சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கியது உண்மையே! – நீதிமன்றத்தில் ஒப்புதல்.

ஈழத்தமிழரும், லண்டனி்ல் உள்ள பிரபல சங்கிலித்தொடர் பல்பொருள் அங்காடி ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கும் திரு. இளஞ்செழியன் கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி மாலை சென்னை, தியாகராயநகர், ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் பயங்கரமாக தாக்கப்பட்டார்.

முழு விவரத்திற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.

இந்த துயர சம்பவம் குறித்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது சரவணா ஸ்டோர்ஸ் பணியாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நடந்த குற்றத்தை மறைக்காமல் ஒப்புக்கொண்டனர்.

மேலும் குற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்ட ஏழு பேரும் பரம ஏழைகள் என்றும், முதல் தடவை குற்றம் செய்திருப்பதாகவும் எனவே குறைந்த பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தலா ரூ.1,500-00 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

.....

மேற்கூறப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் வாடிக்கையாளர் திரு. இளஞ்செழியன் காவல்துறையில் முதலில் புகார் செய்ததால்,சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில் செய்த புகார் ஏற்கப்படவில்லை.

மற்ற தருணங்களில் தாக்குதலுக்கு உள்ளான வாடிக்கையாளர் மீது சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில் திருட்டுப்புகார் பதிவு செய்யப்பட்டு தாக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையில், தகவல் உரிமைச் சட்டப்படி சேகரித்த புள்ளிவிவரத்தில் 2008ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் 19 திருட்டுப்புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது மாதத்திற்கு இரு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

.........

ஆனால் திரு. இளஞ்செழியன் தாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் தங்களை முதல் தடவையாக குற்றம் செய்த குற்றவாளிகள் என்று கூறியுள்ளனர். அது உண்மையாக இருக்கலாம். பணியாளர்கள் நிறுவனம் மாறக்கூடியவர்கள்தான்!

ஆனால் உண்மை குற்றவாளிகள் அந்த ஊழியர்கள்தானா என்பது அனைவருக்கும் தெரியும்.

..........

திரு. இளஞ்செழியன், சரவணா ஸ்டோர்ஸ் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

.........

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீங்களும் சரவணா ஸ்டோர்ஸ்-க்கு பொருட்கள் வாங்க செல்லலாம். பாதுகாப்பாக சென்று பொருட்களை வாங்கி வருவதற்கு வாழ்த்துகள்.

..........

விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதேனும் நடந்துவிட்டால் திரு. இளஞ்செழியனின் வழியில் எதிர்த்து போராடுங்கள். அநீதிக்கு எதிராக போராடாமல் இருப்பதும், அநீதிக்கு துணை போவதுதான்.


பின்குறிப்பு: தமிழ்மணம் பரிந்துரை பகுதியில் உங்கள் பரிந்துரையை செய்யுங்கள். நன்றி!