தேர்வுத்துறை கவனக்குறைவால் நன்றாக படிக்கும் மாணவியின் விடைத்தாள் மாறியது !

பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்திருப்பது, விடைத்தாள் நகல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நன்றாக படிக்கும் மாணவியின் விடைத்தாள் மாறியதால் அவரது மதிப்பெண் குறைந்துபோனது.
விடைத்தாள் நகல்
பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக மாணவ-மாணவிகளுக்கு விடைத்தாள் நகல்கள் தரப்படுகின்றன. இதற்கு தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக தேர்வில் குறைவாக மதிப்பெண் பெறும் நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளும், பெயிலானவர்களும் விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிப்பார்கள்.
.
அதேபோல், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தபால் மூலம் விடைத்தாள் ஜெராக்ஸ் பிரதி அனுப்பப்பட்டது. கூட்டல் தவறு, விடைத்தாள் மாற்றம், சரியாக மார்க் வழங்காதது என ஏராளமான குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
.
குளறுபடி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி சுவிதா விலங்கியல் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்திருந்தார். நன்றாக படிக்கக்கூடிய இந்த மாணவிக்கு உயிரியல் பாடத்தில் வெறும் 80 மதிப்பெண்தான் வந்திருந்தது. ஆனால் அவரது உண்மையான மதிப்பெண் 143 என்பது நகல் மூலம் தெரிய வந்தது.
.
இதேபோல், இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி சிவசக்தி. ஆயிரத்திற்கு மேல் மார்க் வாங்கி எல்லா பாடங்களிலும் 170-க்கு மேல் வாங்கிய சிவசக்திக்கு உயிரியல் பாடத்தில் தேர்வில் வெறும் 30 மதிப்பெண்ணே (செய்முறைத்தேர்வு மார்க் தனி) கிடைத்தது. டாக்டர் ஆக வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்த இந்த மாணவிக்கு உயிரியல் தேர்வில் 30 மதிப்பெண் கிடைத்த அதிர்ச்சியில் உறைந்து போனார்.
.
விடைத்தாள் மாறியது
மகள் நல்ல மார்க் வாங்கி டாக்டர் ஆவார் என்று கனவு கொண்டிருந்த அவரது பெற்றோர் திட்டித் தீர்த்தனர். இருந்தாலும் நன்றாக தேர்வு எழுதி இருந்த நம்பிக்கையில் மாணவி சிவசக்தி விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தார்.
.
தபாலில் விடைத்தாள் நகலைப் பெற்றார். தபால் உறையை பிரித்துப் பார்த்த அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார். காரணம், அவரது தேர்வு எண்ணில் இருந்த விடைத்தாள் மதுரையில் தனித்தேர்வராக தேர்வு எழுதிய ஒரு மாணவரின் விடைத்தாள் ஆகும்.
.
சிவசக்தியின் மதிப்பெண் வேறு யாருக்கோ வழங்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் முறையிட்டார். தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்தபோது அந்த மாணவியின் விடைத்தாள் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையில் இருந்த அவரது விடைத்தாளை கண்டுபிடித்து சரிபார்த்தபோது, அவரது உண்மையான மதிப்பெண் 174 என்பது தெரிய வந்தது. தவறை ஒப்புக்கொண்ட தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் அந்த மாணவிக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
.
மன உளைச்சல்
இதேபோல் சென்னை மாணவர் ஒருவரின் கணித மதிப்பெண் 171 என்பதற்குப் பதிலாக தவறாக 117 என்று குறிப்பிடப்பட்டதும் தெரிய வந்தது. இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுபோன்று ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வுத்துறையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் நொந்து போய்விடுகிறார்கள். தவறே செய்யாமல் யாரோ செய்த தவறுக்காக தாங்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் பரிதாபமுடன் கூறினார்கள்.
.

நன்றி: தினத்தந்தி, 11-06-2008
.

விவகாரம் இத்தோடு முடியவில்லை. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலவரம்.
.

இதற்கான முழுமையான காரணம், தேவையான அளவில் பணியாட்கள் இல்லாததே. கடந்த பல வருடங்களாக அரசுத்துறையில் காலியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளது. மிகவும் அத்தியாவசியமான இடங்களில் தினக்கூலி அடிப்படையிலோ, ஒப்பந்த அடிப்படையிலோ மிகக்குறைந்த ஊதியத்திற்கு நிரந்தரம் அல்லாத பணியாளர்கள் நிரப்பப் படுகின்றனர்.
.

சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் கீழ்நிலை எழுத்தர்(Lower Division Clerk) , கணிப்பொறி இயக்குனர்(Computer Operator) போன்ற அனைத்து இடங்களுமே இத்தகைய தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவதாக தெரிகிறது. இவர்கள்தான் மாணவர்களின் விண்ணப்பங்கள், கட்டணங்கள், தேர்வு அனுமதி சீட்டுகள், மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை கையாளுகின்றனர்.
.

எந்தவிதமான வேலை உத்தரவாதமோ, மற்ற பணிப்பாதுகாப்பு அம்சங்களோ இல்லாமல் மேலதிகாரிகளின் அனுசரணையுடன் மட்டுமே பணியாற்றும் இவர்களிடம்தான் நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் கல்வி உள்ளது.
.

தனியார் நிறுவனங்களில் மனிதவள சுரண்டல் நடந்தால் அதை கண்காணிக்கும் அதிகாரம் படைத்த தொழிலாளர் நலச்சட்டங்களும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் இந்த கல்வி நிலையங்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
.

அரசுத்துறைகளின் இத்தகையப்போக்கு இந்த அமைப்புகளில் பணியாற்றும் மனிதவளத்தை மட்டும் சுரண்டவில்லை. இந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் சுரண்டப்படுகிறது.

-நுகர்வோர் நலன் குழு

மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்றப் பயிர்கள்!

நான் சந்தைக்குச் செல்லும்போது, பூச்சி துளைத்த கத்தரிக்காயைத்தான் வாங்குவேன். பூச்சி துளைத்துள்ளதால் அக்கத்தரியை நஞ்சு மருந்துகள் தெளிக்கப்படாதது என்றும், மரபணு மாற்றம் ஏற்படாதது என்றும் அறிய முடிகிறது. எனக்கு தேவையற்ற புழு நுழைந்த பகுதியை வெட்டி வீசிவிட முடியும். நச்சை மரபிலோ முதுகிலோ சுமந்திருந்தால் அதை நீக்க முடியாதவல்லவா?'' என்று சமீபத்தில் ஒரு உழவியல் பேராசியர் பேசியிருக்கிறார் (நன்றி: விழிப்புணர்வு, தினமணி கதிர்). சிந்திக்க வைக்கும் உண்மை!

வேளாண்மைக்குப் பெருத்த சவாலாக, விளைபொருளின் சந்ததியை சந்தைக்காகச் சிதைக்கும் மரபணு மாற்றப் பயிர்களைப் பற்றி தெந்து கொள்ள, அதன் அறிவியலை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எது மரபணு (Gene)?

ஒவ்வொரு உயிரிலும், அதன் குரோமோசோம்களில் மரபுத் தன்மையை (கறுப்பு மயிரா, கருப்பு கருவிழியா, பழுப்புத் தோலா, குட்டையா, நெட்டையா எனும் உண்மைகளைக்) கொண்டிருக்கும் DNA குழுமத்தை மரபணு என்கிறார்கள். A,D,C,G எனும் நான்கு வித புரதங்களால் double=helix முறையில் தொகுக்கப்பட்டிருக்கும் இப்புரதக் கூட்டுதான் நம் வாழ்வின் ‘அடிப்படை ஆதாரம்' என்றால் இன்றளவில் அது மிகையல்ல, நாயைக் கண்டால் மிரள்வதும், பெண்ணை கண்டால் வழிவதும், 4 வயதில் வரும் அம்மை, 40 வயதில் வரும் வயிற்றுப்புண், புற்று என நடக்கும் எல்லாவற்றிற்கும் இப்புரதக் கூட்டு காரணமாயிருக்கிறது.

அதே போல், ஒரு தாவரம் குட்டையாக வளர வேண்டுமா? மஞ்சள் பூ பூக்க வேண்டுமா? என அத்தனையும் அம்மரபணுவின் புரதப் புரோகிராம்கள் தான் நிர்ணயிக்கின்றன.

எவை மரபணு மாற்றப் பயிர்கள் (Genetically Modified Organism)?

காலை அகட்டி பாதங்களால் பற்றி, மரமேறி கொட்டைப்பாக்கு எடுக்க முடியாது. கைக்கெட்டும் தூரத்தில் பாக்கு விளைந்தால் என்ன? எப்பவும் அழுகாத பழங்கள், ‘சாலடு’க்கு வெட்ட ஏதுவான தடிப்புத் தோலுடன் தக்காளி, புழு துளைக்காத கத்தரி, பூச்சி அண்டாத பயிரினங்கள், வறட்சியிலும் வாடாத கிரானைட்' காய்கறிகள்'', என இந்த பூவுலகின் ‘தாதா' மனிதன் எதற்கும் மெனக்கெடாது இருக்க விளைபொருளில் நடக்கும் விஞ்ஞான விளையாட்டுதான் மரபணு மாற்றப் பயிர்கள். எப்படி?

உதாரணத்திற்கு, குதிரைபோல் ஓடும் நல்ல வேகமான திறனுடைய மகவு வேண்டுமெனில், பிறந்த குழந்தைக்கு தொடந்து பயிற்சி கொடுத்து பழக்க வேண்டியதில்லை. ஒரு குதிரையைப் புணர்ந்து, அதில் உருவாகும் கருவை உடைத்து, அதன் குரோமோசோமைச் சிதைத்து, அதன் DNA-ஐ வெட்டி எடுத்து தன் துணையின் கரு முட்டையில் நுழைத்து, பிள்ளையை பிரசவித்தால் அக்குழந்தை குதிரை போல் ஒடலாம். ஒலிம்பிக்கில் தங்கமும் வாங்கலாம்! என்ன? கொஞ்சம் வாய் நீளமாகவும், பின்பகுதியில் வாலும், கால் கைகளில் குளம்பும் இருக்கலாம்! அதனால் என்ன? குழந்தை குதிரை போல் ஓடும்! கற்பனை செய்யவே ‘பயங்கரமாக' உள்ளதல்லவா? இது தான் இந்த மரபணு மாற்ற பயிர்களின் உற்பத்தி தாரக மந்திரம்.

தனக்கு, தன் சந்தைக்கு வேண்டிய பயிரை உற்பத்தி செய்ய, பயிரின் மரபணுவை மாற்றம் செய்தோ, சிதைத்தோ அதே குடும்பப் பயிர் அல்லது வேறு உயிரின் (அது பாக்டீயாவோ, டைனசரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!) மரபணுவினை வெட்டி ஒட்டியோ, புதிய பயிரை உருவாக்குவது தான் இந்த மரபணு மாற்றப்பயிர்.

பயிர்பாதுகாப்பு, புழுக்களில் இருந்தும் வைரசுகளிலும் இருந்து பாதுகாப்பு, களைகளை மீறி பயிர் வளரும் தன்மை என்ற காரணங்களுக்காகவே இந்த வித்தை பயன்படுத்தப்படுவதாக, விஞ்ஞான மேதாவிக் கூட்டம், மான்சான்டோ தலைமையில் கூறிவந்தாலும், உட்காரணம் மற்றும் ஒரே காரணம் மொத்தமாய் உழவுச் சந்தையை அபகரிக்க நினைப்பது மட்டுமே. கூடுதலாய், சமீபத்திய உலகளாவிய உணவுப் பற்றாக்குறைக்கு ஒரே நிவாரணமாகவும் இவை உருப்பெற்று வருவது அவர்களது சமீபத்திய சாதனை.

‘இது ஒன்றும் புதிதல்ல' எனும் வாதமும் சில விளக்கங்களும்…

உங்கள் கொள்ளுத் தாத்தாவின் குணங்களைவிட உங்கள் உடல்நலத்தின் வளத்திலும் ஒரு சில நன்மைகளும், ஒரு சில தீமைகளும் பெற்றிருக்கக்கூடும். கடந்து வந்த சமூகச் சூழலுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் மரபு தகவமைத்துக் கொண்ட விளைவு அது. விதையுடன் இருந்த வாழைப்பழம் இப்போது விதையற்று இருப்பதும், பெரிய நெல்லிக்கனி போலிருந்த தக்காளி இப்போது இப்படி இருப்பதும் என்றோ, பாக்டீரியாவாய் இருந்த பச்சையம் (Chlorophills) இன்று தாவர பகுதியாய் மாறியதும் மரபணு மாற்றத்தால்தான். ஆனால் அவை நிகழ 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகள் வரை ஆனது. இயற்கையை சிதைக்காமல், பல்லுயிர் ஒம்பி படைக்கப்பட்ட சந்ததிகள் அவை. ஒரு சிம்பன்ஸி குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான். ஆனால், அது நிகழ 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளதாம்.

இப்படி நிகழும் இயற்கை மாற்றங்களை பல நூறுகோடி ரூபாய் கொண்டு உருவாக்கிய ஆய்வறையில் மரபணுவை வெட்டி ஒட்டி நிகழ்ந்த “DOLLY”க்களை உருவாக்குவதும் BT பருத்தி, BT அரிசி, BT சோளம் உருவாக்குவதும் எப்படி ஒன்றாகும்?
முன்னது கலப்பு திருமணம் என்றால் இந்த மரபணு மாற்றம் கற்பழிப்பு!

‘பேசிலஸ் துருஞ்சியேனம்' எனும் பாக்டீயாவின் மரபை கத்தரிக்காயின் மரபணுவுடன் ஒட்டி, பிறக்கும் (உருவாக்கும்) கத்தரி மரபில் அந்த பாக்டீயாவின் ஒட்டபட்ட மரபணு உருவாக்கும் Toxin இருப்பதால் புழு நுழையாது என்கின்றனர். “அந்த நஞ்சு நம்மைத் தாக்காதா?” என்றால், “அதிகம் சாத்தியமில்லை, வெகுசிலருக்கு லேசான அரிப்பு முதல் மரணம் வரை ஏற்படலாம்” என்கின்றனர் மிக அலட்சியமாக.

முதலில் இது தேவையா? என்ற கேள்விக்கு நிச்சயமாக “இல்லை'' என்பது அதைப் படைத்த “பிரம்மா''க்களுக்கும் தெரியும். அடுத்து பாதுகாப்பானதா? என்றால் உலக சுகாதார நிறுவனமே மழுப்புகிறது (http://www.who.int/foodsafety/publications/biotech/20questions/en/).

மரபணு மாற்றப் பயிர்கள் எப்படி மனித நலத்தை பாதிக்கும்?
ஒவ்வாமை (Allergenicity) மரபணு ஊடுருவல் (Gene Transfer) வெளிபரவுதல் (Out Crossing) என்று மூன்று முக்கிய பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன.

ஒவ்வாமை (Allergenicity)
மல்லிகையை நுகர்ந்தால் களிக்கும் நம் மனம், அம்மோனியாவை நுகரும் போது சுளிப்பதும், இன்னும் வீரிய நைட்ரஜன் வேதிப் பொருட்களை நுகரும் போது உடம்பெல்லாம் தடிப்பது, மூச்சிரைப்பது என நோயைத் தருவதைதான் ஒவ்வாமை என்கின்றனர். அது உடனடி நிகழ்வாய் (hypersensitivity) இருக்கலாம்; அல்லது நாட்படவும் நிகழலாம். உடனடியாய் நிகழும் போது, Urticaria (உடல் முழுதும் வரும் தடாலடியான அரிப்பும், தடிப்பும்) மூக்கடைப்பு மற்றும் இரைப்பு (sinusitis & asthma), குமட்டல், வயிறு பிரட்டல், வாந்தி, (Nausea vomitting) தடாலடியாக மரணம் (anaphaloxis shock) ஆகியன ஏற்படக் கூடும்.

நாட்பட நிகழ்வது Celiac disease, தோல் கரப்பான்கள், ஆஸ்துமா, மூட்டுவலிகள், auto-immune disorders என பல வகை நோய்களை உருவாக்கும். இன்னும் காரணம் கண்டறியப்படாத பல நோய்கட்கு, இந்த மாதிரி உடலுக்குள் நுழையும் நச்சுக்கள் காரணமாக இருக்கக் கூடும்.

மரபணு ஊடுருவல் (Gene Transfer)

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை உட்கொள்ளும் நபருக்கு, உட்சென்ற பயிரில் ஒட்டியிருக்கும் வேறு உயிரின் மரபணு குடலுக்குள் உள்ள நன்மை செய்யும் பாக்டீயாவிலோ, வைரஸிலோ அல்லது மொத்தமாய் அந்த மனிதனின் மரபணுக்குள் கலக்கும் / உறவாடும் சாத்தியம் உண்டு. அப்படி நடக்கையில், தவளை போல் குழந்தை பிறக்கவும், அல்லது பிறந்த குழந்தைக்கு கை கால்களில் காய் கனி காய்க்கவும் வாய்ப்புண்டு. அல்லது குடலினுள் தோன்றும் புதிய உயிர்கள் புதிய நோய்களை உருவாக்கவும் வாய்ப்புண்டு, திடீர் சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், ஏன் HIV குறித்தும் இது போன்ற ஐயங்கள் உண்டு.

வெளிபரவல் (Out Crossing)

இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் கண்ணாடி குடுகைக்குள் விளைவிக்கப்பட போவதில்லை, விளைநிலத்தில் பயிராகும் போது மகரந்த சேர்க்கையில். பக்கத்து நிலத்து மாசற்ற பயிருக்கும், மூலிகைக்கும் ஊறு விளைவித்து எது GMO? என்ற கேள்வி கேட்கும்படி மொத்தமாய் கலந்துவிடவும் வாய்ப்புண்டு.

பதிலளிக்கப்படாத பல கேள்விகள்

“மரபணு புரதம் வயிற்றுள் சென்றவுடன் சிதைந்துவிடும், பயப்படத் தேவையில்லை. சிலருக்கு வேண்டுமாணால் சங்கடம் ஏற்படலாம்'' என்கிறது மான்சான்டோ கூட்டம். ஆனால் அந்த “சிலர்'' இந்தியரோ அல்லது ஆப்பிரிக்கரோ அல்லது ஒடுக்கப்பட்ட இனமோ/நாடாக மட்டும் என இருப்பது ஏன்? மான்சாண்டோ நிறுவனம் உள்ள அமெரிக்க நாட்டின் விளைநிலத்தில் ஆய்வு நடத்த கூடாது. அதன் துணை குழுமங்கள் உள்ள ஐரோப்பிய கண்டத்தில் GMOக்கள் நுழைய கூடாது. நம் நாட்டில் மட்டும் குப்பனும் சுப்பனும் ''அந்த சிலராக'' சங்கடப்படவேண்டும் என்று சொல்வதுதான் Globalisation நியதியா ?

மரபணு புரதங்கள் ஒவ்வாமை தராது என்று இன்னும் முழுமையாக ஒரு ஆய்வும் வரவில்லை.

அந்த புரதங்களை தெளிவாக அளவிடும் அளவுகோள்கள், எவை ஒவ்வாமை புரதங்கள் என அளவிட முடியவில்லை.

தற்போதுள்ள சோதனைகளின் தரம் (Standard) அதன் வரைஎல்லை (Limitation) பற்றி தெளிவான கருதுகோள்களோ ஆய்வுகளோ இல்லை.

எலிகளிலும் குரங்குகளிலும் GMO உணவுகளில் சோதனை நடத்துகின்றனர். அதன் முடிவுகள் மனிதர்களில் அப்படியே பிரதிபலிக்கும் என்று எவ்வித உண்மையும் கிடையாது. மொத்தத்தில் மரபணு மாற்றப் பயிர்கள் புதிய நோய்களைத் தோற்றுவிக்கவும், அதற்கான மருத்துவச்சந்தைக்கு வழிகாணவும், உழவையும் அதன் கலாச்சாரத்தை சிதைக்கவும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வேளாண் கூலிகளாய் நாம் என்றும் நிற்கவும் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.
விழிப்புடன் இருந்து அதைத் தகர்ப்போம்!


-மரு. கு. சிவராமன், BSMS, PhD.,
“பூவுலகின் நண்பர்கள்”
http://www.poovulagu.org/
herbsiddha@gmail.com
(மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும்...! என்ற தலைப்பில் 15-06-2008 அன்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் கட்டுரை ஆசிரியர் உரையாற்றியதின் மூல வடிவம்)

மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்...!

நாம் உட்கொள்ளும் இயற்கையான உணவுகளில் இப்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?

நாட்டுத்தக்காளி என்ற வகையே காணாமல்போய் பெங்களூர் தக்காளி என்ற பெயரில் “பளபளா” தக்காளி மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. இதில் என்ன பிரசினை?

நாட்டுவாழை, பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற பாரம்பரிய வாழை இனங்கள் குறைந்துபோய் பெங்களூர் வாழை என்ற பெயரில் “பளபளா” வாழை மட்டுமே கிடைக்கிறது. என்ன காரணம்? இந்த தக்காளியோ, வாழையோ தோல் கருப்பதும், அழுகுவதும் நம் கண்களில் படுவதில்லையே! என்ன மர்மம்?

ரிலையன்ஸ் பிரஷ், மோர், சுபிக்ஷா, நீல்கிரிஸ் போன்ற நவீன அங்காடிகளில் பார்வைக்கு கவர்ச்சியாக விற்பனை செய்யப்படும் காய்கனிகள் எங்கிருந்து வருகின்றன? அவை எவ்வாறு விளைவிக்கப்படுகின்றன?

பாட்டிலிலும், டப்பாவிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜாம் வகைகளும், பழரச பானங்களும் பாதுகாப்பானவைதானா?

பருத்தி, கத்தரிக்காய், காலிஃபிளவர், சோயா மொச்சை, கடுகு, கோதுமை, அரிசி என்று பல்வேறு உணவுப்பொருட்களிலும் Bt என்ற புதிய வகை அறிமுகமாவதாக செய்திகள் வருகின்றன. இது நல்லதா? இல்லையா?

இவை தாவரங்களில், அதை உட்கொள்ளும் விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

மனிதர்களும், விலங்குகளும் உட்கொள்ளும் உணவுகளில் இத்தகைய மரபணு மாற்றங்கள் செய்வதைப்பற்றி பன்னாட்டு மற்றும் இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது? அந்த சட்டங்களை இயற்றுவது யார்? இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றங்களுக்கும், வழக்கறிஞர்களான நமக்கும் எந்த அளவுக்கு பங்கு உள்ளது?

இந்த சட்டங்களை செயல்படுத்துவதும் அதை கண்காணிப்பதும் யார்? மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வோருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? இழப்பீடுகளுக்கு வழி உண்டா?

இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண இதோ ஒரு வாய்ப்பு....

இடம்: YMCA அரங்கம், (உயர்நீதிமன்றம் எதிரில்) NSC போஸ் சாலை, சென்னை.
நாள்: 15-06-2008 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

சட்டம் குறித்த இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அல்ல.

சட்டம் குறித்தும், சமூகம் குறித்தும் ஆர்வம் கொண்ட அனைவரும் வரலாம்.


தமிழறிந்த பேச்சாளர்கள் அனைவரும் தமிழிலேயே பேசுவர்.


அனைவரும் வருக!

பிரபல வங்கி ஏடிஎம்-மில் கள்ள நோட்டுக்கள் புழக்கம்

தினமலர் சென்னை பதிப்பு, 01-06-2008 ஞாயிறு இதழில் வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. புது தி்ல்லியிலிருந்து வெளியாகி இருக்கும் அந்த செய்தியில், பிரபல வங்கிகளின் ஏடிஎம்களில் கள்ளநோட்டுக்கள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இத்தகைய புகார்கள் சென்னையிலிருந்தும் சில காலத்திற்கு முன் எழுந்தது. எனினும் பலம் வாய்ந்த வங்கிகளின் குரலுக்கு முன் சாமானிய நுகர்வோரின் குரல்கள் எடுபடாமல் போனது.
.
தற்போது புது தில்லியிலும் இத்தகைய புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தப் புகாராவது விழவேண்டியவர்களின் காதுகளில் விழுமா? என்பது 'சிதம்பர' ரகசியமாகவே உள்ளது.
.
தினமலர் செய்தியில் சில விஷயங்கள் குழப்பமாக கொடுக்கப் பட்டுள்ளது. நுகர்வோர் ஏடிஎம்-கள் மூலமாக கள்ளநோட்டுகளை செலுத்துவது போலவும், அந்த கள்ள நோட்டுகளே ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் நுகர்வோரிடம் செல்வது போலவும் கூறப்பட்டுள்ளது.
.
ஏடிஎம்-மில் (ஒரு கவர் மூலம்) செலுத்தப்படும் பணம் தனியாகவே பெறப்படுகிறது. வங்கி அலுவலர் கவரில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, உள்ளே இருக்கிறதா என்பதை சரிபார்த்தப் பிறகே அது வரவு வைக்கப்படுகிறது. அந்த தொகை நேரடியாக ஏடிஎம்-மில் உள்ள பணத்தோடு சேர்க்கப்படுவதில்லை.
.
நுகர்வோருக்காக ஏடிஎம்-மில் வைக்கப்படும் பணம் வங்கி அதிகாரிகள் மூலமாகவே வைக்கப்படுகிறது. எனவே வங்கி ஏடிஎம்களில் கள்ளநோட்டு இருந்தால் அதற்கு வங்கியே பொறுப்பேற்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
.
ஆனால் கிரெடிட் கார்டு வணிகம் குறித்து ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் முதன்மை சுற்றறிக்கையை எந்த தனியார் வங்கியும் கண்டு கொள்வதில்லை. அது குறித்து ரிசர்வ் வங்கியோ, நிதி அமைச்சகமோ கண்டு கொள்வதில்லை. அதுபோல இந்த சட்டங்களையும் வங்கிகள் மதித்து நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

-சுந்தரராஜன்