மக்களின் உயிரோடு விளையாடும் ஊடகங்கள்!

நவீன யுகத்தில் மருத்துவச்சேவையின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை இந்த உலகில் உள்ள அனைவருமே அறிவர்.

மக்களாட்சி முறையின் நான்காவது தூண் என்று கருதப்படும் மீடியாத்துறை இந்த மருத்துவச்சேவையை எவ்வாறு பார்க்கிறது என்று பரிசீலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மருந்து நிறுவனங்களின் கட்டு்ப்பாட்டில் உள்ள மருத்துவத்துறையின் மக்கள் விரோதப்போக்கை எந்த மீடியாவும் கண்டு கொள்வதில்லை. காரணம் மருந்து நிறுவனங்களின் இந்த ஆதிக்கம் அரசு அமைப்புகளை மட்டுமல்லாமல் மீடியாத்துறையையும் கட்டுக்குள் வைத்திருப்பதுதான்.

மருத்துவத்துறையில் அவ்வப்போது நடைபெறும் சில அவலங்களை பரபரப்பான செய்திகளாக விற்று காசு சம்பாதிக்கும் மீடியா, அந்த அவலங்களுக்கான காரணங்களையோ, தீர்வுகளையோ ஆராய்வதில்லை.

இது மட்டுமல்லாமல் பல அவலங்களுக்கு இந்த மீடியாவே நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகிறது.

குறிப்பாக தமிழில் பல சிறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மருத்துவ நிகழ்ச்சிகளை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்பது அதை நடத்துபவர்களுக்கும் தெரியும்,ஒலி-ஒளி பரப்புபவர்களுக்கும் தெரியும். ஆனால் அரசு அமைப்புகளுக்கு மட்டும் இந்த சட்டவிரோத நிகழ்ச்சிகள் குறித்து தெரியாது. அல்லது தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.


தொலைக்காட்சி ஊடகம் மட்டுமே இவ்வாறான முறையற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூற முடியாது. இயன்றவரை அனைத்து ஊடகங்களும் இத்தகைய மக்கள் விரோத சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.


சில உதாரணங்களைப் பார்க்கலாம்.


தமிழ் பத்திரிகைகளில் இந்தியா டுடே புத்திசாலி வாசகர்களின் இதழாகப் பார்க்கப்படுகிறது. இந்த இதழில் தொடர்ந்து பலகாலமாக வெளிவரும் விளம்பரம் ஒன்று, மாற்று மருத்துவ டாக்டர் படிப்பு என்ற பெயரில் BASM, MD with RMP படிப்புகளை வழங்குவதாக கூறுகிறது. மேலும் தொலைதூரக் கல்வியில் வழங்கப்படும் இந்த படிப்பு இந்தியன் போர்ட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான தகுதி என்றும் அந்த விளம்பரம் கூறுகிறது.

நாம் அறிந்தவரை இந்தியன் போர்ட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின் என்ற அமைப்பு ஒன்று இருப்பதாகவோ, அது அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. இந்த படிப்பை இந்திய மெடிக்கல் கவுன்சில் அங்கீகரிக்க வில்லை. எனவே இது சட்டத்திற்கு எதிரான செயலே.


ஆனால் இதுபற்றி எந்த கவலையுமின்றி, விளம்பரம் மூலம் வரும் வருவாய் மட்டுமே குறியாக இந்தியா டுடே செயல்படுவதாக தோன்றுகிறது.


அதேபோல தினமணியிலும்கூட அதன் ஞாயிறு இணைப்பான தினமணிக் கதிரிலும், நாள்பட்ட நோய்களை உத்தரவாதமாக தீர்ப்பதாக சவால்விடும் விளம்பரங்கள் வாரம்தோறும் வெளியாகி வருகின்றன. இதே பக்கங்களில் நோயை தீர்க்க எண் கணிதம், அருள் வாக்கு ஆகியவற்றுக்குமான விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. அஞ்சல் வழி மருத்துவக்கல்விக்கான விளம்பரமும் உண்டு. இவையும் சட்டரீதியாக தவறான செயல்களே. இத்தகைய விளம்பரங்களை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் முறைப்படியான கல்வித்தகுதி பெற்றவர்கள் அல்லர்.


இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகைகள் ஒரு சாமானிய மனிதரின் விழிப்புணர்வோடுகூட செயல்படுவதில்லை. நேச்சுரோபதி, ஹோமியோபதி ஆகிய இரு மருத்துவ கல்லூரிகளை நடத்திவரும் ஒரு நிறுவனம் ஏழு தலைமுறையாக சித்தமருத்துவம் பார்த்து வருவதாக ஒரு விளம்பரத்தை "ஜூனியர் விகடன்" உட்பட பல பத்திரிகைளில் பார்த்திருக்கலாம். அதில் ஏழாவது தலைமுறை வைத்தியராக சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனின் புகைப்படமும் வெளியாகி இருக்கும். இந்த சிறுவன் யாருக்கு வைத்தியம் பார்க்கிறான்? இவனிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டவர்களின் நிலை என்ன? என்பது போன்ற கேள்விகள் எந்த பத்திரிகை நிறுவனத்துக்கும் எழவில்லை என்பது சோகம் ததும்பும் நகைச்சுவையாகும்.


மக்கள் இதுபோன்ற போலி மருத்துவர்களை நாடிச்செல்வதற்கு முக்கிய காரணம் நவீன மருத்துவம் என்பது மக்களை கொள்ளை அடிக்கும் செயலாக மாறிப்போனதே. அதற்கு சற்றும் குறைவி்ல்லாத விதத்தில் பத்திரிகைகளும் இத்தகைய போலிகளுக்கு விளம்பரம் செய்வதன் மூலம் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.


வாழ்க பத்திரிகை சுதந்திரம்!



-பி. சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)


வி.ஜி.பி. தங்கக் கடற்கரையிலிருந்து பாலியல் தொழிலாளிகள் மீட்பு.

கடந்த ஆகஸ்ட் 7, வியாழன் அன்று சென்னை, விபச்சார தடுப்பு காவல்துறையினருக்கு சிட்லபாக்கத்தை சேர்ந்த பூங்கா வெங்கடேசன் என்பவர் அண்டை மாநிலங்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் நீலாங்கரை பகுதியில் ஒரு மாருதி 800 வாகனத்தை சோதனை செய்ததில் பாலியல் தொழிலாளிகளான இரண்டு பெண்களும், திருப்பதி – சொர்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மணி என்ற குமார் மற்றும் கேரள மாநிலம் முன்னாரைச் சேர்ந்த ஜோஸப் ஆகிய இரண்டு பாலியல் தரகர்களும் சிக்கினர்.

இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அப்பெண்கள் இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகவும், மேலும் இரண்டு பெண்கள் விஜிபி தங்கக் கடற்கரை உள்ளே உள்ள விடுதி ஒன்றில் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்களையும் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். பாலியல் தரகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பூங்கா வெங்கடேசன் கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் கோலோச்சி வருவதாக விசாரணையில் தெரிய வருகிறது. ஆந்திராவிற்கு பாதுகாப்பாக தப்பி சென்றுள்ள பூங்கா வெங்கடேசனை காவல்துறையினர் "வலைவீசி" தேடி வருகின்றனர்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

நாம் அறிந்தவரை இந்தச் செய்தி வேறு எந்த செய்தி தாளிலும், இதழிலும் முழுமையாக வெளியாகவில்லை. வெளியான சில இதழ்களிலும் வி.ஜி.பி. நிறுவனத்தின் பெயருக்கு பதிலாக ஒரு தனியார் விடுதி என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் பாலியல் தொழிலாளிகளின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்ற நீதிமன்ற கண்டிப்பு காரணமாக இந்த செய்தியை செய்தித்துறையினர் முழுமையாகவோ, பகுதியாகவோ புறக்கணித்திருக்கலாம் என்று பலரும் நினைக்கலாம்.

ஆனால், அந்தப் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம்தான், பல செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை புறக்கணிக்க காரணமாக இருக்கிறது என்பதே உண்மை. வி.ஜி.பி. நிறுவனம் என்பது உழைப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. "உழைத்தால் உயரலாம்" என்ற மந்திர ஸ்லோகத்தை நடைமுறையில் நிரூபித்த-நிரூபிக்கும் நிறுவனமாக அந்த நிறுவனம் மீடியா உலகத்தால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதை மேலும் காப்பாற்றும் விதமாக - உலக அமைதி ஆலயம், மேலாண்மை பயிற்சி மையம், மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை விஜிபி நிறுவனம் நடத்தி வருகிறது.

இத்தகைய பெருமைக்குரிய ஒரு நிறுவனத்தை பாலியல் தொழிலோடு தொடர்பு படுத்துவதில் நமது மீடியா முதலாளிகளுக்கு உள்ள சிக்கல்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை வெளியிடுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பாலியல் தொழில், மனித குல வரலாற்றில் வேட்டை மற்றும் உழவுக்கு அடுத்து மிகவும் புராதனமான தொழிலாக கருதப்படுகிறது. பல நாடுகளில் பாலியல் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களின் சில பகுதிகளில் பாலியல் தொழில் சட்டரீதியாகவே அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

பாலியல் தொழிலை கட்டுப்படுத்தும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மிகப்பரவலாக விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பாலியல் தொழில் குறித்த விவாதங்களை சற்று தள்ளிவைத்துவிட்டு பார்த்தால், தொழிலதிபர்கள் குறித்து சமூகத்தில் கட்டமைக்கப்படும் பிம்பங்களே விவாதத்துக்கு உரிய அம்சமாகின்றது.

வி.ஜி.பி நிறுவனத்தினர் கடும் உழைப்புக்கு மட்டுமன்றி தமிழுக்கும் பெரும் தொண்டு செய்வதாக கூறப்படுகிறது. தமிழ்க் கவிஞர்களை விமானத்திலும், கப்பலிலும் ஏற்றி ஆழ்கடலின் மேல் மிதந்து கொண்டும், விண்வெளியில் பறந்து கொண்டும் கவியரங்கம் நடத்தி தமிழ் வளர்க்கும் கோமான்களாக இவர்கள் போற்றப்படுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக அளவில் கவிதைகளை எழுதும் திறன் படைத்த கவிச்சக்கரவர்த்திகளாக உருவகப்படுத்தப் படுகின்றனர். மதங்கடந்த ஆன்மிகவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.

இத்தகைய முகமூடிகள் ஏதோ வி.ஜி.பி. நிறுவனத்துக்கு மட்டுமே அணிவிக்கப்படுவதில்லை. ஏறத்தாழ அனைத்து வணிக உலக பெரும்புள்ளிகளுக்கும் இத்தகைய முகமூடிகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த முகமூடிகள்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகைகள் ஆகியவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல்களாக திகழ்கின்றனர். எனவே இவர்களை பகைத்துக் கொள்வதை அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, பத்திரிகைகளோ விரும்புவதில்லை. எனவே இந்த முகமூடி மனிதர்களின் தவறுகள் அனைத்தும் மூடிமறைக்கப் படுகின்றன. அது இயலாத இடங்களில் திசைதிருப்பப் படுகின்றன. அதன் பிரதிபலனாக முகமூடி மனிதர்களின் இன்பக் கொண்டாட்டங்களில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், செய்தி நிறுவன அதிபர்களுக்கும் பங்கும் கிடைக்கிறது.

இந்த முகமூடி மனிதர்களின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைகள் குறித்தோ, இந்த நிறுவனங்களின் சமூகக் கடமைகள் குறித்தோ, இந்த நிறுவன தயாரிப்பு மற்றும் சேவையை பயன்படுத்தும் நுகர்வோரின் உரிமைகள் குறித்தோ பத்திரிகைகள் வாய்திறப்பதில்லை. அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அவர்களுடைய பங்கை பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர்.


மேற்கூறப்பட்ட சம்பவத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

1. பாலியல் தொழில் செய்த பெண்கள் எத்தனை நாளாக வி.ஜி.பி. விடுதியி்ல் இருந்தனர்?
2. அவர்களை அங்கே தங்க வைத்தது யார்?
3. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரியவே தெரியாதா?
4. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரிந்தும் வைத்திருந்தார்கள் என்றால், அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது?
5. 15 வருடங்களாக பாலியல் தரகராக கோலோச்சிவரும் பூங்கா வெங்கடேசனின் வெற்றி ரகசியம் என்ன? அவருடைய தொழில் பங்குதாரர்கள் யார்?

கேள்விகளுக்கு முடிவே இல்லை.

மேலும் கேள்வி கேட்க விரும்பும், கேள்விகளுக்கான பதிலை அளிக்க விரும்பும் நண்பர்கள் பின்னூட்டங்களில் தொடரலாம்....!

-பி. சுந்தரராஜன்

தேர்வுத்துறை கவனக்குறைவால் நன்றாக படிக்கும் மாணவியின் விடைத்தாள் மாறியது !

பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்திருப்பது, விடைத்தாள் நகல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நன்றாக படிக்கும் மாணவியின் விடைத்தாள் மாறியதால் அவரது மதிப்பெண் குறைந்துபோனது.
விடைத்தாள் நகல்
பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக மாணவ-மாணவிகளுக்கு விடைத்தாள் நகல்கள் தரப்படுகின்றன. இதற்கு தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக தேர்வில் குறைவாக மதிப்பெண் பெறும் நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளும், பெயிலானவர்களும் விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிப்பார்கள்.
.
அதேபோல், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தபால் மூலம் விடைத்தாள் ஜெராக்ஸ் பிரதி அனுப்பப்பட்டது. கூட்டல் தவறு, விடைத்தாள் மாற்றம், சரியாக மார்க் வழங்காதது என ஏராளமான குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
.
குளறுபடி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி சுவிதா விலங்கியல் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்திருந்தார். நன்றாக படிக்கக்கூடிய இந்த மாணவிக்கு உயிரியல் பாடத்தில் வெறும் 80 மதிப்பெண்தான் வந்திருந்தது. ஆனால் அவரது உண்மையான மதிப்பெண் 143 என்பது நகல் மூலம் தெரிய வந்தது.
.
இதேபோல், இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி சிவசக்தி. ஆயிரத்திற்கு மேல் மார்க் வாங்கி எல்லா பாடங்களிலும் 170-க்கு மேல் வாங்கிய சிவசக்திக்கு உயிரியல் பாடத்தில் தேர்வில் வெறும் 30 மதிப்பெண்ணே (செய்முறைத்தேர்வு மார்க் தனி) கிடைத்தது. டாக்டர் ஆக வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்த இந்த மாணவிக்கு உயிரியல் தேர்வில் 30 மதிப்பெண் கிடைத்த அதிர்ச்சியில் உறைந்து போனார்.
.
விடைத்தாள் மாறியது
மகள் நல்ல மார்க் வாங்கி டாக்டர் ஆவார் என்று கனவு கொண்டிருந்த அவரது பெற்றோர் திட்டித் தீர்த்தனர். இருந்தாலும் நன்றாக தேர்வு எழுதி இருந்த நம்பிக்கையில் மாணவி சிவசக்தி விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தார்.
.
தபாலில் விடைத்தாள் நகலைப் பெற்றார். தபால் உறையை பிரித்துப் பார்த்த அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார். காரணம், அவரது தேர்வு எண்ணில் இருந்த விடைத்தாள் மதுரையில் தனித்தேர்வராக தேர்வு எழுதிய ஒரு மாணவரின் விடைத்தாள் ஆகும்.
.
சிவசக்தியின் மதிப்பெண் வேறு யாருக்கோ வழங்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் முறையிட்டார். தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்தபோது அந்த மாணவியின் விடைத்தாள் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையில் இருந்த அவரது விடைத்தாளை கண்டுபிடித்து சரிபார்த்தபோது, அவரது உண்மையான மதிப்பெண் 174 என்பது தெரிய வந்தது. தவறை ஒப்புக்கொண்ட தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் அந்த மாணவிக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
.
மன உளைச்சல்
இதேபோல் சென்னை மாணவர் ஒருவரின் கணித மதிப்பெண் 171 என்பதற்குப் பதிலாக தவறாக 117 என்று குறிப்பிடப்பட்டதும் தெரிய வந்தது. இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுபோன்று ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வுத்துறையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் நொந்து போய்விடுகிறார்கள். தவறே செய்யாமல் யாரோ செய்த தவறுக்காக தாங்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் பரிதாபமுடன் கூறினார்கள்.
.

நன்றி: தினத்தந்தி, 11-06-2008
.

விவகாரம் இத்தோடு முடியவில்லை. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலவரம்.
.

இதற்கான முழுமையான காரணம், தேவையான அளவில் பணியாட்கள் இல்லாததே. கடந்த பல வருடங்களாக அரசுத்துறையில் காலியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளது. மிகவும் அத்தியாவசியமான இடங்களில் தினக்கூலி அடிப்படையிலோ, ஒப்பந்த அடிப்படையிலோ மிகக்குறைந்த ஊதியத்திற்கு நிரந்தரம் அல்லாத பணியாளர்கள் நிரப்பப் படுகின்றனர்.
.

சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் கீழ்நிலை எழுத்தர்(Lower Division Clerk) , கணிப்பொறி இயக்குனர்(Computer Operator) போன்ற அனைத்து இடங்களுமே இத்தகைய தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவதாக தெரிகிறது. இவர்கள்தான் மாணவர்களின் விண்ணப்பங்கள், கட்டணங்கள், தேர்வு அனுமதி சீட்டுகள், மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை கையாளுகின்றனர்.
.

எந்தவிதமான வேலை உத்தரவாதமோ, மற்ற பணிப்பாதுகாப்பு அம்சங்களோ இல்லாமல் மேலதிகாரிகளின் அனுசரணையுடன் மட்டுமே பணியாற்றும் இவர்களிடம்தான் நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் கல்வி உள்ளது.
.

தனியார் நிறுவனங்களில் மனிதவள சுரண்டல் நடந்தால் அதை கண்காணிக்கும் அதிகாரம் படைத்த தொழிலாளர் நலச்சட்டங்களும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் இந்த கல்வி நிலையங்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
.

அரசுத்துறைகளின் இத்தகையப்போக்கு இந்த அமைப்புகளில் பணியாற்றும் மனிதவளத்தை மட்டும் சுரண்டவில்லை. இந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் சுரண்டப்படுகிறது.

-நுகர்வோர் நலன் குழு

மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்றப் பயிர்கள்!

நான் சந்தைக்குச் செல்லும்போது, பூச்சி துளைத்த கத்தரிக்காயைத்தான் வாங்குவேன். பூச்சி துளைத்துள்ளதால் அக்கத்தரியை நஞ்சு மருந்துகள் தெளிக்கப்படாதது என்றும், மரபணு மாற்றம் ஏற்படாதது என்றும் அறிய முடிகிறது. எனக்கு தேவையற்ற புழு நுழைந்த பகுதியை வெட்டி வீசிவிட முடியும். நச்சை மரபிலோ முதுகிலோ சுமந்திருந்தால் அதை நீக்க முடியாதவல்லவா?'' என்று சமீபத்தில் ஒரு உழவியல் பேராசியர் பேசியிருக்கிறார் (நன்றி: விழிப்புணர்வு, தினமணி கதிர்). சிந்திக்க வைக்கும் உண்மை!

வேளாண்மைக்குப் பெருத்த சவாலாக, விளைபொருளின் சந்ததியை சந்தைக்காகச் சிதைக்கும் மரபணு மாற்றப் பயிர்களைப் பற்றி தெந்து கொள்ள, அதன் அறிவியலை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எது மரபணு (Gene)?

ஒவ்வொரு உயிரிலும், அதன் குரோமோசோம்களில் மரபுத் தன்மையை (கறுப்பு மயிரா, கருப்பு கருவிழியா, பழுப்புத் தோலா, குட்டையா, நெட்டையா எனும் உண்மைகளைக்) கொண்டிருக்கும் DNA குழுமத்தை மரபணு என்கிறார்கள். A,D,C,G எனும் நான்கு வித புரதங்களால் double=helix முறையில் தொகுக்கப்பட்டிருக்கும் இப்புரதக் கூட்டுதான் நம் வாழ்வின் ‘அடிப்படை ஆதாரம்' என்றால் இன்றளவில் அது மிகையல்ல, நாயைக் கண்டால் மிரள்வதும், பெண்ணை கண்டால் வழிவதும், 4 வயதில் வரும் அம்மை, 40 வயதில் வரும் வயிற்றுப்புண், புற்று என நடக்கும் எல்லாவற்றிற்கும் இப்புரதக் கூட்டு காரணமாயிருக்கிறது.

அதே போல், ஒரு தாவரம் குட்டையாக வளர வேண்டுமா? மஞ்சள் பூ பூக்க வேண்டுமா? என அத்தனையும் அம்மரபணுவின் புரதப் புரோகிராம்கள் தான் நிர்ணயிக்கின்றன.

எவை மரபணு மாற்றப் பயிர்கள் (Genetically Modified Organism)?

காலை அகட்டி பாதங்களால் பற்றி, மரமேறி கொட்டைப்பாக்கு எடுக்க முடியாது. கைக்கெட்டும் தூரத்தில் பாக்கு விளைந்தால் என்ன? எப்பவும் அழுகாத பழங்கள், ‘சாலடு’க்கு வெட்ட ஏதுவான தடிப்புத் தோலுடன் தக்காளி, புழு துளைக்காத கத்தரி, பூச்சி அண்டாத பயிரினங்கள், வறட்சியிலும் வாடாத கிரானைட்' காய்கறிகள்'', என இந்த பூவுலகின் ‘தாதா' மனிதன் எதற்கும் மெனக்கெடாது இருக்க விளைபொருளில் நடக்கும் விஞ்ஞான விளையாட்டுதான் மரபணு மாற்றப் பயிர்கள். எப்படி?

உதாரணத்திற்கு, குதிரைபோல் ஓடும் நல்ல வேகமான திறனுடைய மகவு வேண்டுமெனில், பிறந்த குழந்தைக்கு தொடந்து பயிற்சி கொடுத்து பழக்க வேண்டியதில்லை. ஒரு குதிரையைப் புணர்ந்து, அதில் உருவாகும் கருவை உடைத்து, அதன் குரோமோசோமைச் சிதைத்து, அதன் DNA-ஐ வெட்டி எடுத்து தன் துணையின் கரு முட்டையில் நுழைத்து, பிள்ளையை பிரசவித்தால் அக்குழந்தை குதிரை போல் ஒடலாம். ஒலிம்பிக்கில் தங்கமும் வாங்கலாம்! என்ன? கொஞ்சம் வாய் நீளமாகவும், பின்பகுதியில் வாலும், கால் கைகளில் குளம்பும் இருக்கலாம்! அதனால் என்ன? குழந்தை குதிரை போல் ஓடும்! கற்பனை செய்யவே ‘பயங்கரமாக' உள்ளதல்லவா? இது தான் இந்த மரபணு மாற்ற பயிர்களின் உற்பத்தி தாரக மந்திரம்.

தனக்கு, தன் சந்தைக்கு வேண்டிய பயிரை உற்பத்தி செய்ய, பயிரின் மரபணுவை மாற்றம் செய்தோ, சிதைத்தோ அதே குடும்பப் பயிர் அல்லது வேறு உயிரின் (அது பாக்டீயாவோ, டைனசரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!) மரபணுவினை வெட்டி ஒட்டியோ, புதிய பயிரை உருவாக்குவது தான் இந்த மரபணு மாற்றப்பயிர்.

பயிர்பாதுகாப்பு, புழுக்களில் இருந்தும் வைரசுகளிலும் இருந்து பாதுகாப்பு, களைகளை மீறி பயிர் வளரும் தன்மை என்ற காரணங்களுக்காகவே இந்த வித்தை பயன்படுத்தப்படுவதாக, விஞ்ஞான மேதாவிக் கூட்டம், மான்சான்டோ தலைமையில் கூறிவந்தாலும், உட்காரணம் மற்றும் ஒரே காரணம் மொத்தமாய் உழவுச் சந்தையை அபகரிக்க நினைப்பது மட்டுமே. கூடுதலாய், சமீபத்திய உலகளாவிய உணவுப் பற்றாக்குறைக்கு ஒரே நிவாரணமாகவும் இவை உருப்பெற்று வருவது அவர்களது சமீபத்திய சாதனை.

‘இது ஒன்றும் புதிதல்ல' எனும் வாதமும் சில விளக்கங்களும்…

உங்கள் கொள்ளுத் தாத்தாவின் குணங்களைவிட உங்கள் உடல்நலத்தின் வளத்திலும் ஒரு சில நன்மைகளும், ஒரு சில தீமைகளும் பெற்றிருக்கக்கூடும். கடந்து வந்த சமூகச் சூழலுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் மரபு தகவமைத்துக் கொண்ட விளைவு அது. விதையுடன் இருந்த வாழைப்பழம் இப்போது விதையற்று இருப்பதும், பெரிய நெல்லிக்கனி போலிருந்த தக்காளி இப்போது இப்படி இருப்பதும் என்றோ, பாக்டீரியாவாய் இருந்த பச்சையம் (Chlorophills) இன்று தாவர பகுதியாய் மாறியதும் மரபணு மாற்றத்தால்தான். ஆனால் அவை நிகழ 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகள் வரை ஆனது. இயற்கையை சிதைக்காமல், பல்லுயிர் ஒம்பி படைக்கப்பட்ட சந்ததிகள் அவை. ஒரு சிம்பன்ஸி குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான். ஆனால், அது நிகழ 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளதாம்.

இப்படி நிகழும் இயற்கை மாற்றங்களை பல நூறுகோடி ரூபாய் கொண்டு உருவாக்கிய ஆய்வறையில் மரபணுவை வெட்டி ஒட்டி நிகழ்ந்த “DOLLY”க்களை உருவாக்குவதும் BT பருத்தி, BT அரிசி, BT சோளம் உருவாக்குவதும் எப்படி ஒன்றாகும்?
முன்னது கலப்பு திருமணம் என்றால் இந்த மரபணு மாற்றம் கற்பழிப்பு!

‘பேசிலஸ் துருஞ்சியேனம்' எனும் பாக்டீயாவின் மரபை கத்தரிக்காயின் மரபணுவுடன் ஒட்டி, பிறக்கும் (உருவாக்கும்) கத்தரி மரபில் அந்த பாக்டீயாவின் ஒட்டபட்ட மரபணு உருவாக்கும் Toxin இருப்பதால் புழு நுழையாது என்கின்றனர். “அந்த நஞ்சு நம்மைத் தாக்காதா?” என்றால், “அதிகம் சாத்தியமில்லை, வெகுசிலருக்கு லேசான அரிப்பு முதல் மரணம் வரை ஏற்படலாம்” என்கின்றனர் மிக அலட்சியமாக.

முதலில் இது தேவையா? என்ற கேள்விக்கு நிச்சயமாக “இல்லை'' என்பது அதைப் படைத்த “பிரம்மா''க்களுக்கும் தெரியும். அடுத்து பாதுகாப்பானதா? என்றால் உலக சுகாதார நிறுவனமே மழுப்புகிறது (http://www.who.int/foodsafety/publications/biotech/20questions/en/).

மரபணு மாற்றப் பயிர்கள் எப்படி மனித நலத்தை பாதிக்கும்?
ஒவ்வாமை (Allergenicity) மரபணு ஊடுருவல் (Gene Transfer) வெளிபரவுதல் (Out Crossing) என்று மூன்று முக்கிய பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன.

ஒவ்வாமை (Allergenicity)
மல்லிகையை நுகர்ந்தால் களிக்கும் நம் மனம், அம்மோனியாவை நுகரும் போது சுளிப்பதும், இன்னும் வீரிய நைட்ரஜன் வேதிப் பொருட்களை நுகரும் போது உடம்பெல்லாம் தடிப்பது, மூச்சிரைப்பது என நோயைத் தருவதைதான் ஒவ்வாமை என்கின்றனர். அது உடனடி நிகழ்வாய் (hypersensitivity) இருக்கலாம்; அல்லது நாட்படவும் நிகழலாம். உடனடியாய் நிகழும் போது, Urticaria (உடல் முழுதும் வரும் தடாலடியான அரிப்பும், தடிப்பும்) மூக்கடைப்பு மற்றும் இரைப்பு (sinusitis & asthma), குமட்டல், வயிறு பிரட்டல், வாந்தி, (Nausea vomitting) தடாலடியாக மரணம் (anaphaloxis shock) ஆகியன ஏற்படக் கூடும்.

நாட்பட நிகழ்வது Celiac disease, தோல் கரப்பான்கள், ஆஸ்துமா, மூட்டுவலிகள், auto-immune disorders என பல வகை நோய்களை உருவாக்கும். இன்னும் காரணம் கண்டறியப்படாத பல நோய்கட்கு, இந்த மாதிரி உடலுக்குள் நுழையும் நச்சுக்கள் காரணமாக இருக்கக் கூடும்.

மரபணு ஊடுருவல் (Gene Transfer)

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை உட்கொள்ளும் நபருக்கு, உட்சென்ற பயிரில் ஒட்டியிருக்கும் வேறு உயிரின் மரபணு குடலுக்குள் உள்ள நன்மை செய்யும் பாக்டீயாவிலோ, வைரஸிலோ அல்லது மொத்தமாய் அந்த மனிதனின் மரபணுக்குள் கலக்கும் / உறவாடும் சாத்தியம் உண்டு. அப்படி நடக்கையில், தவளை போல் குழந்தை பிறக்கவும், அல்லது பிறந்த குழந்தைக்கு கை கால்களில் காய் கனி காய்க்கவும் வாய்ப்புண்டு. அல்லது குடலினுள் தோன்றும் புதிய உயிர்கள் புதிய நோய்களை உருவாக்கவும் வாய்ப்புண்டு, திடீர் சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், ஏன் HIV குறித்தும் இது போன்ற ஐயங்கள் உண்டு.

வெளிபரவல் (Out Crossing)

இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் கண்ணாடி குடுகைக்குள் விளைவிக்கப்பட போவதில்லை, விளைநிலத்தில் பயிராகும் போது மகரந்த சேர்க்கையில். பக்கத்து நிலத்து மாசற்ற பயிருக்கும், மூலிகைக்கும் ஊறு விளைவித்து எது GMO? என்ற கேள்வி கேட்கும்படி மொத்தமாய் கலந்துவிடவும் வாய்ப்புண்டு.

பதிலளிக்கப்படாத பல கேள்விகள்

“மரபணு புரதம் வயிற்றுள் சென்றவுடன் சிதைந்துவிடும், பயப்படத் தேவையில்லை. சிலருக்கு வேண்டுமாணால் சங்கடம் ஏற்படலாம்'' என்கிறது மான்சான்டோ கூட்டம். ஆனால் அந்த “சிலர்'' இந்தியரோ அல்லது ஆப்பிரிக்கரோ அல்லது ஒடுக்கப்பட்ட இனமோ/நாடாக மட்டும் என இருப்பது ஏன்? மான்சாண்டோ நிறுவனம் உள்ள அமெரிக்க நாட்டின் விளைநிலத்தில் ஆய்வு நடத்த கூடாது. அதன் துணை குழுமங்கள் உள்ள ஐரோப்பிய கண்டத்தில் GMOக்கள் நுழைய கூடாது. நம் நாட்டில் மட்டும் குப்பனும் சுப்பனும் ''அந்த சிலராக'' சங்கடப்படவேண்டும் என்று சொல்வதுதான் Globalisation நியதியா ?

மரபணு புரதங்கள் ஒவ்வாமை தராது என்று இன்னும் முழுமையாக ஒரு ஆய்வும் வரவில்லை.

அந்த புரதங்களை தெளிவாக அளவிடும் அளவுகோள்கள், எவை ஒவ்வாமை புரதங்கள் என அளவிட முடியவில்லை.

தற்போதுள்ள சோதனைகளின் தரம் (Standard) அதன் வரைஎல்லை (Limitation) பற்றி தெளிவான கருதுகோள்களோ ஆய்வுகளோ இல்லை.

எலிகளிலும் குரங்குகளிலும் GMO உணவுகளில் சோதனை நடத்துகின்றனர். அதன் முடிவுகள் மனிதர்களில் அப்படியே பிரதிபலிக்கும் என்று எவ்வித உண்மையும் கிடையாது. மொத்தத்தில் மரபணு மாற்றப் பயிர்கள் புதிய நோய்களைத் தோற்றுவிக்கவும், அதற்கான மருத்துவச்சந்தைக்கு வழிகாணவும், உழவையும் அதன் கலாச்சாரத்தை சிதைக்கவும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வேளாண் கூலிகளாய் நாம் என்றும் நிற்கவும் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.
விழிப்புடன் இருந்து அதைத் தகர்ப்போம்!


-மரு. கு. சிவராமன், BSMS, PhD.,
“பூவுலகின் நண்பர்கள்”
http://www.poovulagu.org/
herbsiddha@gmail.com
(மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும்...! என்ற தலைப்பில் 15-06-2008 அன்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் கட்டுரை ஆசிரியர் உரையாற்றியதின் மூல வடிவம்)

மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்...!

நாம் உட்கொள்ளும் இயற்கையான உணவுகளில் இப்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?

நாட்டுத்தக்காளி என்ற வகையே காணாமல்போய் பெங்களூர் தக்காளி என்ற பெயரில் “பளபளா” தக்காளி மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. இதில் என்ன பிரசினை?

நாட்டுவாழை, பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற பாரம்பரிய வாழை இனங்கள் குறைந்துபோய் பெங்களூர் வாழை என்ற பெயரில் “பளபளா” வாழை மட்டுமே கிடைக்கிறது. என்ன காரணம்? இந்த தக்காளியோ, வாழையோ தோல் கருப்பதும், அழுகுவதும் நம் கண்களில் படுவதில்லையே! என்ன மர்மம்?

ரிலையன்ஸ் பிரஷ், மோர், சுபிக்ஷா, நீல்கிரிஸ் போன்ற நவீன அங்காடிகளில் பார்வைக்கு கவர்ச்சியாக விற்பனை செய்யப்படும் காய்கனிகள் எங்கிருந்து வருகின்றன? அவை எவ்வாறு விளைவிக்கப்படுகின்றன?

பாட்டிலிலும், டப்பாவிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜாம் வகைகளும், பழரச பானங்களும் பாதுகாப்பானவைதானா?

பருத்தி, கத்தரிக்காய், காலிஃபிளவர், சோயா மொச்சை, கடுகு, கோதுமை, அரிசி என்று பல்வேறு உணவுப்பொருட்களிலும் Bt என்ற புதிய வகை அறிமுகமாவதாக செய்திகள் வருகின்றன. இது நல்லதா? இல்லையா?

இவை தாவரங்களில், அதை உட்கொள்ளும் விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

மனிதர்களும், விலங்குகளும் உட்கொள்ளும் உணவுகளில் இத்தகைய மரபணு மாற்றங்கள் செய்வதைப்பற்றி பன்னாட்டு மற்றும் இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது? அந்த சட்டங்களை இயற்றுவது யார்? இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றங்களுக்கும், வழக்கறிஞர்களான நமக்கும் எந்த அளவுக்கு பங்கு உள்ளது?

இந்த சட்டங்களை செயல்படுத்துவதும் அதை கண்காணிப்பதும் யார்? மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வோருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? இழப்பீடுகளுக்கு வழி உண்டா?

இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண இதோ ஒரு வாய்ப்பு....

இடம்: YMCA அரங்கம், (உயர்நீதிமன்றம் எதிரில்) NSC போஸ் சாலை, சென்னை.
நாள்: 15-06-2008 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

சட்டம் குறித்த இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அல்ல.

சட்டம் குறித்தும், சமூகம் குறித்தும் ஆர்வம் கொண்ட அனைவரும் வரலாம்.


தமிழறிந்த பேச்சாளர்கள் அனைவரும் தமிழிலேயே பேசுவர்.


அனைவரும் வருக!

பிரபல வங்கி ஏடிஎம்-மில் கள்ள நோட்டுக்கள் புழக்கம்

தினமலர் சென்னை பதிப்பு, 01-06-2008 ஞாயிறு இதழில் வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. புது தி்ல்லியிலிருந்து வெளியாகி இருக்கும் அந்த செய்தியில், பிரபல வங்கிகளின் ஏடிஎம்களில் கள்ளநோட்டுக்கள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இத்தகைய புகார்கள் சென்னையிலிருந்தும் சில காலத்திற்கு முன் எழுந்தது. எனினும் பலம் வாய்ந்த வங்கிகளின் குரலுக்கு முன் சாமானிய நுகர்வோரின் குரல்கள் எடுபடாமல் போனது.
.
தற்போது புது தில்லியிலும் இத்தகைய புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தப் புகாராவது விழவேண்டியவர்களின் காதுகளில் விழுமா? என்பது 'சிதம்பர' ரகசியமாகவே உள்ளது.
.
தினமலர் செய்தியில் சில விஷயங்கள் குழப்பமாக கொடுக்கப் பட்டுள்ளது. நுகர்வோர் ஏடிஎம்-கள் மூலமாக கள்ளநோட்டுகளை செலுத்துவது போலவும், அந்த கள்ள நோட்டுகளே ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் நுகர்வோரிடம் செல்வது போலவும் கூறப்பட்டுள்ளது.
.
ஏடிஎம்-மில் (ஒரு கவர் மூலம்) செலுத்தப்படும் பணம் தனியாகவே பெறப்படுகிறது. வங்கி அலுவலர் கவரில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, உள்ளே இருக்கிறதா என்பதை சரிபார்த்தப் பிறகே அது வரவு வைக்கப்படுகிறது. அந்த தொகை நேரடியாக ஏடிஎம்-மில் உள்ள பணத்தோடு சேர்க்கப்படுவதில்லை.
.
நுகர்வோருக்காக ஏடிஎம்-மில் வைக்கப்படும் பணம் வங்கி அதிகாரிகள் மூலமாகவே வைக்கப்படுகிறது. எனவே வங்கி ஏடிஎம்களில் கள்ளநோட்டு இருந்தால் அதற்கு வங்கியே பொறுப்பேற்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
.
ஆனால் கிரெடிட் கார்டு வணிகம் குறித்து ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் முதன்மை சுற்றறிக்கையை எந்த தனியார் வங்கியும் கண்டு கொள்வதில்லை. அது குறித்து ரிசர்வ் வங்கியோ, நிதி அமைச்சகமோ கண்டு கொள்வதில்லை. அதுபோல இந்த சட்டங்களையும் வங்கிகள் மதித்து நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

-சுந்தரராஜன்

சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரம் – வழக்கு நிலவரம்

கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மாலை, லண்டன்வாழ் தமிழரான திரு இளஞ்செழியன் குடும்பத்தினருடன் தி.நகர், ரங்கநாதன் தெரு, சரவணா ஸ்டோர்ஸ்-க்கு சென்றார். அங்கு நடந்ததை அவரே விவரிக்கிறார்.


‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.

.
லண்டனில் கடந்த பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறேன். விடுமுறையைக் கழிக்க கடந்த ஜூன் மாதம் 25 ம் தேதி மனைவி சுதர்ஷினி, மகள்கள் நளாயினி, சிந்து ஆகியோருடன் சென்னை வந்தேன். கடந்த 21_ம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் லண்டன் கிளம்ப ஆயத்தமானோம். விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்க 20_ம் தேதியன்று, இரவு ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸுக்குச் சென்றோம்.
குழந்தைகளுக்கு பொம்மை, துணிமணிகள் உள்பட பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கினோம். அப்போது என் மூன்று வயது மகள் நளாயினி கடையில் இருந்த ஒரு பந்தைக் காட்டி அதைக் கேட்டாள். அங்கிருந்த ஊழியர் என் மகள் கையில் பந்தைக் கொடுத்தார்.

.
அந்தப் பந்துக்கான பத்து ரூபாயைச் செலுத்தி ரசீதையும் என் மனைவி வாங்கிக் கொண்டாள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து கீழ்த்தளத்துக்கு வந்தோம்.
அப்போது என் மகளை நான் தூக்கி வைத்திருந்தேன். அவள் கையில் இருந்த பந்தைப் பார்த்து ஓர் ஊழியர் எங்களை வழிமறித்து ‘குழந்தையின் கையில் இருக்கும் பந்துக்குப் பணம் செலுத்தி விட்டீர்களா?’ என்று கேட்டார். என் மனைவி பணம் செலுத்தி விட்டதைக் கூறி கையில் இருந்த ரசீதையும் காட்டினாள். அப்போது திடீரென அங்கு வந்த மற்றொரு ஊழியர் என் மகளிடம் இருந்த பந்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்.
பந்து பறிபோனதால் என் மகள் சத்தமிட்டு அழுதாள். உடனே ‘‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? குழந்தையிடம் பந்தை திருப்பிக் கொடுங்கள்!’’ என்று நான் சத்தம் போட்டேன்.


மறுநிமிடம் என் பின்னால் இருந்து ஓர் ஊழியர் என்னை ‘மடேர்’ என்று தலையில் அடித்து விட்டார். நான் மகளை கீழே இறக்கி விட்டுத் திரும்ப முயன்றேன். அதற்குள் மற்றொரு ஊழியர் என்னைக் கீழே தள்ளினார். நான் எழுந்திருக்க முயல்வதற்குள் பத்துப்பேர் கும்பலாகச் சேர்ந்து என்னை நையப் புடைத்தார்கள். கையில் கிடைத்த எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து என் கை, முதுகு, கழுத்து என அடிக்க ஆரம்பித்தனர். நான் தாக்கப்படுவதைப் பார்த்து என் மகள் நளாயினி பயத்தில் வாந்தியெடுத்து விட்டாள்.

.
என் மேல் விழுந்த அடிகளைத் தடுக்க முயன்ற என் தந்தையும், மருத்துவருமான சண்முகநாதனை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் தள்ளி விட்டனர். அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்து எங்களை மீட்டனர்.

.
கடைக்கு வெளியே என்னை அவர்கள் அழைத்து வந்தனர். முதுகில் கடுமையான வலி இருந்ததால் சட்டையைக் கழற்றிப் பார்த்தேன். ரத்தக்கட்டுகளும், காயங்களும் இருந்தன. அதைப் பார்த்து சக வாடிக்கையாளர்கள் கொதித்துப் போய்விட்டனர். என் மனைவி ஏறத்தாழ மயக்கம் போட்டுவிழும் நிலைக்கு வந்துவிட்டாள். உடனே நான் செல்போன் மூலம் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னேன். சற்று நேரத்தில் மாம்பலம் போலீஸார் அங்கே வந்து என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

.
என் காயங்களைப் பார்த்த போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அதற்குள்ளாக போலீஸாருக்கு எங்கிருந்தோ போன் வந்துவிட ‘இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இப்படியே விட்டுவிடுங்கள்’ என்று போலீஸார் என்னிடம் காம்ப்ரமைஸ் செய்ய முயன்றார்கள்.

.
அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘இனிமேல் தமிழ்நாட்டில் யாருக்கும் இப்படியரு சம்பவம் நடக்கக்கூடாது. வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறினேன். அதன் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்கள்.

.
இந்தச் சம்பவம் மீடியாக்களில் வெளிவந்த பிறகு ஏராளமானோர் என்னைத் தொடர்பு கொண்டு ‘நாங்களும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளோம்’. ஆனால் நீங்கள்தான் தைரியமாக போலீஸ்வரை போய் புகார் கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று எனக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
.
பத்தாயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கும் நான், பத்து ரூபாய் கொடுத்து பந்து வாங்க மாட்டேனா? என்னைப் பார்த்தால் பந்து திருடுபவன் மாதிரியா இருக்கிறது? அப்படியே இருந்தாலும் எடுத்த எடுப்பில் ஒருவர் மீது கை வைக்கலாமா? லண்டனில் ஒரு போலீஸ்காரர் கூட சாதாரண ஆளை இப்படிப் போட்டு துவைத்து விட முடியாது. அப்படித் தாக்கினால் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்’’ என்றார் அவர் வேதனையுடன்.
.
இளஞ்செழியன் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரைத் தாக்கியதாக கடை மேலாளர் லிங்கராஜன், ஊழியர்கள் வைகுண்ட பெருமாள், மூர்த்தி, சிவக்குமார், பாலமுருகன், ஜெகன், தம்பிராஜ் என்ற ஏழு பேர் மாம்பலம் போலீஸாரால் கைது செய்து ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளனர்.


இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 கலகம் விளைவித்தல், 341 முறைகேடான தடுப்பு, 294B ஆபாசமாக பேசுதல், திட்டுதல், 336 கவனமின்மை காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், 323 தன்னிச்சையாக காயம் விளைவி்த்தல், 506(2) குற்றமுறு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சென்னை, சைதாப்பேட்டை 17வது குறறவியல் நடுவர் நீதிமன்றத்தில் வரும் ஜூன் 9ம் தேதியன்று நடைபெறுகிறது.
-ஆசிரியர் குழு

கிரெடிட் கார்ட் - பில்லிங் தேதியும், வட்டியில்லா கடன் நாட்களும்...

கிரெடிட் கார்டு நுகர்வோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சங்கள் பில் கணக்கிடும் தேதியும், அந்த பில் தொகையை கட்ட வேண்டிய கடைசி தேதியும் ஆகும்.

இந்த தேதிகளை முதல் பில்லில் கண்டு கொள்ள முடியும். பில் தயாரிக்கப்படும் தேதி பில்லிங் தேதியாகும். அந்த பில்லில் கூறப்பட்டுள்ள தொகையை கட்டுவதற்கு அனுமதிக்கப்படும் கடைசி நாள் பேமென்ட் தேதியாகும்.

இந்த இருநாட்களுக்கும் இடையில் சுமார் 22 நாட்கள் இருக்கும். இந்த நாள் வட்டியில்லா கடன் நாட்களாகும்.

பில் தேதிக்கு முதல் நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு வட்டியில்லா கடன் நாட்கள் 23 நாட்களாகும். பில் தேதிக்கு அடுத்த நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு 52 நாட்கள் வட்டியில்லா கடன் நாட்களாக இருக்கும்.

உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 4 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித்தேதி 26 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...

3ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

4ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

5ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
...பெற முடியும்.

மற்றொரு உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 28 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி 20 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...

27ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

28ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

29ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

...பெற முடியும். இதை முழுமையாக புரிந்து கொண்டால் இந்த கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்துவதை கற்றுக்கொள்ளலாம்.
-ஆசிரியர் குழு
பின்குறிப்பு: கிரெடிட் கார்டு குறித்த உங்கள் சந்தேகங்களை மறுமொழிப் பெட்டியில் பதிவு செய்யுங்கள். அதற்கு பதில் காண முயற்சிப்போம்.

கிரெடிட் கார்டின் வரலாறு

உலகமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் வணிகச்சூழல் பல அதிரடி மாற்றங்களை சந்தித்துக் கொண்டுள்ளது. அதில் முதன்மையானது வங்கிச்சேவை.

முன்பொரு காலத்தில் வங்கியில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ மிக அதிக காலம் பிடிக்கும். அதுவும் நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் அதனஅ வேலைநேரங்களில் மட்டும்தான் வரவு, செலவு செய்யமுடியும். ஆனால் தற்போது வங்கியின் எந்தக் கிளையிலும், எந்த நேரத்திலும் பணம் செலுத்தவோ, எடுக்கவோ முடியும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்து பார்த்திராத மாற்றமாகும்.

அதேபோல வங்கிக்கடன் என்பதே நிலம் அல்லது வீடு போன்ற சொத்துகளை அடமானம் வைத்து வாங்கும் ஒரு அம்சமாக இருந்தது. இந்த அனைத்து நடைமுறைகளையும் மாற்றியமைத்த பெருமைக்குரியது கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளே.

பணப்பரிமாற்றக் கருவியாகவும், கடன் வழங்கும் கருவியாகவும் செயல்படும் இந்த கிரெடிட் கார்டின் தோற்ற வரலாறு மிகவும் சுவையானது. 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த புனை கதை எழுத்தாளரான எட்வர்ட் பெல்லாமி என்பவர், 1887ம் ஆண்டு வெளியிட்ட “பின்னோக்கி பார்த்தல்” (Looking Backward) 2000 – 1887 என்ற அறிவியல் புனைகதையில், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 2000ஆவது ஆண்டில் கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் இருக்கும் எனக் கணித்திருக்கிறார்.

ஆனால் நடைமுறையில் கிரெடிட் கார்டுகள் வெகு விரைவிலேயே புழக்கத்திற்கு வந்து விட்டன. 1920ம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் வாகன எரிபொருள் (பெட்ரோலிய) நிறுவனங்கள், வாடிக்கையாளர்களான வாகன உரிமையாளர்களுக்கு கடனில் (நமது மொழியில் கூறவேண்டுமானால் “அக்கவுண்டி”ல்) எரிபொருள் நிரப்ப ஆரம்பித்தன. இதற்கு அடையாள அட்டை வழங்கி அதில் கடன் தொகையை குறிக்கும் பழக்கம் தொடங்கிய பின், ஒரு பெட்ரோலிய நிறுவனம் வழங்கிய கடன் அடையாள அட்டையை மற்ற நிறுவனங்களும் அங்கீகரித்து, வாகன உரிமையாளர்களுக்கு கடன் வழங்க முன் வந்தன. இந்த முறை பெரிய பிரசினைகள் ஏதுமின்றி வணிகத்தை அதிகரிக்க உதவி செய்தது.

இந்த புதிய அம்சம் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை நடத்துவோரை கவர்ந்தது. இதையடு்த்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்க் எக்ஸ் மெக்நமரா என்பவர், 1950ம் ஆண்டில் உணவகங்களிலும், தங்கும் விடுதிகளிலும் ஏற்கப்படும் டைனர்ஸ் கிளப் கார்டு (Diners Club Card) என்ற முதலாவது கிரெடிட் கார்டை உருவாக்கினார். இந்த கார்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டிலேயே சுமார் 20 ஆயிரம் வாடிக்கையாளர்களை உருவாக்கியது. அந்த வாடிக்கையாளர்கள் சுமார் 1000 உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் இந்த கார்டுகளை பயன்படுத்த வசதி செய்து தரப்பட்டது.

பயணத்தை அதிகம் மேற்கொள்ளும் வணிகர்களிடம், டைனர்ஸ் கிளப் கார்ட் அடைந்த வெற்றி காரணமாக பயணத்தேவைகள், அஞ்சல், பணப்பரிமாற்றம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுவந்த “அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்” “வெஸ்டர்ன் யூனியன்” போன்ற நிறுவனங்களும் பயணிகளுக்கான கிரெடிட் கார்டுகளை வழங்கத் தொடங்கின.

இந்த கார்டுகள் அடைந்த வெற்றி வங்கித்தொழில் அதிபர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதையடுத்து பாங்க் ஆஃப் அமெரிக்கா, பாங்க் அமெரிக்கார்ட் (Bank Americard) என்ற புதிய முழுமையான கிரெடிட் கார்டை 1958ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த கார்டு உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் மட்டும் அல்லாமல் அனைத்து வணிக மையங்களிலும் ஏற்கப்பட்டது.

இதற்கு போட்டியாக மற்றொரு அமெரிக்க வங்கியான இண்டர்பேங்க் 1966ம் ஆண்டில், மாஸ்டர்சார்ஜ் என்ற கார்டை அறிமுகப்படுத்தியது.

பாங்க் அமெரிக்கார்ட் 1976ம் ஆண்டில் “விசா” (VISA) என்றும், மாஸ்டர்சார்ஜ் “மாஸ்டர் கார்ட்” (MASTER CARD) என்றும் பெயர் மாற்றம் பெற்று அசுரவேகத்தில் வளர்ச்சி அடையத் தொடங்கின. இந்த நிலையில் இத்தகைய கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்திய பெட்ரோலிய நிறுவனங்கள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுடன் இணைந்து கோ பிராண்டட் கார்டுகளை அறிமுகப்படுத்தின. இதன் மூலம் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் கணக்குகளை பராமரிக்க வேண்டிய வேலைகளை தவிர்த்துக்கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளின் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்தது.

சாதாரண வங்கிப்பணிகளை மேற்கொண்ட சிட்டிபாங்க் கிரெடிட் கார்டு வணிகத்தில் குதிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது டைனர்ஸ் கிளப் கார்டும் விசா மற்றும் மாஸ்டர் கார்டின் வருகையால் சற்றே சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த சூழ்நிலையை சிட்டிபாங்க் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது. டைனர்ஸ் கிளப்பை கைப்பற்றிய சிட்டிபாங்க் டைனர்ஸ் கிளப் வாடிக்கையாளர்களை, சிட்டிபாங்க் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொண்டது.

இதைப்பார்த்த விசாவும், மாஸ்டர்கார்டும் சிட்டிபாங்க்குக்கு தேவையான மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மூலதனத்தை வழங்க முன்வந்தது. இவ்வாறாக டைனர்ஸ் கிளப்பின் வாடிக்கையாளர்கள் சிட்டி பாங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தத் துவங்கினர். அதற்கான தொழில் நுட்பத்தையும், கடனுக்கான மூலததனத்தையும் விசாவும், மாஸ்டர் கார்டும் வழங்கின. இதையடுத்து இதேபோன்ற ஏற்பாட்டில் பார்கிளேஸ் பாங்க் உட்பட பல்வேறு வங்கிகள் கிரெடிட் கார்டு வணிகத்தில் இறங்கின.

மாஸ்டர் மற்றும் விசா நிறுவனங்கள் நேரடியாக கிரெடிட் கார்டு வணிகத்தில் இறங்காமல் வணிக வங்கிகளுக்கு தொழில் நுட்பமும், மூலதனமும் வழங்கும் முதன்மை வங்கிகளாக உருமாறின.

-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் (Banking Ombudsman Scheme)


வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம், 2006


A. முன்னுரை
1. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006, அளிப்பவை என்ன ?
வங்கிகளின் சேவைகள் குறித்த புகார்கள் மீது உறுதியான முடிவெடுப்பிற்கு வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 வழிவகுக்கிறது.

2. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் செயல் முறைக்கு வந்துவிட்டதா ?
இத் திட்டம் ஜன்வரி 1, 2006 முதல் அமலுக்கு வந்துள்ளது.

3. வங்கிக் குறைதீர்ப்பாளர் யார் ?
வங்கிச்சேவைகளில் ஏற்படும் குறைபாட்டின் மேல் வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்களைத் தீர்க்கும் பொருட்டு ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டவரே வங்கிக் குறைதீர்ப்பாளர்.

4. வங்கிக் குறைதீர்ப்பாளருக்கு சட்டரீதியான அதிகாரம் உண்டா ?
வங்கிக் குறைதீர்ப்பாணையம் பகுதியளவு நீதிமன்றத்திற்குகந்த அதிகாரம் வாய்ந்தது. வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஆணைகள் பிறப்பிக்கவும், நடுநிலையாளர்கள் மூலம் புகார்களைத் தீர்க்கவும் அதற்கு அதிகாரமுண்டு.

5. வங்கிக் குறைதீர்ப்பாணையம் எத்தனை நிறுவப்பட்டுள்ளன ? அவை எங்குள்ளன ?
நாளது தேதி வரை, 15 வங்கிக் குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது அலுவலகங்கள் பெரும்பாலும் மாநில தலைநகரங்களில் உள்ளன. குறைதீர்ப்பாணையங்களின் முகவரிகள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

6. வங்கிக் குறைதீர்ப்புத்திட்டம், 2006 உள்ளடக்கும் வங்கிகள் யாவை ?
அட்டவணையிலுள்ள அனைத்து வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், தொடக்கநிலைக் கூட்டுறவு வங்கிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

7. பழைய வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2002 லிருந்து புதிய வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 எவ்வாறு வேறுபடுகிறது?
புதிய திட்டம் பரப்பெல்லையிலும், நோக்க அளவிலும், 2002ன் பழைய திட்டத்தை விடச் சிறந்தது. புதிய திட்டம், புகார்களை கணினி வழியாக அளிக்கவும் வழி வகுத்துள்ளது. வங்கியோ, வாடிக்கையாளரோ, குறைதீர்ப்பாணையர் அளிக்கும் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழிவகுக்கும் வகையில், மேல்முறையீட்டை ஏற்றாய்வு செய்யும் அதிகாரியை கூடுதலாக நிறுவிடவும் புதிய திட்டம் வழிவகுத்துள்ளது.



B. வங்கிக் குறைதீர்ப்பாணையம் முன்வைக்கப்படும் புகார்களின் வகைகள்

8. வங்கிக் குறைதீர்ப்பாணையம் எந்த வகையான குறைகளைக் கவனிக்கலாம் ?
வங்கிச்சேவை குறைபாடு குறித்த பின்வரும் புகார்களை வங்கிக் குறைதீர்ப்பாணையம் ஏற்று கவனிக்கலாம்.
)( காசோலை, கேட்போலை, உறுதிச்சீட்டுகள் போன்றவைகள் மீதான பணம் வசூலிக்கப்பதில் தொகை அளிக்கப்படாவிட்டாலோ, அல்லது அளிப்பதிலோ மிதமிஞ்சிய காலதாமதம்

)( போதிய காரணமின்றி, சிறு இலக்க மதிப்பு ரூபாய் நோட்டுகள்/நாணயங்கள் செலுத்தப்படும்போது, வாங்க மறுப்பதும் அச் சேவைக்குத் தரகுத் தொகை/கட்டணங்கள் வசூலிப்பதும்

)( உள்வரும் பணவரவுத்தொகைகளை செலுத்தாமலிருப்பதும் செலுத்துவதில் தாமதம் செய்வதும்

)( பணவழங்காணைகள், கேட்போலைகள், வங்கி வரைவோலைகள் வழங்காமலிருத்தல் அல்லது வழங்குவதில் காலதாமதம் செய்தல்

)( குறிக்கப்பட்ட வங்கிவேலை நேரத்தை அனுசரிக்காமலிருத்தல்

)( கடன் சான்றிதழ், மற்றும் கடன் உத்தரவும் சார்ந்த கடமைப்பொறுப்பை மதித்து நடப்பதிலிருந்து தவறுதல்

)( கடன் வழங்கும் வசதி தவிர, எழுத்தளவில் வங்கியாலோ அல்லது அதன் நேரடி விற்பனை முகவர்கள் மூலமாகவோ உறுதியளிக்கப்பட்ட வங்கி வசதியை அளிக்காமலிருத்தல் அல்லது அளிப்பதில் தாமதம்

)( வங்கியில் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு, நடப்புக்கணக்கு அல்லது வேறெந்தவகைக் கணக்கிலும், வாடிக்கையாளருக்குரிய வரவு வைக்கப்படவேண்டிய தொகையை வரவு வைக்காமலிருத்தல், தாமதித்தல், சேமிப்பைத் திருப்பியளிக்காமலிருத்தல், வட்டி விகிதம் போன்ற பல விஷயங்களில் ரிசர்வ் வங்கியின் கட்டளைகளை அனுசரிக்காமலிருத்தல்

)( ஏற்றுமதியாளருக்குரிய ஏற்றுமதித் தொகையைப்பெற்று அளிப்பதில் தாமதம். ஏற்றுமதி உறுதிச்சீட்டுகள் கையாளுதல் மற்றும் உறுதிச்சீட்டுகள் வசூல் இவற்றில் தாமதம் போன்றவைகளில் வங்கியின் உள்நாட்டுச் செயல்பாடுகள்

)( மறுப்பதற்கான எந்த உரிய காரணம் இல்லாமல் சேமிப்புக்கணக்கினைத் துவக்க மறுத்தல்

)( உரிய முன் அறிவிப்பு ஏதும் அளிக்காமல் கட்டணங்கள் வசூலித்தல்

)( தானியங்கி பணம் வழங்கும்/பற்று அட்டை நடைமுறைகள் மற்றும் கடன் அட்டை நடைமுறைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை அனுசரிக்காத வங்கிகள் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மீதான புகார்கள்

)( பணியாளரல்லாத ஒரு நபரின் ஓய்வூதிக் கணக்கிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணம் வங்கியின் செயல்பாட்டில் நிகழந்த குறையென்று சொல்ல முடிந்தால் அத்தகைய புகார்கள்

)( ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணம் வங்கியின் செயல்பாட்டில் நிகழந்த குறையென்று சொல்லமுடிந்தால் (ஆனால் தனது பணியாளர்களது குறைகளுக்கல்லாமல்) அத்தகைய புகார்கள்

)( ரிசர்வ் வங்கி அல்லது அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வரிகளுக்கான பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது அதை தாமதப்படுத்துதல்

)( இந்திய அரசுப்பத்திரங்களை வெளியிடமறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றை பராமரிக்க மறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றிற்குரிய பணத்தைத் திருப்பித்தர மறுத்தல் அல்லது தாமதித்தல்

)( வாடிக்கையாளருக்கு உரிய அறிவிப்பின்றி அல்லது வலிந்து சேமிப்புக்கணக்கினைக் காரணமின்றி முடித்துக்கொள்ளுதல்

)( வங்கிக் கணக்குகளை முடிக்க மறுத்தல் அல்லது முடித்தலில் தாமதம்

)( நியாயமான பழக்கங்களுக்கான வங்கியின் நெறி முறைகளிலிருந்து பிறழுதல்

)( வங்கிச்சேவை மற்றும் இதர சேவைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களிலிருந்து பிறழும் எந்தவிதமான விஷயத்திற்காகவும் புகார் செய்யலாம்

9. குடியிருப்பாளரல்லாத இந்தியரின் புகார்களை குறைதீர்ப்பாயம் கவனிக்குமா ?
ஆம். இந்தியாவில் கணக்கு வைத்துள்ள குடியிருப்பாளரல்லாத இந்தியரின் கணக்கு குறித்து வெளிநாட்டிலிருந்து வரும் பணம், சேமிப்புக்கணக்கு, மற்றும் வங்கி சார்ந்த விஷயங்கள் குறித்த புகார்களை கவனிக்கும்.



C. வங்கிகள் குறைதீர்ப்பாளரிடம் விண்ணப்பித்தல்

10. எப்போது புகார்தாரர் புகாரினை அளிக்கலாம் ?
குறிப்பிட்ட வங்கி, புகார்தாரரின் முறையீட்டைப்பெற்றுக் கொண்ட ஒருமாதத்திற்குள் பதில் தராவிட்டாலோ, புகாரை வாங்க மறுத்தாலோ, திருப்திகரமாக பதிலளிக்காவிட்டாலோ, குறைதீர்ப்பாணையத்திடம் தமது புகாரை வாடிக்கையாளர் சமர்ப்பிக்கலாம்.

11. வங்கிகள் குறைதீர்ப்பாணையத்தில் புகார் அளிப்பதற்கு முன் புகார் அளிப்பவர் ஏதாவது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமா ?
குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளிப்பதற்கு முன்பாக, புகாரில் குறிப்பிடப்படும் வங்கியிடமிருந்தே நேரடியாக எழுத்துவடிவிலான வேண்டுகோள் மூலம் முயற்சித்து ஒரு திருப்திகரமான தீர்வினைப் பெற முதலில் முயல்வது அவசியம் – ஆயினும் புகாருக்குரிய நிகழ்விற்கு ஒருவருடத்திற்குள்ளாக அந்தப்புகார் அளிக்கப்பட வேண்டும்.

12. குறைதீர்ப்பாணையம் ஒன்றில் முந்தைய நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட்ட அதே விபரம் குறித்த புகாரினை மீண்டும் குறைதீர்ப்பணையத்திடம் அளிக்கலாமா ?
கூடாது. ஒரே விபரங்குறித்து முன்பே அளிக்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து அதே விபரத்திற்காக குறை தீர்ப்பாணையத்திடம் விண்ணப்பம் அளிக்கக்கூடாது.

13. நடுவர்மன்றம், தீர்ப்புமன்றம், சட்டஉரிமையுள்ள நீதிமன்றம் அல்லது பிற அவைகள் இவற்றால் தீர்ப்பளிக்கப்பட்ட அல்லது தீர்ப்பு நிலுவையிலிருக்கும் விஷயங்குறித்து வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் தரலாமா ?
கூடாது.

14. வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளிப்பதற்காக ஏதேனும் செயல்முறை உண்டா ?
ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வங்கிக் குறை தீர்ப்பாணையத்திடம் புகார் தரலாம். கணிணி மூலம் www.bankingombudsman.rbi.org.in. இணையதளத்திற்குரிய முகவரிக்கு மின் அஞ்சல் மூலமும் புகார் தரலாம். எல்லா வங்கிக்கிளைகளிலும் கிடைக்கும் மாதிரிப்படிவங்கள் மூலமும் புகார் அளிக்கலாம். ஆயினும் படிவத்தை உபயோகிப்பது கட்டாயமில்லை. எதுவாயினும் புகார்தாரர் தேவையான அனைத்துத் தகவலையும் அளிக்க வேண்டும்.

15. புகார்தாரரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி புகாரை அளிக்கலாமா?
ஆம். வக்கீலாக இல்லாத அங்கீகரிக்கப்பட்ட புகார்தாரரின் பிரதிநிதி புகாரை அளிக்கலாம். (ஏன் வக்கீலாக இருக்கக்கூடாது. வங்கிகள் செய்யும் தில்லுமுல்லுகளை வக்கீல் கேள்விகேட்பார் என்பதற்காகவா?)

16. வங்கிக் குறைதீர்ப்பாயம் முன்பாக புகார் பதிவு செய்ய ஏதாவது செலவு உண்டா ?
இல்லை. குறைதீர்ப்பாயம் வாடிக்கையாளர் குறை தீர்க்க எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை.

17. விண்ணப்பத்தில் என்னென்ன விவரங்கள் அளிக்கப்படவேண்டும்?
புகார் அளிப்பவரின் பெயர், முகவரி, மற்றும் எந்த வங்கியின் மீது புகார் தரப்படுகிறதோ அந்த வங்கிக் கிளையின் பெயர் முகவரி, புகாருக்கு உள்ளாக்கிய உண்மை விவரங்கள், ஏதாவது ஆவணச்சான்றுகள் இருப்பின் அவையும், அந்நிகழ்வினால் ஏற்பட்ட நஷ்டத்தின் அளவு, மற்றும் தன்மை, குறைதீர்ப்பாணையத்திடமிருந்து எதிர்பார்க்கும் தீர்வு இவற்றோடு ஒரு உறுதிமொழியும் அளிக்கப்பட வேண்டும். மேற்கொண்டு செயல்படவேண்டிய சில நிபந்தனைகளை மேற்கொள்வேன் என்பதற்கான உறுதிமொழியே அதுவாகும். இவையனைத்தையும் குறைதீர்ப்பாணையத்திற்கு அளிக்கவேண்டும்.



D. குறைதீர்ப்பாணையத்தின் செயல் முறைகள்

18. குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளித்தபின் நடப்பது என்ன ?
சமரசம் அல்லது இடையிட்டு பேச்சுவார்த்தை இவற்றின் மூலம் புகார்தாரர் மற்றும் புகாரில் குறிப்பிடப்பட்ட வங்கிக்கு இடையே ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த வங்கிக் குறைதீர்ப்பாயம் முயல்கிறது.

19. வங்கியே தீர்வினைத்தர முன்வந்தால் என்ன நடக்கும் ?
புகார்தாரதின் புகாரை முழுவதுமாகக் முடிவாகக் தீர்க்கும் வகையில் வங்கி அளிக்கும் தீர்வு இருக்குமாயின் அவை புகார்தாரர் ஒத்துக்கொள்ளும் வகையிலும் அமைந்திட்டால் குறைதீர்ப்பாயம் அதனடிப்படையில் தீர்வினை வழங்கும். அது இருவரையும் (புகார்தார், வங்கி) கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

20. உடன் படிக்கையால் புகார் தீர்க்கப்படாவிட்டால் என்ன செய்வது?
ஒருமாதத்திற்குள் புகாரானது உடன்படிக்கையால் தீர்க்கப்படாவிட்டால், குறைதீர்ப்பாயம் தனது தீர்ப்பினை வழங்க முனையும். அவ்வாறு தீர்ப்பினை வழங்கும் முன்பாக, புகார்தாரருக்கும், வங்கிக்கும் தனது வாதத்தை முன்வைக்க குறைதீர்ப்பாயம் வாய்ப்பு அளிக்கும்.

21. ஒரு தீர்ப்பினை வழங்க குறைதீர்ப்பாயம் எவற்றையெல்லம் கவனிக்கும் ?
தீர்ப்பினை வழங்கும் முன் ஆவணச்சான்றுகளை சாட்சிக்காக அளித்திருப்பின் அவற்றை குறைதீர்ப்பாயம் பரிசீலிக்கும். அவற்றோடு, வங்கிவிதி மற்றும் நடைமுறைச்சட்டத்தின் கோட்பாடுகள், ரிசர்வ் வங்கி வெளியிட்ட கட்டளைகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் இதர காரணிகள் என்று நிதியின்பாற்பட்டு கவனிக்கப்பட வேண்டியவை அனைத்தையும் தீர்ப்பாயம் கவனித்து தீர்ப்பினை வழங்கும்.



E. குறைதீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பு

22. வங்கிகள் குறைதீர்ப்பாயம் தீர்ப்பளித்தபின் நிகழ்வது என்ன ?
தீர்ப்பு வழங்கப்பட்டதும் புகார்தாரருக்கும், புகாரில் குறைப்பிட்ட வங்கிக்கும் தீர்ப்பின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படும். புகார்தாரர் முழு முடிவானதாக அந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது மறுக்கலாம்.

23. தீர்ப்பு ஏற்புடையதாயின் புகார்தாரர் என்ன செய்ய வேண்டும் ?
தீர்ப்பினைப் பெற்றுக்கொண்ட 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட வங்கிக்கு, அந்த தீர்ப்பினை முழு முடிவாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, ஒரு ஒப்புதல் கடிதத்தை புகார்தாரர் அனுப்ப வேண்டும்.

24. புகார்தாரர் தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை அனுப்புவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்கமுடியுமா ?
முடியும். இவ்வாறு கூடுதலாக கால அவகாசம் கேட்பதற்கான உரிய காரணங்களோடு, புகார்தாரர் ஒரு வேண்டுகோள் கடிதத்தை வங்கிக் குறைதீர்ப்பாணையத்திற்கு அனுப்பலாம்.

25. தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை அனுப்ப புகார்தாரர் கூடுதலாகக் கால அவகாசம் கேட்கும் போது, வங்கிக் குறைதீர்ப்பாயம் என்ன செய்யும் ?
புகார்தாரர் இத்தகைய வேண்டுகோள் விடுக்கும் போது அதில் குறிப்பிட்ட காரணங்கள் திருப்தியளிப்பதாக இருந்தால், வங்கிகள் குறைதீர்ப்பாயம் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் இதற்காக அளிக்கலாம்.

26. முழு முடிவாகத்தீர்ப்பினை ஏற்றுக்கொண்டதன் ஒப்புதல் கடிதத்தை புகார்தாரர் வங்கிக்கு அனுப்பியபின் என்ன நிகழ்கிறது ?
புகார்தாரரிடமிருந்து தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றுக்கொண்ட ஒரு மாதத்திற்குள் வங்கிக்கும் அது திருப்தியளித்தால் வங்கி அதனைச்செயல்படுத்திட வேண்டும். அவ்வாறு செயல்படுத்தியதை வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

27. வங்கிக் குறைதீர்ப்பாணையம் வழங்கிய தீர்ப்பு புகார்தாரருக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் மேல்முறையீடு செய்ய ஏதாவது வழி உண்டா?
தீர்ப்பு ஏற்புடையதாக இல்லையெனில், புகார்தாரர் அதனை எதிர்த்து மேல்முறையீட்டு அதிகாரியை அணுகலாம்.

28. தீர்ப்பினைப் புகார்தாரர் ஏற்க மறுக்கும் பட்சத்தில், நடைமுறையிலிருக்கும் சட்டத்தின்படி, அவைகள், நீதிமன்றம் அல்லது ஏதாவதொரு சட்டபூர்வ நிர்வாகத்தின் முன்பாக தனது புகாரைத் தீர்த்துக்கொள்ளும் அவரது உரிமை பாதிக்கப்படுமா ?
சட்டப்படி புகார்தாரர் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும், அது பாதிக்காது.

29. தீர்ப்பு வங்கிக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் என்ன் நிகழும் ?
இந்த திட்டத்தின் கீழ் வங்கி தனது மேல் முறையீட்டை மேல்முறையீட்டு அதிகாரியின் முன் வைக்க வாய்ப்பளிக்கப்படும்.



F. தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு

30. மேல் முறையீடு ஏற்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?
மேல் முறையீட்டை ஏற்கும் அதிகாரம் பெற்றவர் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆவார்.

31. மேல் முறையீடு செய்ய ஏதாவது கால வரையறை உண்டா ?
குறைதீர்ப்பாணையத்தின் தீர்ப்பினால் திருப்தியடையாத இருதரப்பினரில் எவரேனும் தீர்ப்பினைப் பெற்றுக்கொண்ட 45 நாட்களுக்குள், மேல் முறையீட்டு அதிகாரி முன்பாக தனது மேல் முறையீட்டை செய்யவேண்டும. காலவரையறைக்குள் செய்ய இயலாமல் போனதற்கு சரியான காரணம் இருக்குமாயின், அது மேல்முறையீட்டு அதிகாரிக்கு திருப்தியளிக்குமாயின் அவர் மேலும் 30 நாட்கள் அவகாசம் அளிக்கலாம், வங்கிகள் மேல் முறையீடு செய்ய வேண்டுமாயின் அந்த வங்கியின் தலைவர், அவர் வராதபோது, நிர்வாக இயக்குநர் அல்லது செயல் இயக்குநர், அல்லது முக்கிய செயலாக்க அதிகாரி அல்லது அதே தகுதியிலுள்ள அதிகாரியின் முன் அனுமதி பெற்ற பின்னரே மேல்முறையீடு செய்ய வேண்டும்.

32. மேல் முறையீடு அதிகாரி மேல்முறையீட்டை எப்படிக் கையாளுகிறார் ?
மேல் முறையீடு அதிகாரி.
(i) அதைத் தள்ளுபடி செய்யலாம்
(ii) அதை அனுமதித்து, குறைதீர்ப்பாணையத்தின் தீர்ப்பினைத் தள்ளி வைக்கலாம்.
(iii) மேல் முறையீட்டு அதிகாரி தேவை அல்லது சரியென்று கருதும் கட்டளைகளோடு தீர்ப்பினைப் புதிதாக அளிக்கும்படி அந்த விஷயத்தை மீண்டும் குறைதீர்ப்பாணையத்திற்கே அனுப்பி வைக்கலாம்.
(iv) தீர்ப்பினை மாற்றியமைத்து, அதற்குத்தேவையான கட்டளைகளோடு மாற்றப்பட்ட தீர்ப்பினை அளிக்கலாம்.
(v) எது சரியெனக் கருதுகிறதோ, அதன்படி வேறு ஆணை வழங்கலாம்.


G. மற்றவைகள்

33. எந்த நிலையிலாவது, குறைதீர்ப்பணையம் புகாரைத் தள்ளுபடி செய்ய இயலுமா ?
ஆம். எந்த நிலையிலும் புகாரை, வங்கிக் குறை தீர்ப்பாணையம் கீழ்க்கண்ட வகையிலானது என்று கருதினால் தள்ளுபடி செய்யலாம்.
1. போதிய காரணமில்லாமல் அலைக்கழிக்கும் விதமாக, முக்கியமில்லாத அல்லது தீய நோக்கோடு புகார் இருந்தால்.
2. புகார்தாரர் போதிய கவனத்தோடு அதில் செயல்படவில்லை எனத்தெரிய வந்தால்
3. புகார்தாருக்கு நஷ்டமோ, சிக்கலோ அல்லது தொந்தரவோ அதனால் ஏற்படவில்லையென வங்கிக் குறைதீர்ப்பாயம் கருதினால்.
4. வங்கிக் குறைதீர்ப்பாணையத்தின் பணம் சார்ந்த வரையறை எல்லைக்குள் இல்லாமலிருந்தால்.
5. வங்கிக் குறைதீர்ப்பாணையத்தின் கருத்தின்படி, புகாரின் சிக்கலான நிலை கருதி, விரிவான ஆவண சோதனை, மற்றும் நேரடி சாட்சிகள் போன்ற குறைதீர்ப்பாணையத்தின் செயல் முறைகளுக்கு ஒவ்வாதவை தீர்ப்பளிப்பதற்குத்தேவைப்பட்டால்.

34. குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 அமலாக்கத்திற்கு முன், நிலுவையிலுள்ள புகார்கள் எந்த திட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும்?
நிலுவையிலுள்ள புகார்களின் தீர்ப்பு மற்றும் முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டவற்றின் நிறைவேற்றம் ஆகியவை தொடர்ந்து வங்கிகள் குறைதீர்ப்புத்திட்டம் 1995, 2002 படி செயல்படுத்தப்படும்.

35. இந்த திட்டத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன ?
வங்கி வாடிக்கையாளரின் புகார்களுக்கு விரைவான தீர்வுகாணும் ஒரு முறைமையாக, ரிசர்வ் வங்கி, வங்கிக் குறைதீர்ப்புத்திட்டத்தை வடிவமைத்துத் தந்துள்ளது. அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல வகையான வங்கிச்சேவை குறித்த வாடிக்கையாளர் புகார்களைத் தீர்த்திட நிறுவன மற்றும் சட்டரீதியான அமைப்பினை அமைத்துத் தந்துள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949, சட்டப்பிரிவு 35-A கீழ் வெளியிடப்பட்ட கட்டளையின் வாயிலாக இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதனின் மேம்பட்ட செயல்திறனுக்கான, ரிசர்வ் வங்கி தன்னிடம் பணி புரியும் உயர் அதிகாரிகளை குறைதீர்ப்பாளராக நியமித்து தீர்ப்பாணய பணியாளர்களையும் நியமித்து அவ்வலுவலகச் செலவையும் ஏற்கிறது.

36. வங்கிக் குறைதீர்ப்பாணையத் திட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது ?
முதலில் இத்திட்டம் 1995ல் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்ன்ர் 2002ல் திருத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், 36,000 புகார்களை வங்கிகள் குறைதீர்ப்பாயம் கையாண்டுள்ளது. (இவற்றில் எத்தனை புகார் கொடுத்த வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்துள்ளனர்?)

நன்றி: இந்திய ரிசர்வ் வங்கி

வலைவிரிக்கும் வங்கிகள்...இரையாகும் மக்கள்....!

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மனோகரன் ஒரு தனியார் நிறுவனத்தில் டர்னராக வேலை செய்கிறார். சுமார் 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் அவருக்கு மனைவியும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மகன் மற்றும் மகளும் உள்ளனர். குறைந்த ஊதியத்தில் பற்றாக்குறை வாழ்க்கை நடத்தினாலும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.

அப்போது அவரது நிறுவனத்தில் அனைத்துப்பணியாளர்களும் முகவரிக்கான சான்று ஒன்றும், புகைப்படம் ஒன்றும் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மனோகரனும் அவற்றை கொண்டு சென்றபோது அதைப்பெற்றுக்கொண்ட ICICI வங்கி அதிகாரிகள் விண்ணப்பம் ஒன்றை நிரப்பி கையெழுத்து பெற்றுக்கொண்டு ஏடிஎம் கார்டு ஒன்றையும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் மற்றும் நோட்டிஸ்களை கொடுத்தனர்.

மேலும் அடுத்த மாதத்தில் இருந்து சம்பளத்தை பெற்றுக்கொள்ள அலுவலகத்தில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. எந்த நேரமும் ஏடிஎம்-மில் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

முதல் மாதம் ஏடிஎம்-மில் பணம் எடுக்கும்போது மனோகரனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் தான் நகரவாசியாக முழு தகுதி பெற்றதாகவும்கூட தோன்றியது. அப்போது கழுத்தில் டை கட்டிய ஒரு இளைஞர் அவரிடம் வந்து, “சார்! கிரெடிட் கார்டு எதுவும் பயன்படுத்தறீங்களா?” என்று கேட்டபோது அவருக்கு எதுவும் புரியவில்லை என்பதே உண்மை. ஆனால் அந்த இளைஞனே கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை தெரிவித்ததுடன், கிரெடிட் கார்டுக்கு கட்டணம் எதுவும் தேவையில்லை என்றும் கூறினான்.

ஏடிஎம் கார்டை பெற்று புளகாங்கிதம் அடைந்திருந்த மனோகரன் கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்திலும் கையெழுத்துப் போட்டார்.

கிரெடிட் கார்டு வந்து சேர்ந்தது. அதைக்கொண்டு 15 ஆயிரம் ரூபாய்வரை பயன்படுத்தலாம் என்பதை புரி்ந்து கொண்ட மனோகரன், முதலில் வீட்டிற்கு நீண்ட நாட்களாக வாங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த குக்கர் ஒன்றினை வாங்கினார்.

முதல் மாத பில் மூவாயிரத்து சொச்சத்துக்கு வந்தது. அதிலும் சுமார் 200 ரூபாய்கள் கட்டினால் போதும் என்றும் கூறப்பட்டிருந்தது. அடுத்த மாதம் மேலும் சுமார் 5 ஆயிரம் ரூபாய்களுக்கு பொருட்களை வாங்கினார். ஒரு முறை அவசரத்தேவை என்பதற்காக கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்-இலிருந்து 100 ரூபாய் எடுத்தார், அதற்கான ஏடிஎம் கட்டணம் மட்டுமே 200 ரூபாய் என்பதை அறியாமல்.

இடையே சம்பளப்பணமான 6 ஆயிரம் ரூபாய் குடும்ப செலவுக்கே போதாத நிலையில் கிரெடிட் கார்டுக்கான கடன் தவணையை கட்டத்தவறினார். அதற்கான காலக்கடப்பு கட்டணம் சில மாதங்கள் கூடியதில் அவரது கடன் எல்லைத்தொகையை விட அவரது கடன் தொகை அதிகரித்தது. இப்போது அவரது கடன் தொகை சுமார் 40 ஆயிரம் ரூபாய்.

மாதம்தோறும் காலக்கடப்பு அபராதம், கடன் எல்லையை மீறியதற்கான அபராதம், எலக்ட்ரானிக் கிளியரிங் செக் திரும்பியதற்கான அபராதம், கடன் தொகைக்கான வட்டி போன்றவை சுமார் 2 ஆயிரம் ரூபாய் அவரது கணக்கில் ஏற்றப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக அவரது சம்பளப்பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. கிரெடிட் கார்டு பாக்கிக்காக அவரது சம்பள பணத்தை ICICI வங்கி முடக்கி வைத்துள்ளது.

கிரெடிட் கார்டு மூலம் சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவழித்த மனோகரன் இதுவரை பலவழிகளில் 25 ஆயிரம் ரூபாய் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் அவரது கணக்கில் இன்னும் 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று வங்கி பில் அனுப்புகிறது. மேலும் மாத சம்பளத்தையும் ஸ்வாஹா செய்கிறது. இதற்கு என்ன தீர்வு? யாரிடம் போனால் தீர்வு கிடைக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

மாதசம்பளத்தை பணமாக கொடுக்கச் சொன்னால் நிர்வாகத் தரப்பில் முடியாது என்று கூறுகின்றனர். கடந்த மூன்று மாதமாக வாழ்க்கை நரகமாகி விட்டது. சம்பளத்தையும் இழந்து விடுவதால் பட்டினி என்பது சகஜமாகி வருகிறது.

இந்த வேலை தவிர வேறு தெரியாத மனோகரனுக்கான தொழில் வாய்ப்புகளும் மிகவும் குறைவே. எனவே இந்த வேலையை செய்தாலும் சம்பளம் கிடைக்காது . செய்யாவிட்டாலும் வேறு வழியில்லை.

மனோகரனுக்கு வழிகாட்ட நீங்கள் யாராவது தயாராக இருக்கிறீர்களா?
(பின்குறிப்பு: இது கற்பனை கதை இல்லை)

கொடுக்கப்படாத கிரெடிட் கார்டுக்கு வழக்கு தொடுக்கும் ICICI வங்கி.

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த திரு. சுகுமார் ஒரு M.TECH பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கும் ICICI வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்நிலையில் இவருக்கு கடந்த ஜனவரி மாதத்தில் ICICI வங்கியில் இருந்து கிரெடிட் கார்டுக்கான பாக்கித்தொகை ரூபாய் 36 ஆயிரத்தை கட்டச்சொல்லி ஒரு பில் வந்துள்ளது.


முகவரிப்பகுதியில் பெயர் சுகுமார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இனிஷியலிலும், பெயரின் ஸ்பெல்லிங்கிலும் சில மாறுபாடுகள் இருந்தன. எனவே வேறு யாருக்கோ போகவேண்டிய பில் தனக்கு வந்திருக்கலாம் என்று எண்ணிய திரு. சுகுமார், இது குறித்து அந்த வங்கியின் அண்ணா சாலை கிளைக்கு நேரில் சென்று புகார் செய்துள்ளார்.


அவரை மடக்கி, மடக்கி கேள்வி கேட்ட வங்கி அதிகாரிகள், அவருக்கு எந்த தகவலையும் கூறாமல் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்குள் அவர் பாக்கித்தொகை செலுத்தாதற்காக அவர் மீது தமிழ்நாடு சட்டப்பணி ஆணையத்தி்ல் புகார் செய்யப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நாளில் அவர் அங்கு ஆஜராக வேண்டும் என்றும் மற்றொரு கடிதம் வந்தது.


இதைக்கண்ட திரு. சுகுமார், தாம் கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பம் செய்யவில்லை எனறும், தமக்கு ICICI வங்கி கிரெடிட் கார்டு எதையும் வழங்கவில்லை என்றும், எனவே வழங்காத கிரெடிட் கார்டுக்கு வசூல் செய்ய முற்படும் ICICI வங்கியிடம் இருந்து தமக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரி ஒரு விண்ணப்பத்துடன் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையத்துக்கு சென்றார்.


அன்றைய தினத்தில் ICICI வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி நொந்துபோயிருந்த பலரும் அங்கு இருந்தனர். அவர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரின் தலைமையில் வழக்கறிஞர் ஒருவரும், சமூகப்பணியாளர் என்ற பெயரில் ஒருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் வங்கி அதிகாரி ஒருவரும், வங்கியின் வழக்கறிஞர் ஒருவரும் கூட இருந்தனர்.


கிரெடிட் கார்டு வணிகம் செய்யும் வங்கிகள் அனைத்தும் நுகர்வோர் குறைதீர் அமைப்பு ஏற்படு்த்தவேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதியை புறக்கணிக்கும் வங்கியும், அதைப்பற்றி கண்டுகொள்ளாத நீதித்துறையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்வதில் மட்டும் குறியாக இருப்பதை உணர முடிந்தது.


திரு. சுகுமாரின் பெயர் அழைக்கப்பட்டபோது, அவர் தாம் கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பிக்கவே இல்லை. எனவே தமக்கு பில் அனுப்பியதே தவறு. தற்போது சட்டப்பணிகள் ஆணையம்வரை வரவழைத்ததற்காக தமக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.
நஷ்டஈடு குறித்து பேசாத வங்கியின் வழக்கறிஞர், திரு. சுகுமாருக்கு உதவி செய்யத்தயாராக இருப்பதாகவும், அவரை இந்த விவகாரத்தில் இருந்து கழற்றி விடுவதாகவும் உறுதி அளித்தார். ஆனால் திரு. சுகுமார், தமக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கவே அந்த வழக்கறிஞர் பதில் அளிக்கவில்லை.

அமர்வுக்கு தலைமை தாங்கிய ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதியோ, மற்ற உறுப்பினர்களோ திரு. சுகுமாரின் நஷ்டஈடு கோரும் மனுவை பெறுவதற்குக்கூட முன்வரவில்லை. எனவே அந்த மனு சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் அலுவலகத்தில் புகாராக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இது போன்ற பிரசினைகளில் சிக்கியுள்ள நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டால் பொதுநலன் வழக்கு மூலம் இது போன்ற பிரசினைகளை தடுக்க முயற்சி மேற்கொள்ள முடியும்.

சிறப்பு பொருளாதார மண்டலம் - ஒரு சிறப்பு பார்வை (2)

தேடல் என்ற இந்த குறும்படம் நம்மை நாம் தேட பயன்படும்...

கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்.

நிதியாண்டு முடிவடையும் தறுவாயில் கடன் வழங்கிய நிறுவனங்கள் கடன் வசூல் பணியை முடுக்கி விடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...

நினைவில் நிறுத்துங்கள்!

கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பதும் கிரிமினல் குற்றம் அல்ல ! (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)
.
நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது. கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.
.
காவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு)
.
கடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டு வசூல் நடைமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வங்கிகளின் வசூல் முகவர்களுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும். வசூல் முகவர்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றாமல் தவறுகளை செய்தால், அந்த முகவர்கள் மட்டும் அல்ல, அவர்களை கண்காணிக்காத வங்கிகளும் சட்டததின் முன் குற்றவாளிகளே !
.
நீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.
.
வங்கிகள், அவற்றின் கடன் வசூல் முகவர்கள் ஆகிய எவரொருவரும் கடன் வசூல் நடவடிக்கைகளின்போது , கிரெடிட் கார்டு நுகர்வோர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றவர்களை வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. அதேபோல பொது இடத்தில் அவமானப்படுத்துதல், தனிமையை குலைத்தல், தொலைபேசி மூலம் அடையாளமற்று மிரட்டுதல், தவறான மற்றும் திசை திருப்பும் தகவல்களை அளித்தல் ஆகியவையும் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கையின் பிரிவு 7 (ii) c திட்டவட்டமாக கூறுகிறது.
.
இந்த நடவடிக்கைகள் இந்திய தண்டனை சட்டத்தின்படியும் குற்றமென கூறப்பட்டுள்ளது.

உங்கள் அனுமதியின்றி வீட்டில் நுழைவதே குற்றம் !

உங்கள் வீட்டில் வங்கிப்பணியாளர்களோ, வசூல் முகவர்களோ உங்கள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தால் இ.த.ச பிரிவு 441ன்படி குற்றம்.
.
வேறு ஒருவரின் உடமையில் இருக்கும் ஒரு சொத்தினுள், அதன் உரிமையாளரை மிரட்டும், அவமானப்படுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் அல்லது குற்றம் செய்யும் கருத்துடன் நுழைகிற, அல்லது இதற்காக அங்கேயே சட்ட விரோதமாக தங்கியிருக்கிற எவரொருவரும் , குற்றமுறு அத்துமீறல் புரிந்ததாக கூறப்படுவார்.
.
இவ்வாறு குற்றமுறு அத்துமீறல் புரியும் எவரொருவருக்கும் மூன்று மாதம் வரை சிறைக்காவலோ அல்லது 500 ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் என்று அதே சட்டத்தின் பிரிவு 447 கூறுகிறது.
.
வீட்டினுள் அத்துமீறல் என்ற குற்றத்தை செய்ய உடல் உறுப்புகளில் எந்த பாகத்தையாவது வீட்டினுள் புகுத்தினாலே அத்துமீறல் குற்றத்தை செய்வதாகும். (பிரிவு 442)
.
ஒருவருக்கு காயம் விளைவிப்பது, தாக்க முனைவது, முறையின்றி தடை செய்வது, இக்குற்றங்களை செய்வதற்கென்று வீடு புகுந்தால், அதற்கு ஏழாண்டுகாலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். (பிரிவு 452)

அவதூறாக பேசுதல் !

உங்கள் நற்பெயரை கெடுக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் எவரேனும் செயல்பட்டால் அதுவும் சட்டப்படி குற்றமே.ஒருவருடைய நற்பெயரை பங்கப்படுத்தி கெடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய கேடு ஏற்படும் என்று அறிந்திருந்து அல்லது நம்பக்காரணம் பெற்றிருந்து பேச்சால், எழுத்தால், அடையாளங்களால் அல்லது காட்சிப்பொருள்களால் அவரைப்பற்றி பழி சாட்டுதல் எதனையும் செய்கிற அல்லது வெளியிடுகிற எவரொருவரும், அவதூறு செய்ததாக சொல்லப்படுவார். (பிரிவு 499)
.
இன்னொருவருக்கு அவதூறு செய்கிற எவரொருவருக்கும் இரண்டாண்டுகள் வரை வெறுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 500)

அச்சுறுத்தல், நேரடியாக, தொலைபேசி, கடிதம் வழியாக மிரட்டுதல் !

கடனை வசூலிக்க முகவர்கள் என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள் அனைவரும் செய்யும் அனைத்து செய்கைகளும் குற்றச்செயல்களே.
.
ஒருவருடைய அல்லது அவர் அக்கறை காட்டும் மற்றொருவருடைய உடலுக்கு, உடமைக்கு அல்லது நற்பெயருக்கு தீங்கிழைக்கப்படும் என்று அவருக்கு பீதியை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது சட்டப்படி ஒரு செயலை செய்ய உரிமையற்று இருந்தபொழுது அதைச்செய்யவோ அல்லது சட்டப்படி ஒரு செயலைச் செய்யவோ உரிமை பெற்றிருந்தபொழுது அதைச் செய்யவிடாமல் விட்டுவிடும்படி வற்புறுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒருவரை அந்த மிரட்டலுக்கு இணங்கி, அவர் செயல்படுமாறு செய்வதற்காக மிரட்டுவதை குற்றமுறு மிரட்டல் எனலாம்.
.
பிரிவு 503: குற்றமுறு மிரட்டல் செய்பவர்களுக்கு 2 வருடங்கள் சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும்.
.
பிரிவு 506: அநாமதேயக் கடிதத்தின் மூலம் அல்லது யார் மிரட்டுகிறார்கள், எங்கிருந்து மிரட்டுகிறார்கள் என்ற விவரம் மற்றவருக்கு தெரியாத வண்ணம், மறைந்திருந்து மிரட்டுவோருக்கு, முன்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை சிறைக்காவல் தண்டனை அதிகப்படியாக விதிக்கப்படும்.

பெண்களை அவமதித்தல் !

ஒரு பெண்ணின் கற்புநெறியை அவமதிக்கும் வண்ணம், அப்பெண் காணும்படி அல்லது கேட்கும்படி யாரேனும் ஏதேனும் ஒரு சொல்லைக்கூறுவதும், ஒலியெழுப்புவதும் சைகை காட்டுவதும், அல்லது அந்த பெண்ணின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதும் குற்றமாகும். இதற்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும்.

அரசுப்பணியாளரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல் !

அரசுப்பணியாளர்களை அவர்களது வேலை நேரத்தில் எவ்வாறு தொந்தரவு செய்தாலும் குற்றம்தான். அரசுப்பணியாளர் ஒருவரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்கும் எவரொருவரும் குற்றவாளியே. அத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையோ, 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 186)

ஆட்கடத்தல் மற்றும் அடைத்து வைத்தல் !

கிரெடிட் கார்டு கடனை வசூலிப்பதற்காக எவரையெனும் கடத்துவதும் இந்த சட்டத்தின்படி தவறுதான். ஒரு இடத்திலிருந்து செல்லும்படி ஒருவரை வன்முறையாலோ அல்லது வஞ்சனையான முறைகளாலோ கட்டாயப்படுத்துவது ஆட்கடத்தல் ஆகும். (பிரிவு 362)
.
ஒரு குறிப்பிட்ட திசையில் செல்ல உரிமை பெற்றுள்ள ஒரு நபரை அத்திசையில் செல்லவிடாமல் தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவது முறைகேடான தடுப்பு எனக்கூறப்படுகிறது (பிரிவு 339)
.
ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட எல்லையை மீறிச்செல்ல முடியாத வகையில், எவரையேனும் முறைகேடாக தடுப்பதை முறைகேடான சிறைவைத்தல் என்பர். (பிரிவு 340)
.
மறைவாகவும், முறைகேடாகவும் சிறைவைக்கும் கருத்துடன் ஆளைக்கவர்தலும், ஆளைக்கடத்தலும் குற்றமாகும். அதற்கு 7 ஆண்டுக்காலம் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 365)
.
முறைகேடான தடுப்பு செய்பவருக்கு ஒரு மாதம் சிறையோ, அல்லது 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 341)
.
முறைகேடான சிறைவைத்தல் புரியும் எவரொருவருக்கும் ஒராண்டு வரை சிறைக்காவலோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் (பிரிவு 342)

தாக்குதல் !

கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் தாக்க முயற்சிப்பதே தவறுதான்.எந்த ஒருவரின் மீதாவது வன்முறையை கருத்துடன் பயன்படுத்துதல்;அத்தகு வன்முறை அந்நபரின் சம்மதமின்றி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அத்தகு வன்முறை பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,
.
(i)ஒரு குற்றத்தை செய்வதற்காக, அல்லது
(ii)அந்நபருக்கு கேடு அச்சம் அல்லது தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அவை அநேகமாக விளையக்கூடும் என்று அறிந்திருந்து, அத்தகு வன்முறையை பயன்படுத்துதல் குற்றமுறு வன்முறை எனப்படும் (பிரிவு 350)
.
ஒருவர், தம் முன்னுள்ள மற்றொருவரின் மீது குற்றமுறு வன்முறையை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு சைகையோ அல்லது ஒரு ஆயத்தமோ செய்தால், அது தாக்க முனைதல் ஆகும் (பிரிவு 351).
.
குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்தி தாக்கும் நபருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைக்காவலோ அல்லது ஐநூறு ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 352).

வங்கி அதிகாரிகளும் குற்றவாளிகளே !

வசூல் முகவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் தப்ப முடியாது. அவர்களும் குற்றவாளிகள் என்று சட்டம் கூறுகிறது.
.
குற்ற உடந்தை: ஒன்றினை செய்வதற்கு ஒருவர் எப்பொழுது உடந்தையாகி இருக்கிறாரென்றால், அவர்...
முதலாவதாக : அச்செயலை செய்ய எவரையேனும் தூண்டுதல், அல்லது
இரண்டாவதாக : அச்செயலைப் புரிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் சதியில் ஈடுபடுதல்: அச்சதியின் விளைவாக ஒரு செயலோ அல்லது சட்ட விரோதமான ஒரு செயல் தவிர்ப்போ நிகழ்த்தி அச்செயலைச் செய்தல் அல்லது
மூன்றாவதாக : செய்கை அல்லது செயல் தவிர்க்கை ஏதேனுமென்றால் அந்தச் செயலை செய்வதற்கு கருத்துடன் உதவி செய்தல் - ஆகியோர் குற்ற உடந்தை புரிந்தோராக கருதப்படுவர். (பிரிவு 107)
.
எந்தக்குற்றம் நடைபெற உடந்தையாக இருக்கிறாரோ அந்தக் குற்றத்திற்கு தண்டனைத் தொகுப்பால் கூறப்பட்டுள்ள தண்டனையை குற்ற உடந்தையாளர்அடைய வேண்டும் என்று பிரிவு 109 கூறுகிறது.

தற்காப்புரிமை !

கிரெடிட் கார்டு கடன் வசூல் என்ற பெயரில் குண்டர்கள் அராஜகம் செய்யும்போது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க சட்டம் உங்களுக்கு பல உரிமைகளை அளிக்கிறது.
.
உடல் தற்காப்புரிமை : தற்காப்புரிமையை பயன்படுத்தும்பொழுது செய்யப்படும் எதுவும் குற்றமில்லை. (பிரிவு 96)
முதலாவதாக, தனது உடலையும், மற்றவர்கள் உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துத்கொள்ள உரிமை.
இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. (பிரிவு 97)
.
உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதைக் குற்றமாக கருதமுடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும்.
.
அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.
1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத் தக்கதான ஒரு தாக்குதலின்போது,
2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்பொழுது,
3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்போது,
4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்துகொள்ளும் கருத்துடன் தாக்கும்போது,
5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்பொழுது,
6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில் ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்போது,
மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதலில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம்.
.
இந்தச் சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயங்களை விளைவிப்பதோ குற்றமாவதில்லை என்று பிரிவு 101 கூறுகிறது.
.
எனினும், பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கே தற்காப்புரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும், அதைவிட அதிகமாகக்கேடு விளைவிக்கும் வகையில் தற்காப்புரிமையை பயன்படுத்தக்கூடாது என்றும் பிரிவு 99 உட்பிரிவு 3 எச்சரிக்கிறது.

கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் குண்டர்கள் மிரட்டினால் என்ன செய்வது ?

கிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.
.
அந்தப்புகாரில் வசூல் முகவர்களுடன் மற்றும் வங்கி அதிகாரிகளையும் எதிர் தரப்பினராக சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல் படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.
.
காவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக்கொண்டதற்காக ரசீது ஒன்றை அளிப்பார்கள். அதை பெற்றுக்கொள்ளுங்கள். அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.
.
காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள். அப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும்.
.
நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.
.
மிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள்.
.
சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள். கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை.
.
கடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம்.
-ஆசிரியர் குழு

தடை செய்யப்பட்ட, தேவையற்ற மருந்துகளை அரசாங்கம் ஏன் அனுமதிக்கின்றது?

தடை செய்யப்பட்ட, தேவையற்ற மருந்துகளை ஏன் மருந்து கம்பெனிகள் உற்பத்தி செய்கின்றன?

லாபமே குறிக்கோள் என்பதில் கம்பெனிகள் தெளிவாக இருப்பது தான் காரணம்.

மற்ற அனைத்துத் தொழில்களையும் விட மருந்து தயாரிப்புத் தொழில் அதிக லாபம் தரக்கூடியது. அதாவது ஆயுத உற்பத்தித் தொழிலுக்கும் சிகரெட் தயாரிப்புத் தொழிலுக்கும் அடுத்து 3வது இடத்தில் இந்த மருந்து தயாரிப்புத் தொழில் இருக்கிறது. பொருளாதார மந்தம் இருக்கின்ற இந்தக் காலத்தில் கூட பல புதிய கம்பெனிகள் உருவாகிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கின்றன. அவசியமானது என்ற பட்டியலில் வரும் மருந்துகளில் லாபம் குறைவு. அவசியமற்ற மருந்துகளில் நோயாளிகளிடமிருந்து எவ்வளவு பறிக்க முடியுமோ அதைப் பொறுத்தது லாபம். ஆனால், இதற்கு மருத்துவர்கள் அந்த மருந்தை எழுதிக் கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் ஏன் இந்த மருந்துகளை அனுமதிக்கின்றது?

அரசுக்கு இரு நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவர்களுக்குச் சார்பாக அரசின் முடிவுகள் இருக்கின்றன. மருந்து உற்பத்தித் தொழிலில் ஏராளமான பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் பணபலம் பயங்கரமானது. இவற்றில் பல கம்பெனிகளின் ஆண்டு வரவுசெலவு நமது தேசத்தின் பட்ஜெட் போல் பெரியது.


அதோடு மருந்து உற்பத்தித் தொழில் மிகப்பெரிய இந்தியக் கம்பெனிகளும் இருக்கின்றன. இந்தக் கம்பெனிகள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியையும் தமது செல்வாக்கையும் தங்களுக்கு ஆதரவான கொள்கையை உருவாக்குவதற்காகச் செலவிடுகின்றன. ஒரு புறத்தில் கம்பெனிகளின் இந்த அசுரபலம் என்றால் மறுபக்கத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்களின் குரல், குறிப்பாக, மருந்துக் கொள்கை போன்ற பிரச்சனைகளில் பலவீனமாக இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு இந்த மருந்துக் கொள்கை பற்றிய விபரம் தெரிவதில்லை.


நடுத்தர வர்க்கம் குறிப்பாக, அரசியல் அடிப்படையில் அணி திரண்டு இருப்பவர்களுக்கு இது தெரியும். ஆனால், மருத்துவத் தொழில்மீது இருக்கக்கூடிய மரியாதை மற்றும் நவீன விஞ்ஞானத்தோடு தொடர்புடைய ஒன்றை எதிர்ப்பதா என்ற எண்ணம் ஆகிய காரணங்களால் இவர்கள் ஏதும் செய்யாமல் இருக்கின்றனர்.


சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் அவை சக்தியற்ற, தாக்கத்தை ஏற்படுத்தாத, அமைப்பு ரீதியாக வலு இல்லாததாகவும் உள்ளன. சுகாதாரத் துறையில் செயலாற்றும் சில அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அறிவியல் இயக்கங்களும் இப்பிரச்னையைக் கையில் எடுக்கின்றன. இவர்களின் உறுதியான அறிவியல் ரீதியான நிலைப்பாடும் பல நேரங்களில் உச்சநீதிமன்றத்தின் தலையீடும்தான் பல்வேறு சூழலில் ஆபத்தான மருந்துகளைப் புழக்கத்திலிருந்து தடை செய்தது. உண்மையில் உச்சநீதிமன்றத்தின் மூலம்தான் ஆபத்தான மருந்துகளை இக்குழுக்களால் தடை செய்ய முடிந்துள்ளது.


மருந்துத் தொழில்துறையை ஊக்குவிப்பது ரசாயன மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் முக்கியப் பொறுப்பு. ஆனால் மருந்துத் தொழில்துறை தொடர்பான பிரச்னையையும் இந்த அமைச்சகம்தான் பார்த்துக் கொள்கிறது. சுகாதார அமைச்சகத்தின் பங்கு இதில் மிக மிகக் குறைவாக உள்ளது. மருந்து உற்பத்தித் தொழில் துறையை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்துவதிலும் வளர்ப்பதிலும் தான் இத்துறை குறியாக இருக்கிறது. அதையே இலக்காகவும் கொண்டுள்ளனர். எனவே, அவசியமான மருந்துகள் எவை, அவசியமற்ற மருந்துகள் எவை, தேவையானவை எவை என்பதை இத்துறை வேறுபடுத்திப் பார்ப்பதே கிடையாது.

இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு டாக்டர்கள் ஏன் எழுதிக் கொடுக்கிறார்கள்?

இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் ஓர் அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். மருந்து என்பது ஒரு பண்டம் (ஒரு பொருள்) சந்தையிலிருக்கிற இதர பண்டங்களிலிருந்து அது மாறுபட்டது. நாம் ஒரு பேனாவோ, சட்டையோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியோ வாங்குவதற்குச் சென்றால், எதை வாங்க வேண்டும் என்பதை, மற்ற கம்பெனி பொருள்களின் தரம் மற்றும் விலையோடு ஒப்பிட்டுப் பார்த்து சிறந்ததை வாங்க முடியும். ஆனால், நீங்கள் மருந்து வாங்கச் சென்றால், எந்த மருந்தை வாங்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. எதை வாங்க வேண்டும் என்பதை டாக்டர்தான் உங்களுக்காகத் தீர்மானிப்பார். அந்த மருந்தை எதற்குக் கொடுக்கிறார், எந்த மருந்து சிறந்தது, அதைச் சாப்பிட்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும், எழுதிக் கொடுத்த மருந்துக்கு மாற்றாக விலை குறைந்த மருந்து எதுவும் இருக்கிறதா என்பதைக் கூட உங்களால் தீர்மானிக்க முடியாது; தெரிந்து கொள்ளவும் இயலாது. இந்த முடிவுகள் அனைத்தும் எடுப்பதற்கு நீங்கள் டாக்டர்கள் மீது நம்பிக்கை வைத்தாக வேண்டும்.

மருந்துக் கம்பெனிகள் தங்களது மருந்துகளை விற்பனை செய்வதற்கு எடுக்கின்ற பிரதான முயற்சி என்னவென்றால், தனது கம்பெனியின் மருந்தை டாக்டர்களை எழுத வைப்பதுதான், மருத்துவத் தொழிலின் கட்டமைப்பை இந்த வேலையைச் செய்வதற்கு அக்கம்பெனிகள் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதைச் செயல்படுத்துவதற்குக் கையாளும் சில உத்திகளைக் கீழே காண்போம்.

* ஒவ்வொரு மருந்துக் கம்பெனியும், தமது மருந்து விற்பனைப் பிரதிநிதி மூலம் தொடர்ச்சியாக டாக்டரைச் சந்திக்கின்றன. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை இவர்கள் டாக்டரைச் சந்தித்து கம்பெனியின் பெயர்களுடன் மருந்துகளை அறிமுகப்படுத்தி, இலவசமாக சில மருந்துகளையும், பரிசுப்பொருட்களையும் கொடுத்துச் செல்லுவார்கள்.

* இதற்கு அடுத்தபடியாக, இந்தக் கம்பெனிகள் டாக்டர்களின் கூட்டங்களை நடத்தி மருந்துகளைப் பிரபலப்படுத்தி அவற்றின் விற்பனையைப் பெருக்க நடவடிக்கை எடுக்கின்றன. கம்பெனிகளின் மருந்துகளை எழுதுவதற்காக டாக்டர்களுக்குப் பரிசுகளையும், சிறப்புச் சலுகைகளையும் அவை கொடுக்கின்றன.

* மருந்து எழுதுகிற சீட்டுகள், மருத்துவமனைகளில் ஒட்டுகிற சுவரொட்டிகள் இதர பரிசுப்பொருட்களில் தங்கள் கம்பெனியின் பெயர்களை அச்சடித்து டாக்டர்களிடம் கொடுப்பதன் மூலம் தங்கள் கம்பெனியின் பெயர்களைத் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இவ்வகை பிரசாரம் அக்கம்பெனியின் பெயரை டாக்டர்களின் மனதில் ஆழப்பதிய வைக்கிறது. கடைசியில் அந்த மருந்தின் வர்த்தகப் பெயரை மட்டுமே டாக்டர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.

* அக்கம்பெனிகள் அளிக்கும் தகவல்கள் மூலம் தான் மருந்துகளைப் பற்றி டாக்டர்கள் தெரிந்து கொள்கின்றனர். இவர்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் மருந்துகளைப் பற்றிப் படித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. நவீன கால மருந்துகளை டாக்டர்கள் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள், நவீன முன்னேற்றத்துக்கு ஏற்ப மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் டாக்டர்களின் தற்போதைய அறிவை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஏற்பாடு இல்லை. டாக்டர்கள் சிறப்பு முயற்சி எடுத்து, கூட்டங்களில் கலந்து கொண்டோ, புத்தகங்களை வாங்கிப் படித்தோ தெரிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி முயற்சி மேற்கொள்ளாத டாக்டர்கள், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் தான் புதிய மருந்துகளை பற்றித் தெரிந்து கொள்கின்றனர். வளர்ந்த நாடுகளில் டாக்டர்களுக்கென கட்டாய தொடர்கல்விமுறை உள்ளது. ஆனால் இந்தியாவில் அவ்வகை ஏற்பாடுகள் இல்லை.

* என்ன நோய்க்கு என்ன மருந்தைக் கொடுக்கலாம் என்று விவரங்கள், அக்கம்பெனிகள் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், அவற்றால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்ற விவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகிய தகவல்கள் அடங்கிய புத்தகத்தை மாதம் தோறும் அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறை வளர்ந்த நாடுகளின் அரசுகள் வெளியிடுகின்றன. இந்தப் புத்தகங்களில் மருந்துக் கம்பெனிகளின் விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை. இந்த முறைக்கு தேசிய மருந்து விதிமுறைகள் என்று பெயர். இந்தியாவில் மருந்துக் கம்பெனிகளே தயாரித்து வெளியிடுகின்ற புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. தாம் தயாரிக்கும் மருந்துகளின் விற்பனையைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்ட விளம்பரங்களும் அத்தகைய புத்தகங்களை மருந்துக் கம்பெனிகள் வெளியிடுகின்றன. மருந்துகளைப் பற்றிய வர்த்தக நோக்கம் இல்லாத நம்பகமான உடனடி தகவல்கள் இந்தியாவில் டாக்கடர்களுக்குக் கிடைப்பது இல்லை.

மற்றொரு முக்கியக் காரணம் வியாதி. அதைக் குணப்படுத்துவது சுகாதாரம் ஆகியவை தொடர்பான தற்போதைய பழக்கவழக்கங்கள் ஆகும். டாக்டரைப் பார்த்து ஏன் இந்த மருந்தை எழுதிக் கொடுத்தீர்கள்? என்று கேட்டால் நோயாளிகள் கேட்டார்கள் அதனால் எழுதிக் கொடுத்தோம் என்கிறார்கள். தொழிலை நடத்துவதில் டாக்டர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு இடையிலான போட்டி மேலும் கடுமையாகிறது. தங்களிடம் வருகிற நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கவில்லை என்றால், வேறு டாக்டரிடம் அவர்கள் சென்று விடுவார்கள் என பயப்படுகின்றனர்; அதனால் ஊசிகளைப் போட்டு இந்த மருந்துகளை எழுதுகின்றனர். ஊசிகள், மாத்திரைகளின் சக்தியைப் பார்த்து பரவசமடைந்த டாக்டர்களே இந்தப் பழக்கவழக்கத்தையும் தொடங்கி வைத்திருக்கலாம்.


ஆனால், எப்படியோ டாக்டர்கள் தொடங்கி விட்டு விட்ட பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் ஊசி போடுதல், மாத்திரை வழங்கல் என்ற வட்டத்துக்குள் அவர்கள் சிக்கிக் கொண்டு விட்டனர். நோயாளிகளிடம் நோயின் தன்மைகள் அதற்கு எவ்வகையான சிகிச்சை தேவை என்பதை விளக்கிக் கூறினால் நோயாளிகள் அச்சிகிச்சை முறைகளைச் செய்து பார்க்க ஒப்புக் கொள்வார்கள். இதனைச் செய்தால் நோயாளிகள் மருந்துகளை நாட வேண்டிய அவசியம் குறையும். பெரும்பாலும் டாக்டர் நோயாளிகளிடம் இது சிறு கோளாறு தான்; தானே சரியாகிவிடும் என்றோ, அல்லது இது என்ன நோய் என எனக்குத் தெரியவில்லை என்றோ அல்லது இது என்ன நோய் என்று தெரிகிறது; ஆனால் இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றோதான் கூற வேண்டியிருக்கும்.


ஆனால் டாக்டர்கள் என்றால் அவர் ஏதோ மந்திரவாதி. மாயம் செய்யக்கூடியவர் என்ற கருத்தே நிலவுகிறது. எனவே நோயாளி வந்தவுடன் டாக்டர் அவரது கையைப் பிடித்து நாடி பார்க்க வேண்டும். நாக்கை நீட்டச் சொல்லி, கண்களை இழுத்துப் பார்க்க வேண்டும். ஸ்டெத்தாஸ்கோப்பை நெஞ்சிலும் முதுகிலும் வைத்துப் பார்ப்பதுடன் மேலும் சோதனைகளை உடனே நடத்த வேண்டுமென்ற கருத்தும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அதோடு அந்த நோய் என்ன என்பதை அவர் எப்போதும் கண்டுபிடித்து விடுவார். அதை குணமாக்கிட மருந்துகளையும் அவர் அறிந்திருப்பார் என்கிற அளவுக்கு டாக்டர்களைப் பற்றி மாயையான கருத்து ஏற்பட்டு விட்டது. அறிவியலையே மந்திரவாதம் போலச் சித்திரிக்கத் தொடங்கி விட்டனர். டாக்டருக்கு அது அற்புத சுகமளிக்கும் சக்தியைக் கொடுத்திருப்பதாக நினைக்கத் தொடங்கி விட்டனர்.


ஆனால் உண்மை என்னவெனில், விஞ்ஞானம் இன்னும் பலவற்றிற்கு விடை கண்டுபிடிக்கவில்லை. வினோதம் என்னவென்றால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலாக டாக்டர்கள் தங்களது மாயத் தோற்றத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டியது தமது கடமை என நம்புகின்றனர். டானிக்குகள் அவசியமற்ற மருந்துகளை எழுதிக் கொடுப்பதை நியாயம் என்று கருதினர். பெரும்பாலான நேரங்களில், நோயாளிக்கு வந்துள்ள நோய்க்குக் காரணம் என்ன என்று தெரியாவிட்டாலும் கூட அல்லது, தானாகவே அந்தக் கோளாறு சரியாகிவிடும் என அவர்கள் கருதினாலும் கூட அல்லது முக்கியமாக, அது என்ன நோய் என்பதை தெரிந்திருப்பதோடு, அதற்கு மருந்து ஏதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் அறிந்திருந்தாலும் கூட, தேவை இல்லாமல் பல மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கின்றனர். அது தவறானது என்ற உணர்வே டாக்டர்களுக்கு பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது.

உதாரணத்திற்கு, மஞ்சள் காமாலையை எடுத்துக் கொள்வோம். மஞ்சள் காமாலை வந்து விட்டால் போதும். நோயாளி பெரும் கவலையில் மூழ்கிவிடுவார். அதில் நியாயம் இருக்கிறது. அதை உடனே டாக்டரிடம் காட்ட வேண்டும். கல்லீரல் சுரக்கும் பித்த நீர் இரைப்பைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஏற்படும் அடைப்பினால் சில நேரங்களில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதுண்டு. டாக்டர் இதை அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துவார். இருந்தாலும் மஞ்சள் காமாலை அதிகமாக ஏற்படுவது கிருமிகளால்தான். இதைக் குணப்படுத்த, பயனுள்ள ஒரு சிகிச்சை முறையை இன்னும் விஞ்ஞானம் கண்டுபிடிக்கவில்லை. இருந்தாலும் ஓய்வெடுப்பதன் மூலமும், சிலவகை மருந்துகளைத் தவிர்ப்பதன் மூலமும் சாதாரண வகைப்பட்ட மஞ்சள் காமாலை தானாகவே குணமாகிவிட வாய்ப்புண்டு. சில நேரத்தில் நோய் கடுமையாகி விடும். அதையும் தடுக்க முடியாது. அது மருத்துவ விஞ்ஞானத்தினால் கணிக்க முடியாததும் கூட.


மஞ்சள் காமாலையில் இரு வகைகள் உள்ளன என்பதை தற்போது மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது ஒரு சாதனை ஆகும். அவற்றில் கல்லீரலில் இருந்து பித்த நீர் செல்லும் பாதையில் தடை ஏற்படுவதால் வரக்கூடிய மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி விட முடியும். உண்மை இப்படியிருக்க, தானாகவே குணமாகக்கூடிய இன்னொரு வகை மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மருந்துகளைக் கொடுப்பதன் அவசியம் என்ன? அவர்களுக்கு வந்துள்ள நோய் என்ன? இந்த நோய் தானாகவே குணமாகிவிடும். அல்லது குணமாக விடுங்கள் என்று ஏன் நோயாளிகளிடம் சொல்லக்கூடாது? இப்படிச் சொன்னால் நோயாளிக்கு நிறைய பணம் மிச்சமாகாதா? எனினும், மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுக்காமல் இருப்பதை நோயாளிகளும் சரி, டாக்டர்களும் சரி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.


இதை நோயாளிகளிடம் விளக்கினால், நோயாளிகள் தங்களை நம்பமாட்டார்கள் என டாக்டர்கள் கருதுகின்றனர். அதோடு நோயாளியிடம் விளக்கிக் கூற டாக்டர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. அந்தச் சிந்தனையும் வருவதில்லை. பரவலாகக் காணப்படும் இச்சாதாரண நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தை டாக்டர் வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் நோயாளி. ஆயுர்வேத மருத்துவ முறையிலும் நாட்டு மருந்துகள் மூலமும் மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறும்போது, நவீன அறிவியல் இந்நோய்க்கு மருந்தை நிச்சயம் கண்டுபிடித்திருக்கும் என நோயாளி நம்புகிறார்.


இதற்கு டாக்டர்கள் மருந்து கொடுக்கவில்லையென்றால் டாக்டரிடம் தான் ஏதோ கோளாறு என்றோ, அல்லது ஆங்கில மருத்துவ முறையில் தான் ஏதோ கோளாறு என்றோ நோயாளி நினைக்கத் தொடங்கி விடுகிறார். நோயாளிகளிடம் காணப்படும் இந்தப் பழக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் மேலும் ஊக்குவிப்பதன் மூலமும் மருந்துக் கம்பெனிகள் தமது வியாபாரத்தைப் பெருமளவு பெருக்கி அதன் மூலம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. தானாகவே குணமாகக் கூடிய மஞ்சள் காமாலைக்குக் கூட மருந்தை உற்பத்தி செய்து கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கின்றனர்.

ஏன் மக்கள் இந்த மருந்துகளை உட்கொள்கின்றனர்?

நாம் ஏற்கெனவே 2 முக்கியக் காரணங்களை விவாதித்துள்ளோம். முதலாவதாக மருந்து என்பது ஒரு பண்டம். மற்ற பண்டங்களிலிருந்து மாறுபட்டது. இங்கு எந்த வகை மருந்துகளை வாங்க வேண்டும் என்பதை நோயாளியாகிய நுகர்வோர் தீர்மானிப்பது இல்லை; டாக்டர் தான் தீர்மானிக்கிறார். தேவையற்ற இத்தனை மருந்துகளையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்தை ஒரு நோயாளிக்கு டாக்டர் ஏற்படுத்த முடியாது என்பது தெளிவு. அப்படியானால், நோயாளிக்கு இந்த விருப்பம் எப்படி உருவாக்கப்படுகிறது.

பலவித உடல்நலக் கோளாறுகள் நோயாளிக்கு ஏற்படக்கூடும் என்பது முதல் விஷயம். அந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதும் அதற்கு மருந்துகள் அவசியம் தேவை என்பதையும் மறுக்க முடியாது. பிரச்னை என்னவென்றால் தமக்குத் தேவையான மருந்துகள் எவை, தேவையற்ற மருந்துகள் எவை என்பதை வேறுபடுத்திப் பார்க்க நோயாளிக்குத் தெரியாது. இதற்குக் காரணம் நோயாளிக்கு மருந்தைப் பற்றி சரியான தகவல்கள் கிடைக்காததுதான்.

டாக்டர்களோ, என்ன நோய் வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் கொடுக்கப்படுகிற மருந்துகளைப் பற்றியும் நோயாளிக்கு விளக்குவதில்லை. நோயாளிகளும் இதைப்பற்றி டாக்டர்களிடம் கேட்பதில்லை. மருந்துகளின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்றனர். ஒரு மருந்தை எதற்குப் பயன்படுத்துவது என்பது பற்றியும் அதன் பக்கவிளைவுகள் என்ன என்பது பற்றியும் எந்தத் தகவலும் பெரும்பாலும் மருந்துகளுடன் கொடுக்கப்படுவதில்லை. ஒருவேளை, மேற்படி விவரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவை ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. மருந்துகளின் பெயர்களை தமிழிலோ, அந்தந்த மாநில மொழிகளிலோ எழுதப்படுவதில்லை. மருந்துகளின் பெயர்களை பல மொழிகளில் அச்சிடுவது கம்பெனிக்கு கஷ்டமான காரியம் என நீங்கள் நினைத்து விடக்ககூடாது.


நீங்கள் ஒரு குலோப் ஜாமூன் மாவு பாக்கெட் வாங்கிப் பாருங்கள். அந்தப் பாக்கெட்டில் கூட அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி 15 மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். பிரான்ஸ் நாட்டு மக்கள் தொகையைவிட தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாகும்.


ஆனால், தமிழகத்தில் விற்பனையாகும் மருந்துகளில் அவற்றின் பெயர்கள் தமிழில் எழுதப்படுவதில்லை. எனவே, தமிழில் மருந்துப் பெயர்களை அச்சிட முடியாது என்பதெல்லாம் உண்மையல்ல. மருத்துவரின் சீட்டுகளைத் தமிழில்தான் எழுத வேண்டும். மருந்துப் பெயர்களையும் தமிழில் தான் எழுத வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் டாக்டர்கள் சங்கம் இம்முயற்சியை எதிர்த்தது. நோயாளிகள் நலனைக் கருத்தில் கொண்டு, மருந்துகளின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியக்கூடாது என டாக்டர்கள் வாதிட்டனர். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதா?

மருந்துகளைப் பற்றிப் போதிய அறிவு இல்லாதிருப்பது மற்றொரு முக்கியக் காரணம். அவை பெரும்பாலும் வர்த்தகப் பெயர்களில் விற்கப்படுவதாகும். ஒவ்வொரு மருந்துக்கும் 2 பெயர்கள் உண்டு. ஒன்று மருத்துவ விஞ்ஞானத்தால் வழங்கப்பட்ட மருந்தின் வேதியியல் மூலத் தொகுதிப் பெயர். (இது வேதிப் பொருளின் பெயர்) மற்றொன்று வர்த்தகப் பெயர். இது மருந்தைத் தயாரிக்கும் கம்பெனி சூட்டிக் கொண்ட பெயர். வேதிப் பொருளால் தயாரிக்கப்படும் மருந்தை ஒவ்வொரு கம்பெனியும் வெவ்வேறு வர்த்தகப் பெயர்களில் விற்கின்றன. இப்படி ஒரே வகை மருந்துக்கு நூற்றுக்கணக்கான வர்த்தகப் பெயர்கள் உள்ளன.


பிளஸ்பிரின், கால்பால், மெலிடன்ஸ், இஃபிமால், குரோசின் இவை அனைத்தும் பாராசிட்டமால் என்ற ஒரே மருந்துதான். பாராசிட்டமால் என்பது அதில் உள்ள வேதிப்பொருளின் மருத்துவ விஞ்ஞானப் பெயர். மற்றவை அனைத்தும் வர்த்தகப் பெயர்கள். சட்டப்படி மூல மருத்துவப் பெயர்களை ஒவ்வொரு மருந்திலும் கட்டாயமாக அச்சிட வேண்டும் இதையும் கம்பெனிகள் செய்கின்றன. ஆனால் மிகமிகச் சிறிய எழுத்தில் அவை அச்சிடப்பட்டு இருக்கும். டாக்டர்கள் வர்த்தகப் பெயரை மட்டும் தான் எழுதிக் கொடுக்கின்றனர். எனவே, டாக்டர் கொடுப்பது என்ன மருந்து என்பதை அறிந்து கொள்ளமுடிவதில்லை; ஏற்கெனவே நாம் சாப்பிட்ட மருந்துதானா இது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு, இந்த மருந்தைச் சாப்பிட்டால் நமக்கு ஒத்துக் கொள்ளுமா அல்லது ஒவ்வாமை ஏற்படுமா என்பன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

ஒரு டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் என்ன மருந்தை அவர் எழுதியிருக்கிறார் என்பதை மற்றொரு டாக்டரால் கூட படித்துப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் இருநூறு, முந்நூறு மருந்துப் (வர்த்தப்பெயர்) பெயர்களுக்கு மேல் யாராலும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் பல்வேறு மருந்துகள் 40,000க்கும் மேற்பட்ட வர்த்தகப் பெயர்களில் சந்தையில் விற்கப்படுகின்றன.

ஒரு மருந்தின் வேதியியல் மூலத் தொகுதிப் பெயரை அதாவது மருத்துவ அறிவியல் பெயரை மட்டுமே மருந்து அட்டை மீது எழுத வேண்டும் என சட்டம் இயற்றினால் அவற்றின் எண்ணிக்கை சுமார் 300 தான் வரும். எனவே, அம்மருந்துகளின் பெயர்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதும் எளிது. அதோடு ஒவ்வொரு நோயாளியும் தான் உட்கொள்ளும் மருந்து என்ன என்பதையும் நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும்.

மருத்துவ அறிவியல் பெயர்களை மட்டும் அச்சிட்டால் போதும், வர்த்தகப் பெயர்கள் கூடாது என்பதை எதிர்க்கும் கம்பெனிகளும் டாக்டர்களும் அதற்கு ஒரு காரணத்தைக் கூறுகின்றனர். மருத்துவ அறிவியல் பெயரை (வேதிப் பொருளின்) மட்டும் வைத்தால், தரக்குறைவான மருந்துகளை உற்பத்தி செய்யும் சிறிய கம்பெனிகளும், ஓரளவு தரமான மருந்துகளைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களைப் போல தமது மட்டமான மருந்துகளை விற்றுவிடமுடியும் என்று வாதிடுகின்றனர்.


இது சொத்தையான வாதமாகும். மருந்துகளின் அறிவியல் (வேதிப் பொருளின்) பெயருக்குக் கீழே அவற்றைத் தயாரிக்கும் கம்பெனிகளின் பெயர் கட்டாயமாக இடம் பெற்றாக வேண்டும். ஒரு மருந்தின் எந்தக் கம்பெனியின் தயாரிப்பு வேண்டும் என்று டாக்டர்களும் நோயாளிகளும் விரும்புகிறார்களோ, அந்தக் கம்பெனியின் பெயரைப் பார்த்து மருந்துகளை வாங்க முடியும். பெரிய கம்பெனியோ, சிறிய கம்பெனியோ எல்லாவற்றின் தயாரிப்பிலும்தான் தரக் குறைவான மருந்து பிரச்னை இருக்கிறது. மருந்துப் பரிசோதனை முறையையும் தரக்கட்டுப்பாட்டை பலப்படுத்துவதும் தான் தரக்குறைவான மருந்துப் பிரச்னைக்குத் தீர்வாகும்.

நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருப்பதற்கு உடல் நலம் பற்றிய கருத்தும் பழக்க வழக்கங்களும் கூட மற்றொரு முக்கியக் காரணமாகும். நல்ல உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள், தூய்மையான சுற்றுச்சூழல், தகுதிக்கேற்ற வேலை, போதுமான வருமானம் மற்றும் பிற காரணங்களைப் பொறுத்ததே உடல் நலமாகும். சுகாதாரத் துறையின் மிக முக்கிய கடமை, நோய்கள் வராமல் தடுப்பதாகும். தாய் சேய் நலத்தைக் காப்பது தான் அடுத்த முக்கியப் பணி; ஏனென்றால் எளிதில் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகக் கூடியவர்கள் அவர்கள். இதையும் மீறி நோய்கள் மக்களைத் தாக்கும் போது தான் டாக்டருக்கும் மருந்துகளுக்கும் அங்கு வேலை. அப்போதும் கூட ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த மருந்துகளிலும் பெரும்பாலானவை வீரியம் குறைவான சாதாரண மருந்துகள் தான். அவற்றை துணை மருத்துவ ஊழியர்கள் (சுகாதார ஊழியர்கள்), மருந்தாளர்கள், பயிற்சி பெற்ற ஊழியர்களே கூட கொடுத்து விட முடியும். அவர்களால் சிகிச்சை அளிக்க முடியாத நோயாக இருந்தால் மட்டுமே பெரிய மருத்துவமனைகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டும்.

மருந்து மாத்திரைகளைக் கொடுப்பதன் மூலமும், நோய்க்குச் சிகிச்சை அளிப்பதன் மூலமும் நமது ஆரோக்கியமான வாழ்க்கையை டாக்டரால் தான் உத்தரவாதப்படுத்த முடியும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். நமது சமூக அமைப்பும், அதிலிருந்து கிடைத்த அறிவும் தான் இதற்குக் காரணம். ஒரு நோய்க்கு உண்மையில் மருந்து தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் எல்லாவித நோய்களுக்கும் மருந்து எழுதிக் கொடுக்குமாறு வற்புறுத்துவதற்குக் காரணமும் இதுதான். மருந்து உற்பத்தித் தொழிலின் வியாபாரத்தைப் பெருக்க இந்த மனோபாவத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.



-தி. சுந்தரராமன்



நன்றி: