத்திருந்தேன். அவள் கையில் இருந்த பந்தைப் பார்த்து ஓர் ஊழியர் எங்களை வழிமறித்து ‘குழந்தையின் கையில் இருக்கும் பந்துக்குப் பணம் செலுத்தி விட்டீர்களா?’ என்று கேட்டார். என் மனைவி பணம் செலுத்தி விட்டதைக் கூறி கையில் இருந்த ரசீதையும் காட்டினாள். அப்போது திடீரென அங்கு வந்த மற்றொரு ஊழியர் என் மகளிடம் இருந்த பந்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்.
பந்து பறிபோனதால் என் மகள் சத்தமிட்டு அழுதாள். உடனே ‘‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? குழந்தையிடம் பந்தை திருப்பிக் கொடுங்கள்!’’ என்று நான் சத்தம் போட்டேன்.


மறுநிமிடம் என் பின்னால் இருந்து ஓர் ஊழியர் என்னை ‘மடேர்’ என்று தலையில் அடித்து விட்டார். நான் மகளை கீழே இறக்கி விட்டுத் திரும்ப முயன்றேன். அதற்குள் மற்றொரு ஊழியர் என்னைக் கீழே தள்ளினார். நான் எழுந்திருக்க முயல்வதற்குள் பத்துப்பேர் கும்பலாகச் சேர்ந்து என்னை நையப் புடைத்தார்கள். கையில் கிடைத்த எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து என் கை, முதுகு, கழுத்து என அடிக்க ஆரம்பித்தனர். நான் தாக்கப்படுவதைப் பார்த்து என் மகள் நளாயினி பயத்தில் வாந்தியெடுத்து விட்டாள்.

.
என் மேல் விழுந்த அடிகளைத் தடுக்க முயன்ற என் தந்தையும், மருத்துவருமான சண்முகநாதனை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் தள்ளி விட்டனர். அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்து எங்களை மீட்டனர்.

.
கடைக்கு வெளியே என்னை அவர்கள் அழைத்து வந்தனர். முதுகில் கடுமையான வலி இருந்ததால் சட்டையைக் கழற்றிப் பார்த்தேன். ரத்தக்கட்டுகளும், காயங்களும் இருந்தன. அதைப் பார்த்து சக வாடிக்கையாளர்கள் கொதித்துப் போய்விட்டனர். என் மனைவி ஏறத்தாழ மயக்கம் போட்டுவிழும் நிலைக்கு வந்துவிட்டாள். உடனே நான் செல்போன் மூலம் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னேன். சற்று நேரத்தில் மாம்பலம் போலீஸார் அங்கே வந்து என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

.
என் காயங்களைப் பார்த்த போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அதற்குள்ளாக போலீஸாருக்கு எங்கிருந்தோ போன் வந்துவிட ‘இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இப்படியே விட்டுவிடுங்கள்’ என்று போலீஸார் என்னிடம் காம்ப்ரமைஸ் செய்ய முயன்றார்கள்.

.
அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘இனிமேல் தமிழ்நாட்டில் யாருக்கும் இப்படியரு சம்பவம் நடக்கக்கூடாது. வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறினேன். அதன் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்கள்.

.
இந்தச் சம்பவம் மீடியாக்களில் வெளிவந்த பிறகு ஏராளமானோர் என்னைத் தொடர்பு கொண்டு ‘நாங்களும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளோம்’. ஆனால் நீங்கள்தான் தைரியமாக போலீஸ்வரை போய் புகார் கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று எனக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
.
பத்தாயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கும் நான், பத்து ரூபாய் கொடுத்து பந்து வாங்க மாட்டேனா? என்னைப் பார்த்தால் பந்து திருடுபவன் மாதிரியா இருக்கிறது? அப்படியே இருந்தாலும் எடுத்த எடுப்பில் ஒருவர் மீது கை வைக்கலாமா? லண்டனில் ஒரு போலீஸ்காரர் கூட சாதாரண ஆளை இப்படிப் போட்டு துவைத்து விட முடியாது. அப்படித் தாக்கினால் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்’’ என்றார் அவர் வேதனையுடன்.
.
இளஞ்செழியன் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரைத் தாக்கியதாக கடை மேலாளர் லிங்கராஜன், ஊழியர்கள் வைகுண்ட பெருமாள், மூர்த்தி, சிவக்குமார், பாலமுருகன், ஜெகன், தம்பிராஜ் என்ற ஏழு பேர் மாம்பலம் போலீஸாரால் கைது செய்து ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளனர்.


இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 கலகம் விளைவித்தல், 341 முறைகேடான தடுப்பு, 294B ஆபாசமாக பேசுதல், திட்டுதல், 336 கவனமின்மை காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், 323 தன்னிச்சையாக காயம் விளைவி்த்தல், 506(2) குற்றமுறு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சென்னை, சைதாப்பேட்டை 17வது குறறவியல் நடுவர் நீதிமன்றத்தில் வரும் ஜூன் 9ம் தேதியன்று நடைபெறுகிறது.
-ஆசிரியர் குழு

கிரெடிட் கார்ட் - பில்லிங் தேதியும், வட்டியில்லா கடன் நாட்களும்...

கிரெடிட் கார்டு நுகர்வோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சங்கள் பில் கணக்கிடும் தேதியும், அந்த பில் தொகையை கட்ட வேண்டிய கடைசி தேதியும் ஆகும்.

இந்த தேதிகளை முதல் பில்லில் கண்டு கொள்ள முடியும். பில் தயாரிக்கப்படும் தேதி பில்லிங் தேதியாகும். அந்த பில்லில் கூறப்பட்டுள்ள தொகையை கட்டுவதற்கு அனுமதிக்கப்படும் கடைசி நாள் பேமென்ட் தேதியாகும்.

இந்த இருநாட்களுக்கும் இடையில் சுமார் 22 நாட்கள் இருக்கும். இந்த நாள் வட்டியில்லா கடன் நாட்களாகும்.

பில் தேதிக்கு முதல் நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு வட்டியில்லா கடன் நாட்கள் 23 நாட்களாகும். பில் தேதிக்கு அடுத்த நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு 52 நாட்கள் வட்டியில்லா கடன் நாட்களாக இருக்கும்.

உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 4 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித்தேதி 26 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...

3ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

4ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

5ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
...பெற முடியும்.

மற்றொரு உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 28 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி 20 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...

27ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

28ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

29ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

...பெற முடியும். இதை முழுமையாக புரிந்து கொண்டால் இந்த கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்துவதை கற்றுக்கொள்ளலாம்.
-ஆசிரியர் குழு
பின்குறிப்பு: கிரெடிட் கார்டு குறித்த உங்கள் சந்தேகங்களை மறுமொழிப் பெட்டியில் பதிவு செய்யுங்கள். அதற்கு பதில் காண முயற்சிப்போம்.

கிரெடிட் கார்டின் வரலாறு

உலகமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் வணிகச்சூழல் பல அதிரடி மாற்றங்களை சந்தித்துக் கொண்டுள்ளது. அதில் முதன்மையானது வங்கிச்சேவை.

முன்பொரு காலத்தில் வங்கியில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ மிக அதிக காலம் பிடிக்கும். அதுவும் நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் அதனஅ வேலைநேரங்களில் மட்டும்தான் வரவு, செலவு செய்யமுடியும். ஆனால் தற்போது வங்கியின் எந்தக் கிளையிலும், எந்த நேரத்திலும் பணம் செலுத்தவோ, எடுக்கவோ முடியும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்து பார்த்திராத மாற்றமாகும்.

அதேபோல வங்கிக்கடன் என்பதே நிலம் அல்லது வீடு போன்ற சொத்துகளை அடமானம் வைத்து வாங்கும் ஒரு அம்சமாக இருந்தது. இந்த அனைத்து நடைமுறைகளையும் மாற்றியமைத்த பெருமைக்குரியது கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளே.

பணப்பரிமாற்றக் கருவியாகவும், கடன் வழங்கும் கருவியாகவும் செயல்படும் இந்த கிரெடிட் கார்டின் தோற்ற வரலாறு மிகவும் சுவையானது. 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த புனை கதை எழுத்தாளரான எட்வர்ட் பெல்லாமி என்பவர், 1887ம் ஆண்டு வெளியிட்ட “பின்னோக்கி பார்த்தல்” (Looking Backward) 2000 – 1887 என்ற அறிவியல் புனைகதையில், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 2000ஆவது ஆண்டில் கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் இருக்கும் எனக் கணித்திருக்கிறார்.

ஆனால் நடைமுறையில் கிரெடிட் கார்டுகள் வெகு விரைவிலேயே புழக்கத்திற்கு வந்து விட்டன. 1920ம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் வாகன எரிபொருள் (பெட்ரோலிய) நிறுவனங்கள், வாடிக்கையாளர்களான வாகன உரிமையாளர்களுக்கு கடனில் (நமது மொழியில் கூறவேண்டுமானால் “அக்கவுண்டி”ல்) எரிபொருள் நிரப்ப ஆரம்பித்தன. இதற்கு அடையாள அட்டை வழங்கி அதில் கடன் தொகையை குறிக்கும் பழக்கம் தொடங்கிய பின், ஒரு பெட்ரோலிய நிறுவனம் வழங்கிய கடன் அடையாள அட்டையை மற்ற நிறுவனங்களும் அங்கீகரித்து, வாகன உரிமையாளர்களுக்கு கடன் வழங்க முன் வந்தன. இந்த முறை பெரிய பிரசினைகள் ஏதுமின்றி வணிகத்தை அதிகரிக்க உதவி செய்தது.

இந்த புதிய அம்சம் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை நடத்துவோரை கவர்ந்தது. இதையடு்த்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்க் எக்ஸ் மெக்நமரா என்பவர், 1950ம் ஆண்டில் உணவகங்களிலும், தங்கும் விடுதிகளிலும் ஏற்கப்படும் டைனர்ஸ் கிளப் கார்டு (Diners Club Card) என்ற முதலாவது கிரெடிட் கார்டை உருவாக்கினார். இந்த கார்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டிலேயே சுமார் 20 ஆயிரம் வாடிக்கையாளர்களை உருவாக்கியது. அந்த வாடிக்கையாளர்கள் சுமார் 1000 உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் இந்த கார்டுகளை பயன்படுத்த வசதி செய்து தரப்பட்டது.

பயணத்தை அதிகம் மேற்கொள்ளும் வணிகர்களிடம், டைனர்ஸ் கிளப் கார்ட் அடைந்த வெற்றி காரணமாக பயணத்தேவைகள், அஞ்சல், பணப்பரிமாற்றம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுவந்த “அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்” “வெஸ்டர்ன் யூனியன்” போன்ற நிறுவனங்களும் பயணிகளுக்கான கிரெடிட் கார்டுகளை வழங்கத் தொடங்கின.

இந்த கார்டுகள் அடைந்த வெற்றி வங்கித்தொழில் அதிபர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதையடுத்து பாங்க் ஆஃப் அமெரிக்கா, பாங்க் அமெரிக்கார்ட் (Bank Americard) என்ற புதிய முழுமையான கிரெடிட் கார்டை 1958ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த கார்டு உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் மட்டும் அல்லாமல் அனைத்து வணிக மையங்களிலும் ஏற்கப்பட்டது.

இதற்கு போட்டியாக மற்றொரு அமெரிக்க வங்கியான இண்டர்பேங்க் 1966ம் ஆண்டில், மாஸ்டர்சார்ஜ் என்ற கார்டை அறிமுகப்படுத்தியது.

பாங்க் அமெரிக்கார்ட் 1976ம் ஆண்டில் “விசா” (VISA) என்றும், மாஸ்டர்சார்ஜ் “மாஸ்டர் கார்ட்” (MASTER CARD) என்றும் பெயர் மாற்றம் பெற்று அசுரவேகத்தில் வளர்ச்சி அடையத் தொடங்கின. இந்த நிலையில் இத்தகைய கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்திய பெட்ரோலிய நிறுவனங்கள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுடன் இணைந்து கோ பிராண்டட் கார்டுகளை அறிமுகப்படுத்தின. இதன் மூலம் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் கணக்குகளை பராமரிக்க வேண்டிய வேலைகளை தவிர்த்துக்கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளின் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்தது.

சாதாரண வங்கிப்பணிகளை மேற்கொண்ட சிட்டிபாங்க் கிரெடிட் கார்டு வணிகத்தில் குதிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது டைனர்ஸ் கிளப் கார்டும் விசா மற்றும் மாஸ்டர் கார்டின் வருகையால் சற்றே சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த சூழ்நிலையை சிட்டிபாங்க் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது. டைனர்ஸ் கிளப்பை கைப்பற்றிய சிட்டிபாங்க் டைனர்ஸ் கிளப் வாடிக்கையாளர்களை, சிட்டிபாங்க் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொண்டது.

இதைப்பார்த்த விசாவும், மாஸ்டர்கார்டும் சிட்டிபாங்க்குக்கு தேவையான மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மூலதனத்தை வழங்க முன்வந்தது. இவ்வாறாக டைனர்ஸ் கிளப்பின் வாடிக்கையாளர்கள் சிட்டி பாங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தத் துவங்கினர். அதற்கான தொழில் நுட்பத்தையும், கடனுக்கான மூலததனத்தையும் விசாவும், மாஸ்டர் கார்டும் வழங்கின. இதையடுத்து இதேபோன்ற ஏற்பாட்டில் பார்கிளேஸ் பாங்க் உட்பட பல்வேறு வங்கிகள் கிரெடிட் கார்டு வணிகத்தில் இறங்கின.

மாஸ்டர் மற்றும் விசா நிறுவனங்கள் நேரடியாக கிரெடிட் கார்டு வணிகத்தில் இறங்காமல் வணிக வங்கிகளுக்கு தொழில் நுட்பமும், மூலதனமும் வழங்கும் முதன்மை வங்கிகளாக உருமாறின.

-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)