வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் (Banking Ombudsman Scheme)


வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம், 2006


A. முன்னுரை
1. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006, அளிப்பவை என்ன ?
வங்கிகளின் சேவைகள் குறித்த புகார்கள் மீது உறுதியான முடிவெடுப்பிற்கு வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 வழிவகுக்கிறது.

2. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் செயல் முறைக்கு வந்துவிட்டதா ?
இத் திட்டம் ஜன்வரி 1, 2006 முதல் அமலுக்கு வந்துள்ளது.

3. வங்கிக் குறைதீர்ப்பாளர் யார் ?
வங்கிச்சேவைகளில் ஏற்படும் குறைபாட்டின் மேல் வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்களைத் தீர்க்கும் பொருட்டு ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டவரே வங்கிக் குறைதீர்ப்பாளர்.

4. வங்கிக் குறைதீர்ப்பாளருக்கு சட்டரீதியான அதிகாரம் உண்டா ?
வங்கிக் குறைதீர்ப்பாணையம் பகுதியளவு நீதிமன்றத்திற்குகந்த அதிகாரம் வாய்ந்தது. வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஆணைகள் பிறப்பிக்கவும், நடுநிலையாளர்கள் மூலம் புகார்களைத் தீர்க்கவும் அதற்கு அதிகாரமுண்டு.

5. வங்கிக் குறைதீர்ப்பாணையம் எத்தனை நிறுவப்பட்டுள்ளன ? அவை எங்குள்ளன ?
நாளது தேதி வரை, 15 வங்கிக் குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது அலுவலகங்கள் பெரும்பாலும் மாநில தலைநகரங்களில் உள்ளன. குறைதீர்ப்பாணையங்களின் முகவரிகள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

6. வங்கிக் குறைதீர்ப்புத்திட்டம், 2006 உள்ளடக்கும் வங்கிகள் யாவை ?
அட்டவணையிலுள்ள அனைத்து வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், தொடக்கநிலைக் கூட்டுறவு வங்கிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

7. பழைய வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2002 லிருந்து புதிய வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 எவ்வாறு வேறுபடுகிறது?
புதிய திட்டம் பரப்பெல்லையிலும், நோக்க அளவிலும், 2002ன் பழைய திட்டத்தை விடச் சிறந்தது. புதிய திட்டம், புகார்களை கணினி வழியாக அளிக்கவும் வழி வகுத்துள்ளது. வங்கியோ, வாடிக்கையாளரோ, குறைதீர்ப்பாணையர் அளிக்கும் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழிவகுக்கும் வகையில், மேல்முறையீட்டை ஏற்றாய்வு செய்யும் அதிகாரியை கூடுதலாக நிறுவிடவும் புதிய திட்டம் வழிவகுத்துள்ளது.



B. வங்கிக் குறைதீர்ப்பாணையம் முன்வைக்கப்படும் புகார்களின் வகைகள்

8. வங்கிக் குறைதீர்ப்பாணையம் எந்த வகையான குறைகளைக் கவனிக்கலாம் ?
வங்கிச்சேவை குறைபாடு குறித்த பின்வரும் புகார்களை வங்கிக் குறைதீர்ப்பாணையம் ஏற்று கவனிக்கலாம்.
)( காசோலை, கேட்போலை, உறுதிச்சீட்டுகள் போன்றவைகள் மீதான பணம் வசூலிக்கப்பதில் தொகை அளிக்கப்படாவிட்டாலோ, அல்லது அளிப்பதிலோ மிதமிஞ்சிய காலதாமதம்

)( போதிய காரணமின்றி, சிறு இலக்க மதிப்பு ரூபாய் நோட்டுகள்/நாணயங்கள் செலுத்தப்படும்போது, வாங்க மறுப்பதும் அச் சேவைக்குத் தரகுத் தொகை/கட்டணங்கள் வசூலிப்பதும்

)( உள்வரும் பணவரவுத்தொகைகளை செலுத்தாமலிருப்பதும் செலுத்துவதில் தாமதம் செய்வதும்

)( பணவழங்காணைகள், கேட்போலைகள், வங்கி வரைவோலைகள் வழங்காமலிருத்தல் அல்லது வழங்குவதில் காலதாமதம் செய்தல்

)( குறிக்கப்பட்ட வங்கிவேலை நேரத்தை அனுசரிக்காமலிருத்தல்

)( கடன் சான்றிதழ், மற்றும் கடன் உத்தரவும் சார்ந்த கடமைப்பொறுப்பை மதித்து நடப்பதிலிருந்து தவறுதல்

)( கடன் வழங்கும் வசதி தவிர, எழுத்தளவில் வங்கியாலோ அல்லது அதன் நேரடி விற்பனை முகவர்கள் மூலமாகவோ உறுதியளிக்கப்பட்ட வங்கி வசதியை அளிக்காமலிருத்தல் அல்லது அளிப்பதில் தாமதம்

)( வங்கியில் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு, நடப்புக்கணக்கு அல்லது வேறெந்தவகைக் கணக்கிலும், வாடிக்கையாளருக்குரிய வரவு வைக்கப்படவேண்டிய தொகையை வரவு வைக்காமலிருத்தல், தாமதித்தல், சேமிப்பைத் திருப்பியளிக்காமலிருத்தல், வட்டி விகிதம் போன்ற பல விஷயங்களில் ரிசர்வ் வங்கியின் கட்டளைகளை அனுசரிக்காமலிருத்தல்

)( ஏற்றுமதியாளருக்குரிய ஏற்றுமதித் தொகையைப்பெற்று அளிப்பதில் தாமதம். ஏற்றுமதி உறுதிச்சீட்டுகள் கையாளுதல் மற்றும் உறுதிச்சீட்டுகள் வசூல் இவற்றில் தாமதம் போன்றவைகளில் வங்கியின் உள்நாட்டுச் செயல்பாடுகள்

)( மறுப்பதற்கான எந்த உரிய காரணம் இல்லாமல் சேமிப்புக்கணக்கினைத் துவக்க மறுத்தல்

)( உரிய முன் அறிவிப்பு ஏதும் அளிக்காமல் கட்டணங்கள் வசூலித்தல்

)( தானியங்கி பணம் வழங்கும்/பற்று அட்டை நடைமுறைகள் மற்றும் கடன் அட்டை நடைமுறைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை அனுசரிக்காத வங்கிகள் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மீதான புகார்கள்

)( பணியாளரல்லாத ஒரு நபரின் ஓய்வூதிக் கணக்கிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணம் வங்கியின் செயல்பாட்டில் நிகழந்த குறையென்று சொல்ல முடிந்தால் அத்தகைய புகார்கள்

)( ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணம் வங்கியின் செயல்பாட்டில் நிகழந்த குறையென்று சொல்லமுடிந்தால் (ஆனால் தனது பணியாளர்களது குறைகளுக்கல்லாமல்) அத்தகைய புகார்கள்

)( ரிசர்வ் வங்கி அல்லது அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வரிகளுக்கான பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது அதை தாமதப்படுத்துதல்

)( இந்திய அரசுப்பத்திரங்களை வெளியிடமறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றை பராமரிக்க மறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றிற்குரிய பணத்தைத் திருப்பித்தர மறுத்தல் அல்லது தாமதித்தல்

)( வாடிக்கையாளருக்கு உரிய அறிவிப்பின்றி அல்லது வலிந்து சேமிப்புக்கணக்கினைக் காரணமின்றி முடித்துக்கொள்ளுதல்

)( வங்கிக் கணக்குகளை முடிக்க மறுத்தல் அல்லது முடித்தலில் தாமதம்

)( நியாயமான பழக்கங்களுக்கான வங்கியின் நெறி முறைகளிலிருந்து பிறழுதல்

)( வங்கிச்சேவை மற்றும் இதர சேவைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களிலிருந்து பிறழும் எந்தவிதமான விஷயத்திற்காகவும் புகார் செய்யலாம்

9. குடியிருப்பாளரல்லாத இந்தியரின் புகார்களை குறைதீர்ப்பாயம் கவனிக்குமா ?
ஆம். இந்தியாவில் கணக்கு வைத்துள்ள குடியிருப்பாளரல்லாத இந்தியரின் கணக்கு குறித்து வெளிநாட்டிலிருந்து வரும் பணம், சேமிப்புக்கணக்கு, மற்றும் வங்கி சார்ந்த விஷயங்கள் குறித்த புகார்களை கவனிக்கும்.



C. வங்கிகள் குறைதீர்ப்பாளரிடம் விண்ணப்பித்தல்

10. எப்போது புகார்தாரர் புகாரினை அளிக்கலாம் ?
குறிப்பிட்ட வங்கி, புகார்தாரரின் முறையீட்டைப்பெற்றுக் கொண்ட ஒருமாதத்திற்குள் பதில் தராவிட்டாலோ, புகாரை வாங்க மறுத்தாலோ, திருப்திகரமாக பதிலளிக்காவிட்டாலோ, குறைதீர்ப்பாணையத்திடம் தமது புகாரை வாடிக்கையாளர் சமர்ப்பிக்கலாம்.

11. வங்கிகள் குறைதீர்ப்பாணையத்தில் புகார் அளிப்பதற்கு முன் புகார் அளிப்பவர் ஏதாவது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமா ?
குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளிப்பதற்கு முன்பாக, புகாரில் குறிப்பிடப்படும் வங்கியிடமிருந்தே நேரடியாக எழுத்துவடிவிலான வேண்டுகோள் மூலம் முயற்சித்து ஒரு திருப்திகரமான தீர்வினைப் பெற முதலில் முயல்வது அவசியம் – ஆயினும் புகாருக்குரிய நிகழ்விற்கு ஒருவருடத்திற்குள்ளாக அந்தப்புகார் அளிக்கப்பட வேண்டும்.

12. குறைதீர்ப்பாணையம் ஒன்றில் முந்தைய நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட்ட அதே விபரம் குறித்த புகாரினை மீண்டும் குறைதீர்ப்பணையத்திடம் அளிக்கலாமா ?
கூடாது. ஒரே விபரங்குறித்து முன்பே அளிக்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து அதே விபரத்திற்காக குறை தீர்ப்பாணையத்திடம் விண்ணப்பம் அளிக்கக்கூடாது.

13. நடுவர்மன்றம், தீர்ப்புமன்றம், சட்டஉரிமையுள்ள நீதிமன்றம் அல்லது பிற அவைகள் இவற்றால் தீர்ப்பளிக்கப்பட்ட அல்லது தீர்ப்பு நிலுவையிலிருக்கும் விஷயங்குறித்து வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் தரலாமா ?
கூடாது.

14. வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளிப்பதற்காக ஏதேனும் செயல்முறை உண்டா ?
ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வங்கிக் குறை தீர்ப்பாணையத்திடம் புகார் தரலாம். கணிணி மூலம் www.bankingombudsman.rbi.org.in. இணையதளத்திற்குரிய முகவரிக்கு மின் அஞ்சல் மூலமும் புகார் தரலாம். எல்லா வங்கிக்கிளைகளிலும் கிடைக்கும் மாதிரிப்படிவங்கள் மூலமும் புகார் அளிக்கலாம். ஆயினும் படிவத்தை உபயோகிப்பது கட்டாயமில்லை. எதுவாயினும் புகார்தாரர் தேவையான அனைத்துத் தகவலையும் அளிக்க வேண்டும்.

15. புகார்தாரரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி புகாரை அளிக்கலாமா?
ஆம். வக்கீலாக இல்லாத அங்கீகரிக்கப்பட்ட புகார்தாரரின் பிரதிநிதி புகாரை அளிக்கலாம். (ஏன் வக்கீலாக இருக்கக்கூடாது. வங்கிகள் செய்யும் தில்லுமுல்லுகளை வக்கீல் கேள்விகேட்பார் என்பதற்காகவா?)

16. வங்கிக் குறைதீர்ப்பாயம் முன்பாக புகார் பதிவு செய்ய ஏதாவது செலவு உண்டா ?
இல்லை. குறைதீர்ப்பாயம் வாடிக்கையாளர் குறை தீர்க்க எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை.

17. விண்ணப்பத்தில் என்னென்ன விவரங்கள் அளிக்கப்படவேண்டும்?
புகார் அளிப்பவரின் பெயர், முகவரி, மற்றும் எந்த வங்கியின் மீது புகார் தரப்படுகிறதோ அந்த வங்கிக் கிளையின் பெயர் முகவரி, புகாருக்கு உள்ளாக்கிய உண்மை விவரங்கள், ஏதாவது ஆவணச்சான்றுகள் இருப்பின் அவையும், அந்நிகழ்வினால் ஏற்பட்ட நஷ்டத்தின் அளவு, மற்றும் தன்மை, குறைதீர்ப்பாணையத்திடமிருந்து எதிர்பார்க்கும் தீர்வு இவற்றோடு ஒரு உறுதிமொழியும் அளிக்கப்பட வேண்டும். மேற்கொண்டு செயல்படவேண்டிய சில நிபந்தனைகளை மேற்கொள்வேன் என்பதற்கான உறுதிமொழியே அதுவாகும். இவையனைத்தையும் குறைதீர்ப்பாணையத்திற்கு அளிக்கவேண்டும்.



D. குறைதீர்ப்பாணையத்தின் செயல் முறைகள்

18. குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளித்தபின் நடப்பது என்ன ?
சமரசம் அல்லது இடையிட்டு பேச்சுவார்த்தை இவற்றின் மூலம் புகார்தாரர் மற்றும் புகாரில் குறிப்பிடப்பட்ட வங்கிக்கு இடையே ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த வங்கிக் குறைதீர்ப்பாயம் முயல்கிறது.

19. வங்கியே தீர்வினைத்தர முன்வந்தால் என்ன நடக்கும் ?
புகார்தாரதின் புகாரை முழுவதுமாகக் முடிவாகக் தீர்க்கும் வகையில் வங்கி அளிக்கும் தீர்வு இருக்குமாயின் அவை புகார்தாரர் ஒத்துக்கொள்ளும் வகையிலும் அமைந்திட்டால் குறைதீர்ப்பாயம் அதனடிப்படையில் தீர்வினை வழங்கும். அது இருவரையும் (புகார்தார், வங்கி) கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

20. உடன் படிக்கையால் புகார் தீர்க்கப்படாவிட்டால் என்ன செய்வது?
ஒருமாதத்திற்குள் புகாரானது உடன்படிக்கையால் தீர்க்கப்படாவிட்டால், குறைதீர்ப்பாயம் தனது தீர்ப்பினை வழங்க முனையும். அவ்வாறு தீர்ப்பினை வழங்கும் முன்பாக, புகார்தாரருக்கும், வங்கிக்கும் தனது வாதத்தை முன்வைக்க குறைதீர்ப்பாயம் வாய்ப்பு அளிக்கும்.

21. ஒரு தீர்ப்பினை வழங்க குறைதீர்ப்பாயம் எவற்றையெல்லம் கவனிக்கும் ?
தீர்ப்பினை வழங்கும் முன் ஆவணச்சான்றுகளை சாட்சிக்காக அளித்திருப்பின் அவற்றை குறைதீர்ப்பாயம் பரிசீலிக்கும். அவற்றோடு, வங்கிவிதி மற்றும் நடைமுறைச்சட்டத்தின் கோட்பாடுகள், ரிசர்வ் வங்கி வெளியிட்ட கட்டளைகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் இதர காரணிகள் என்று நிதியின்பாற்பட்டு கவனிக்கப்பட வேண்டியவை அனைத்தையும் தீர்ப்பாயம் கவனித்து தீர்ப்பினை வழங்கும்.



E. குறைதீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பு

22. வங்கிகள் குறைதீர்ப்பாயம் தீர்ப்பளித்தபின் நிகழ்வது என்ன ?
தீர்ப்பு வழங்கப்பட்டதும் புகார்தாரருக்கும், புகாரில் குறைப்பிட்ட வங்கிக்கும் தீர்ப்பின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படும். புகார்தாரர் முழு முடிவானதாக அந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது மறுக்கலாம்.

23. தீர்ப்பு ஏற்புடையதாயின் புகார்தாரர் என்ன செய்ய வேண்டும் ?
தீர்ப்பினைப் பெற்றுக்கொண்ட 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட வங்கிக்கு, அந்த தீர்ப்பினை முழு முடிவாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, ஒரு ஒப்புதல் கடிதத்தை புகார்தாரர் அனுப்ப வேண்டும்.

24. புகார்தாரர் தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை அனுப்புவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்கமுடியுமா ?
முடியும். இவ்வாறு கூடுதலாக கால அவகாசம் கேட்பதற்கான உரிய காரணங்களோடு, புகார்தாரர் ஒரு வேண்டுகோள் கடிதத்தை வங்கிக் குறைதீர்ப்பாணையத்திற்கு அனுப்பலாம்.

25. தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை அனுப்ப புகார்தாரர் கூடுதலாகக் கால அவகாசம் கேட்கும் போது, வங்கிக் குறைதீர்ப்பாயம் என்ன செய்யும் ?
புகார்தாரர் இத்தகைய வேண்டுகோள் விடுக்கும் போது அதில் குறிப்பிட்ட காரணங்கள் திருப்தியளிப்பதாக இருந்தால், வங்கிகள் குறைதீர்ப்பாயம் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் இதற்காக அளிக்கலாம்.

26. முழு முடிவாகத்தீர்ப்பினை ஏற்றுக்கொண்டதன் ஒப்புதல் கடிதத்தை புகார்தாரர் வங்கிக்கு அனுப்பியபின் என்ன நிகழ்கிறது ?
புகார்தாரரிடமிருந்து தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றுக்கொண்ட ஒரு மாதத்திற்குள் வங்கிக்கும் அது திருப்தியளித்தால் வங்கி அதனைச்செயல்படுத்திட வேண்டும். அவ்வாறு செயல்படுத்தியதை வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

27. வங்கிக் குறைதீர்ப்பாணையம் வழங்கிய தீர்ப்பு புகார்தாரருக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் மேல்முறையீடு செய்ய ஏதாவது வழி உண்டா?
தீர்ப்பு ஏற்புடையதாக இல்லையெனில், புகார்தாரர் அதனை எதிர்த்து மேல்முறையீட்டு அதிகாரியை அணுகலாம்.

28. தீர்ப்பினைப் புகார்தாரர் ஏற்க மறுக்கும் பட்சத்தில், நடைமுறையிலிருக்கும் சட்டத்தின்படி, அவைகள், நீதிமன்றம் அல்லது ஏதாவதொரு சட்டபூர்வ நிர்வாகத்தின் முன்பாக தனது புகாரைத் தீர்த்துக்கொள்ளும் அவரது உரிமை பாதிக்கப்படுமா ?
சட்டப்படி புகார்தாரர் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும், அது பாதிக்காது.

29. தீர்ப்பு வங்கிக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் என்ன் நிகழும் ?
இந்த திட்டத்தின் கீழ் வங்கி தனது மேல் முறையீட்டை மேல்முறையீட்டு அதிகாரியின் முன் வைக்க வாய்ப்பளிக்கப்படும்.



F. தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு

30. மேல் முறையீடு ஏற்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?
மேல் முறையீட்டை ஏற்கும் அதிகாரம் பெற்றவர் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆவார்.

31. மேல் முறையீடு செய்ய ஏதாவது கால வரையறை உண்டா ?
குறைதீர்ப்பாணையத்தின் தீர்ப்பினால் திருப்தியடையாத இருதரப்பினரில் எவரேனும் தீர்ப்பினைப் பெற்றுக்கொண்ட 45 நாட்களுக்குள், மேல் முறையீட்டு அதிகாரி முன்பாக தனது மேல் முறையீட்டை செய்யவேண்டும. காலவரையறைக்குள் செய்ய இயலாமல் போனதற்கு சரியான காரணம் இருக்குமாயின், அது மேல்முறையீட்டு அதிகாரிக்கு திருப்தியளிக்குமாயின் அவர் மேலும் 30 நாட்கள் அவகாசம் அளிக்கலாம், வங்கிகள் மேல் முறையீடு செய்ய வேண்டுமாயின் அந்த வங்கியின் தலைவர், அவர் வராதபோது, நிர்வாக இயக்குநர் அல்லது செயல் இயக்குநர், அல்லது முக்கிய செயலாக்க அதிகாரி அல்லது அதே தகுதியிலுள்ள அதிகாரியின் முன் அனுமதி பெற்ற பின்னரே மேல்முறையீடு செய்ய வேண்டும்.

32. மேல் முறையீடு அதிகாரி மேல்முறையீட்டை எப்படிக் கையாளுகிறார் ?
மேல் முறையீடு அதிகாரி.
(i) அதைத் தள்ளுபடி செய்யலாம்
(ii) அதை அனுமதித்து, குறைதீர்ப்பாணையத்தின் தீர்ப்பினைத் தள்ளி வைக்கலாம்.
(iii) மேல் முறையீட்டு அதிகாரி தேவை அல்லது சரியென்று கருதும் கட்டளைகளோடு தீர்ப்பினைப் புதிதாக அளிக்கும்படி அந்த விஷயத்தை மீண்டும் குறைதீர்ப்பாணையத்திற்கே அனுப்பி வைக்கலாம்.
(iv) தீர்ப்பினை மாற்றியமைத்து, அதற்குத்தேவையான கட்டளைகளோடு மாற்றப்பட்ட தீர்ப்பினை அளிக்கலாம்.
(v) எது சரியெனக் கருதுகிறதோ, அதன்படி வேறு ஆணை வழங்கலாம்.


G. மற்றவைகள்

33. எந்த நிலையிலாவது, குறைதீர்ப்பணையம் புகாரைத் தள்ளுபடி செய்ய இயலுமா ?
ஆம். எந்த நிலையிலும் புகாரை, வங்கிக் குறை தீர்ப்பாணையம் கீழ்க்கண்ட வகையிலானது என்று கருதினால் தள்ளுபடி செய்யலாம்.
1. போதிய காரணமில்லாமல் அலைக்கழிக்கும் விதமாக, முக்கியமில்லாத அல்லது தீய நோக்கோடு புகார் இருந்தால்.
2. புகார்தாரர் போதிய கவனத்தோடு அதில் செயல்படவில்லை எனத்தெரிய வந்தால்
3. புகார்தாருக்கு நஷ்டமோ, சிக்கலோ அல்லது தொந்தரவோ அதனால் ஏற்படவில்லையென வங்கிக் குறைதீர்ப்பாயம் கருதினால்.
4. வங்கிக் குறைதீர்ப்பாணையத்தின் பணம் சார்ந்த வரையறை எல்லைக்குள் இல்லாமலிருந்தால்.
5. வங்கிக் குறைதீர்ப்பாணையத்தின் கருத்தின்படி, புகாரின் சிக்கலான நிலை கருதி, விரிவான ஆவண சோதனை, மற்றும் நேரடி சாட்சிகள் போன்ற குறைதீர்ப்பாணையத்தின் செயல் முறைகளுக்கு ஒவ்வாதவை தீர்ப்பளிப்பதற்குத்தேவைப்பட்டால்.

34. குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 அமலாக்கத்திற்கு முன், நிலுவையிலுள்ள புகார்கள் எந்த திட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும்?
நிலுவையிலுள்ள புகார்களின் தீர்ப்பு மற்றும் முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டவற்றின் நிறைவேற்றம் ஆகியவை தொடர்ந்து வங்கிகள் குறைதீர்ப்புத்திட்டம் 1995, 2002 படி செயல்படுத்தப்படும்.

35. இந்த திட்டத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன ?
வங்கி வாடிக்கையாளரின் புகார்களுக்கு விரைவான தீர்வுகாணும் ஒரு முறைமையாக, ரிசர்வ் வங்கி, வங்கிக் குறைதீர்ப்புத்திட்டத்தை வடிவமைத்துத் தந்துள்ளது. அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல வகையான வங்கிச்சேவை குறித்த வாடிக்கையாளர் புகார்களைத் தீர்த்திட நிறுவன மற்றும் சட்டரீதியான அமைப்பினை அமைத்துத் தந்துள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949, சட்டப்பிரிவு 35-A கீழ் வெளியிடப்பட்ட கட்டளையின் வாயிலாக இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதனின் மேம்பட்ட செயல்திறனுக்கான, ரிசர்வ் வங்கி தன்னிடம் பணி புரியும் உயர் அதிகாரிகளை குறைதீர்ப்பாளராக நியமித்து தீர்ப்பாணய பணியாளர்களையும் நியமித்து அவ்வலுவலகச் செலவையும் ஏற்கிறது.

36. வங்கிக் குறைதீர்ப்பாணையத் திட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது ?
முதலில் இத்திட்டம் 1995ல் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்ன்ர் 2002ல் திருத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், 36,000 புகார்களை வங்கிகள் குறைதீர்ப்பாயம் கையாண்டுள்ளது. (இவற்றில் எத்தனை புகார் கொடுத்த வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்துள்ளனர்?)

நன்றி: இந்திய ரிசர்வ் வங்கி

வலைவிரிக்கும் வங்கிகள்...இரையாகும் மக்கள்....!

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மனோகரன் ஒரு தனியார் நிறுவனத்தில் டர்னராக வேலை செய்கிறார். சுமார் 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் அவருக்கு மனைவியும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மகன் மற்றும் மகளும் உள்ளனர். குறைந்த ஊதியத்தில் பற்றாக்குறை வாழ்க்கை நடத்தினாலும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.

அப்போது அவரது நிறுவனத்தில் அனைத்துப்பணியாளர்களும் முகவரிக்கான சான்று ஒன்றும், புகைப்படம் ஒன்றும் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மனோகரனும் அவற்றை கொண்டு சென்றபோது அதைப்பெற்றுக்கொண்ட ICICI வங்கி அதிகாரிகள் விண்ணப்பம் ஒன்றை நிரப்பி கையெழுத்து பெற்றுக்கொண்டு ஏடிஎம் கார்டு ஒன்றையும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் மற்றும் நோட்டிஸ்களை கொடுத்தனர்.

மேலும் அடுத்த மாதத்தில் இருந்து சம்பளத்தை பெற்றுக்கொள்ள அலுவலகத்தில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. எந்த நேரமும் ஏடிஎம்-மில் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

முதல் மாதம் ஏடிஎம்-மில் பணம் எடுக்கும்போது மனோகரனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் தான் நகரவாசியாக முழு தகுதி பெற்றதாகவும்கூட தோன்றியது. அப்போது கழுத்தில் டை கட்டிய ஒரு இளைஞர் அவரிடம் வந்து, “சார்! கிரெடிட் கார்டு எதுவும் பயன்படுத்தறீங்களா?” என்று கேட்டபோது அவருக்கு எதுவும் புரியவில்லை என்பதே உண்மை. ஆனால் அந்த இளைஞனே கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை தெரிவித்ததுடன், கிரெடிட் கார்டுக்கு கட்டணம் எதுவும் தேவையில்லை என்றும் கூறினான்.

ஏடிஎம் கார்டை பெற்று புளகாங்கிதம் அடைந்திருந்த மனோகரன் கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்திலும் கையெழுத்துப் போட்டார்.

கிரெடிட் கார்டு வந்து சேர்ந்தது. அதைக்கொண்டு 15 ஆயிரம் ரூபாய்வரை பயன்படுத்தலாம் என்பதை புரி்ந்து கொண்ட மனோகரன், முதலில் வீட்டிற்கு நீண்ட நாட்களாக வாங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த குக்கர் ஒன்றினை வாங்கினார்.

முதல் மாத பில் மூவாயிரத்து சொச்சத்துக்கு வந்தது. அதிலும் சுமார் 200 ரூபாய்கள் கட்டினால் போதும் என்றும் கூறப்பட்டிருந்தது. அடுத்த மாதம் மேலும் சுமார் 5 ஆயிரம் ரூபாய்களுக்கு பொருட்களை வாங்கினார். ஒரு முறை அவசரத்தேவை என்பதற்காக கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்-இலிருந்து 100 ரூபாய் எடுத்தார், அதற்கான ஏடிஎம் கட்டணம் மட்டுமே 200 ரூபாய் என்பதை அறியாமல்.

இடையே சம்பளப்பணமான 6 ஆயிரம் ரூபாய் குடும்ப செலவுக்கே போதாத நிலையில் கிரெடிட் கார்டுக்கான கடன் தவணையை கட்டத்தவறினார். அதற்கான காலக்கடப்பு கட்டணம் சில மாதங்கள் கூடியதில் அவரது கடன் எல்லைத்தொகையை விட அவரது கடன் தொகை அதிகரித்தது. இப்போது அவரது கடன் தொகை சுமார் 40 ஆயிரம் ரூபாய்.

மாதம்தோறும் காலக்கடப்பு அபராதம், கடன் எல்லையை மீறியதற்கான அபராதம், எலக்ட்ரானிக் கிளியரிங் செக் திரும்பியதற்கான அபராதம், கடன் தொகைக்கான வட்டி போன்றவை சுமார் 2 ஆயிரம் ரூபாய் அவரது கணக்கில் ஏற்றப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக அவரது சம்பளப்பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. கிரெடிட் கார்டு பாக்கிக்காக அவரது சம்பள பணத்தை ICICI வங்கி முடக்கி வைத்துள்ளது.

கிரெடிட் கார்டு மூலம் சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவழித்த மனோகரன் இதுவரை பலவழிகளில் 25 ஆயிரம் ரூபாய் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் அவரது கணக்கில் இன்னும் 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று வங்கி பில் அனுப்புகிறது. மேலும் மாத சம்பளத்தையும் ஸ்வாஹா செய்கிறது. இதற்கு என்ன தீர்வு? யாரிடம் போனால் தீர்வு கிடைக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

மாதசம்பளத்தை பணமாக கொடுக்கச் சொன்னால் நிர்வாகத் தரப்பில் முடியாது என்று கூறுகின்றனர். கடந்த மூன்று மாதமாக வாழ்க்கை நரகமாகி விட்டது. சம்பளத்தையும் இழந்து விடுவதால் பட்டினி என்பது சகஜமாகி வருகிறது.

இந்த வேலை தவிர வேறு தெரியாத மனோகரனுக்கான தொழில் வாய்ப்புகளும் மிகவும் குறைவே. எனவே இந்த வேலையை செய்தாலும் சம்பளம் கிடைக்காது . செய்யாவிட்டாலும் வேறு வழியில்லை.

மனோகரனுக்கு வழிகாட்ட நீங்கள் யாராவது தயாராக இருக்கிறீர்களா?
(பின்குறிப்பு: இது கற்பனை கதை இல்லை)

கொடுக்கப்படாத கிரெடிட் கார்டுக்கு வழக்கு தொடுக்கும் ICICI வங்கி.

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த திரு. சுகுமார் ஒரு M.TECH பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கும் ICICI வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்நிலையில் இவருக்கு கடந்த ஜனவரி மாதத்தில் ICICI வங்கியில் இருந்து கிரெடிட் கார்டுக்கான பாக்கித்தொகை ரூபாய் 36 ஆயிரத்தை கட்டச்சொல்லி ஒரு பில் வந்துள்ளது.


முகவரிப்பகுதியில் பெயர் சுகுமார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இனிஷியலிலும், பெயரின் ஸ்பெல்லிங்கிலும் சில மாறுபாடுகள் இருந்தன. எனவே வேறு யாருக்கோ போகவேண்டிய பில் தனக்கு வந்திருக்கலாம் என்று எண்ணிய திரு. சுகுமார், இது குறித்து அந்த வங்கியின் அண்ணா சாலை கிளைக்கு நேரில் சென்று புகார் செய்துள்ளார்.


அவரை மடக்கி, மடக்கி கேள்வி கேட்ட வங்கி அதிகாரிகள், அவருக்கு எந்த தகவலையும் கூறாமல் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்குள் அவர் பாக்கித்தொகை செலுத்தாதற்காக அவர் மீது தமிழ்நாடு சட்டப்பணி ஆணையத்தி்ல் புகார் செய்யப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நாளில் அவர் அங்கு ஆஜராக வேண்டும் என்றும் மற்றொரு கடிதம் வந்தது.


இதைக்கண்ட திரு. சுகுமார், தாம் கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பம் செய்யவில்லை எனறும், தமக்கு ICICI வங்கி கிரெடிட் கார்டு எதையும் வழங்கவில்லை என்றும், எனவே வழங்காத கிரெடிட் கார்டுக்கு வசூல் செய்ய முற்படும் ICICI வங்கியிடம் இருந்து தமக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரி ஒரு விண்ணப்பத்துடன் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையத்துக்கு சென்றார்.


அன்றைய தினத்தில் ICICI வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி நொந்துபோயிருந்த பலரும் அங்கு இருந்தனர். அவர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரின் தலைமையில் வழக்கறிஞர் ஒருவரும், சமூகப்பணியாளர் என்ற பெயரில் ஒருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் வங்கி அதிகாரி ஒருவரும், வங்கியின் வழக்கறிஞர் ஒருவரும் கூட இருந்தனர்.


கிரெடிட் கார்டு வணிகம் செய்யும் வங்கிகள் அனைத்தும் நுகர்வோர் குறைதீர் அமைப்பு ஏற்படு்த்தவேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதியை புறக்கணிக்கும் வங்கியும், அதைப்பற்றி கண்டுகொள்ளாத நீதித்துறையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்வதில் மட்டும் குறியாக இருப்பதை உணர முடிந்தது.


திரு. சுகுமாரின் பெயர் அழைக்கப்பட்டபோது, அவர் தாம் கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பிக்கவே இல்லை. எனவே தமக்கு பில் அனுப்பியதே தவறு. தற்போது சட்டப்பணிகள் ஆணையம்வரை வரவழைத்ததற்காக தமக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.
நஷ்டஈடு குறித்து பேசாத வங்கியின் வழக்கறிஞர், திரு. சுகுமாருக்கு உதவி செய்யத்தயாராக இருப்பதாகவும், அவரை இந்த விவகாரத்தில் இருந்து கழற்றி விடுவதாகவும் உறுதி அளித்தார். ஆனால் திரு. சுகுமார், தமக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கவே அந்த வழக்கறிஞர் பதில் அளிக்கவில்லை.

அமர்வுக்கு தலைமை தாங்கிய ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதியோ, மற்ற உறுப்பினர்களோ திரு. சுகுமாரின் நஷ்டஈடு கோரும் மனுவை பெறுவதற்குக்கூட முன்வரவில்லை. எனவே அந்த மனு சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் அலுவலகத்தில் புகாராக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இது போன்ற பிரசினைகளில் சிக்கியுள்ள நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டால் பொதுநலன் வழக்கு மூலம் இது போன்ற பிரசினைகளை தடுக்க முயற்சி மேற்கொள்ள முடியும்.