சட்டத்தின் பார்வையில் நுகர்வோர்

ஒரு பொருளை (GOOD) அல்லது சேவையை (SERVICE) உரிய விலை(PRICE) அல்லது கட்டணம்(CHARGE) கொடுத்து சொந்த உபயோகத்திற்காக வாங்கும் அனைவரும் நுகர்வோரே!
.
ஒரு பொருளை பெறும்போது அதற்கான விலையை முழுதாக கொடுத்தாலும், கொடுப்பதாக உறுதியளித்தாலும், விலையின் ஒரு பகுதியை செலுத்திவிட்டு மீதியை தவணை முறையில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டாலும் பொருளை பெற்றவர் நுகர்வோராக கருதப்படுவார்.
.
இவ்வாறு ஒரு பொருளை விலை கொடுத்து அல்லது கொடுப்பதாக ஒப்புக்கொண்டு வாங்கியவர் தவிர அவருடைய அனுமதியுடன் அந்த பொருட்களை பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோராகவே கருதப்படுவார்.
.
அதேபோல, ஒரு சேவையை பெறுவதற்கு / பயன்படுத்துவதற்கு, அதற்கான கட்டணத்தை முழுமையாகவோ, தவணை முறையிலோ செலுத்துபவரும், அவ்வாறு செலுத்துவதாக ஒப்புக்கொண்டவரும் நுகர்வோராக கருதப்படுவர்.
.
இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்துபவரின் / செலுத்த ஒப்புக் கொண்டவரின் அனுமதியுடன் பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.
.
பொருட்களை சொந்த உபயோகத்திற்கு வாங்குபவர் மட்டுமே நுகர்வோராக கருதப்படுவார். அந்த பொருட்களை மீண்டும் விற்பதற்காகவோ, வணிக நோக்கத்திலோ வாங்குபவர் சட்டத்தின் பார்வையில் நுகர்வோராக கருதப்பட மாட்டார்.
.
அதேபோல சேவைகளிலும் கட்டணம் செலுத்தி சேவையை பெறுபவரே நுகர்வோராவார். இலவச சேவைகள் மற்றும் தனி ஒப்பந்தத்தின் கீழான பிரத்யேக தனிநபர் சேவைகள் ஆகியவற்றை பெறுபவர்களை நுகர்வோராக சட்டம் கருதாது.
.
இந்த நுகர்வோர் என்ற கருத்து தனியார் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அரசுக்கும் பொருந்தும். அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ தயாரிக்கும் / விற்பனை செய்யும் பொருட்களை (டாஸ்மாக் உட்பட) அதற்கான விலை கொடுத்து வாங்கும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.
.
அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ அளிக்கும் சேவைகளை உரிய கட்டணம் செலுத்தி பயன்படு்ததும் அனைவரும் நுகர்வோர்தான்.
.
இந்த அடிப்படையில், ஒரு பொருளை - சேவையை உரிய விலை/கட்டணம் செலுத்தி வாங்கும் அனைவரும், அந்த பொருளில்/சேவையில் குறைகள் இருந்தால் சட்டத்தின் துணையுடன் அந்த பொருளை/சேவையை வழங்கியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
.
அரசுக்கு எதிராகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த பொருள் / சேவை இலவசமாக வழங்கப்பட்டதாக இருக்கக்கூடாது.
.
அதேபோல அரசோ, அரசு அதிகாரியோ தவறாக செய்த காரியத்திற்காகவோ, கடமையை செய்யத் தவறியதற்காகவோ நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. அதற்கு வேறு சட்டங்கள் உள்ளன.

0 மறுமொழிகள்: