சிறப்பு பொருளாதார மண்டலம் - ஒரு சிறப்பு பார்வை (2)

தேடல் என்ற இந்த குறும்படம் நம்மை நாம் தேட பயன்படும்...

கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்.

நிதியாண்டு முடிவடையும் தறுவாயில் கடன் வழங்கிய நிறுவனங்கள் கடன் வசூல் பணியை முடுக்கி விடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...

நினைவில் நிறுத்துங்கள்!

கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பதும் கிரிமினல் குற்றம் அல்ல ! (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)
.
நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது. கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.
.
காவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு)
.
கடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டு வசூல் நடைமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வங்கிகளின் வசூல் முகவர்களுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும். வசூல் முகவர்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றாமல் தவறுகளை செய்தால், அந்த முகவர்கள் மட்டும் அல்ல, அவர்களை கண்காணிக்காத வங்கிகளும் சட்டததின் முன் குற்றவாளிகளே !
.
நீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.
.
வங்கிகள், அவற்றின் கடன் வசூல் முகவர்கள் ஆகிய எவரொருவரும் கடன் வசூல் நடவடிக்கைகளின்போது , கிரெடிட் கார்டு நுகர்வோர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றவர்களை வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. அதேபோல பொது இடத்தில் அவமானப்படுத்துதல், தனிமையை குலைத்தல், தொலைபேசி மூலம் அடையாளமற்று மிரட்டுதல், தவறான மற்றும் திசை திருப்பும் தகவல்களை அளித்தல் ஆகியவையும் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கையின் பிரிவு 7 (ii) c திட்டவட்டமாக கூறுகிறது.
.
இந்த நடவடிக்கைகள் இந்திய தண்டனை சட்டத்தின்படியும் குற்றமென கூறப்பட்டுள்ளது.

உங்கள் அனுமதியின்றி வீட்டில் நுழைவதே குற்றம் !

உங்கள் வீட்டில் வங்கிப்பணியாளர்களோ, வசூல் முகவர்களோ உங்கள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தால் இ.த.ச பிரிவு 441ன்படி குற்றம்.
.
வேறு ஒருவரின் உடமையில் இருக்கும் ஒரு சொத்தினுள், அதன் உரிமையாளரை மிரட்டும், அவமானப்படுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் அல்லது குற்றம் செய்யும் கருத்துடன் நுழைகிற, அல்லது இதற்காக அங்கேயே சட்ட விரோதமாக தங்கியிருக்கிற எவரொருவரும் , குற்றமுறு அத்துமீறல் புரிந்ததாக கூறப்படுவார்.
.
இவ்வாறு குற்றமுறு அத்துமீறல் புரியும் எவரொருவருக்கும் மூன்று மாதம் வரை சிறைக்காவலோ அல்லது 500 ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் என்று அதே சட்டத்தின் பிரிவு 447 கூறுகிறது.
.
வீட்டினுள் அத்துமீறல் என்ற குற்றத்தை செய்ய உடல் உறுப்புகளில் எந்த பாகத்தையாவது வீட்டினுள் புகுத்தினாலே அத்துமீறல் குற்றத்தை செய்வதாகும். (பிரிவு 442)
.
ஒருவருக்கு காயம் விளைவிப்பது, தாக்க முனைவது, முறையின்றி தடை செய்வது, இக்குற்றங்களை செய்வதற்கென்று வீடு புகுந்தால், அதற்கு ஏழாண்டுகாலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். (பிரிவு 452)

அவதூறாக பேசுதல் !

உங்கள் நற்பெயரை கெடுக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் எவரேனும் செயல்பட்டால் அதுவும் சட்டப்படி குற்றமே.ஒருவருடைய நற்பெயரை பங்கப்படுத்தி கெடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய கேடு ஏற்படும் என்று அறிந்திருந்து அல்லது நம்பக்காரணம் பெற்றிருந்து பேச்சால், எழுத்தால், அடையாளங்களால் அல்லது காட்சிப்பொருள்களால் அவரைப்பற்றி பழி சாட்டுதல் எதனையும் செய்கிற அல்லது வெளியிடுகிற எவரொருவரும், அவதூறு செய்ததாக சொல்லப்படுவார். (பிரிவு 499)
.
இன்னொருவருக்கு அவதூறு செய்கிற எவரொருவருக்கும் இரண்டாண்டுகள் வரை வெறுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 500)

அச்சுறுத்தல், நேரடியாக, தொலைபேசி, கடிதம் வழியாக மிரட்டுதல் !

கடனை வசூலிக்க முகவர்கள் என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள் அனைவரும் செய்யும் அனைத்து செய்கைகளும் குற்றச்செயல்களே.
.
ஒருவருடைய அல்லது அவர் அக்கறை காட்டும் மற்றொருவருடைய உடலுக்கு, உடமைக்கு அல்லது நற்பெயருக்கு தீங்கிழைக்கப்படும் என்று அவருக்கு பீதியை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது சட்டப்படி ஒரு செயலை செய்ய உரிமையற்று இருந்தபொழுது அதைச்செய்யவோ அல்லது சட்டப்படி ஒரு செயலைச் செய்யவோ உரிமை பெற்றிருந்தபொழுது அதைச் செய்யவிடாமல் விட்டுவிடும்படி வற்புறுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒருவரை அந்த மிரட்டலுக்கு இணங்கி, அவர் செயல்படுமாறு செய்வதற்காக மிரட்டுவதை குற்றமுறு மிரட்டல் எனலாம்.
.
பிரிவு 503: குற்றமுறு மிரட்டல் செய்பவர்களுக்கு 2 வருடங்கள் சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும்.
.
பிரிவு 506: அநாமதேயக் கடிதத்தின் மூலம் அல்லது யார் மிரட்டுகிறார்கள், எங்கிருந்து மிரட்டுகிறார்கள் என்ற விவரம் மற்றவருக்கு தெரியாத வண்ணம், மறைந்திருந்து மிரட்டுவோருக்கு, முன்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை சிறைக்காவல் தண்டனை அதிகப்படியாக விதிக்கப்படும்.

பெண்களை அவமதித்தல் !

ஒரு பெண்ணின் கற்புநெறியை அவமதிக்கும் வண்ணம், அப்பெண் காணும்படி அல்லது கேட்கும்படி யாரேனும் ஏதேனும் ஒரு சொல்லைக்கூறுவதும், ஒலியெழுப்புவதும் சைகை காட்டுவதும், அல்லது அந்த பெண்ணின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதும் குற்றமாகும். இதற்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும்.

அரசுப்பணியாளரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல் !

அரசுப்பணியாளர்களை அவர்களது வேலை நேரத்தில் எவ்வாறு தொந்தரவு செய்தாலும் குற்றம்தான். அரசுப்பணியாளர் ஒருவரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்கும் எவரொருவரும் குற்றவாளியே. அத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையோ, 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 186)

ஆட்கடத்தல் மற்றும் அடைத்து வைத்தல் !

கிரெடிட் கார்டு கடனை வசூலிப்பதற்காக எவரையெனும் கடத்துவதும் இந்த சட்டத்தின்படி தவறுதான். ஒரு இடத்திலிருந்து செல்லும்படி ஒருவரை வன்முறையாலோ அல்லது வஞ்சனையான முறைகளாலோ கட்டாயப்படுத்துவது ஆட்கடத்தல் ஆகும். (பிரிவு 362)
.
ஒரு குறிப்பிட்ட திசையில் செல்ல உரிமை பெற்றுள்ள ஒரு நபரை அத்திசையில் செல்லவிடாமல் தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவது முறைகேடான தடுப்பு எனக்கூறப்படுகிறது (பிரிவு 339)
.
ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட எல்லையை மீறிச்செல்ல முடியாத வகையில், எவரையேனும் முறைகேடாக தடுப்பதை முறைகேடான சிறைவைத்தல் என்பர். (பிரிவு 340)
.
மறைவாகவும், முறைகேடாகவும் சிறைவைக்கும் கருத்துடன் ஆளைக்கவர்தலும், ஆளைக்கடத்தலும் குற்றமாகும். அதற்கு 7 ஆண்டுக்காலம் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 365)
.
முறைகேடான தடுப்பு செய்பவருக்கு ஒரு மாதம் சிறையோ, அல்லது 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 341)
.
முறைகேடான சிறைவைத்தல் புரியும் எவரொருவருக்கும் ஒராண்டு வரை சிறைக்காவலோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் (பிரிவு 342)

தாக்குதல் !

கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் தாக்க முயற்சிப்பதே தவறுதான்.எந்த ஒருவரின் மீதாவது வன்முறையை கருத்துடன் பயன்படுத்துதல்;அத்தகு வன்முறை அந்நபரின் சம்மதமின்றி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அத்தகு வன்முறை பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,
.
(i)ஒரு குற்றத்தை செய்வதற்காக, அல்லது
(ii)அந்நபருக்கு கேடு அச்சம் அல்லது தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அவை அநேகமாக விளையக்கூடும் என்று அறிந்திருந்து, அத்தகு வன்முறையை பயன்படுத்துதல் குற்றமுறு வன்முறை எனப்படும் (பிரிவு 350)
.
ஒருவர், தம் முன்னுள்ள மற்றொருவரின் மீது குற்றமுறு வன்முறையை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு சைகையோ அல்லது ஒரு ஆயத்தமோ செய்தால், அது தாக்க முனைதல் ஆகும் (பிரிவு 351).
.
குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்தி தாக்கும் நபருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைக்காவலோ அல்லது ஐநூறு ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 352).

வங்கி அதிகாரிகளும் குற்றவாளிகளே !

வசூல் முகவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் தப்ப முடியாது. அவர்களும் குற்றவாளிகள் என்று சட்டம் கூறுகிறது.
.
குற்ற உடந்தை: ஒன்றினை செய்வதற்கு ஒருவர் எப்பொழுது உடந்தையாகி இருக்கிறாரென்றால், அவர்...
முதலாவதாக : அச்செயலை செய்ய எவரையேனும் தூண்டுதல், அல்லது
இரண்டாவதாக : அச்செயலைப் புரிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் சதியில் ஈடுபடுதல்: அச்சதியின் விளைவாக ஒரு செயலோ அல்லது சட்ட விரோதமான ஒரு செயல் தவிர்ப்போ நிகழ்த்தி அச்செயலைச் செய்தல் அல்லது
மூன்றாவதாக : செய்கை அல்லது செயல் தவிர்க்கை ஏதேனுமென்றால் அந்தச் செயலை செய்வதற்கு கருத்துடன் உதவி செய்தல் - ஆகியோர் குற்ற உடந்தை புரிந்தோராக கருதப்படுவர். (பிரிவு 107)
.
எந்தக்குற்றம் நடைபெற உடந்தையாக இருக்கிறாரோ அந்தக் குற்றத்திற்கு தண்டனைத் தொகுப்பால் கூறப்பட்டுள்ள தண்டனையை குற்ற உடந்தையாளர்அடைய வேண்டும் என்று பிரிவு 109 கூறுகிறது.

தற்காப்புரிமை !

கிரெடிட் கார்டு கடன் வசூல் என்ற பெயரில் குண்டர்கள் அராஜகம் செய்யும்போது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க சட்டம் உங்களுக்கு பல உரிமைகளை அளிக்கிறது.
.
உடல் தற்காப்புரிமை : தற்காப்புரிமையை பயன்படுத்தும்பொழுது செய்யப்படும் எதுவும் குற்றமில்லை. (பிரிவு 96)
முதலாவதாக, தனது உடலையும், மற்றவர்கள் உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துத்கொள்ள உரிமை.
இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. (பிரிவு 97)
.
உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதைக் குற்றமாக கருதமுடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும்.
.
அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.
1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத் தக்கதான ஒரு தாக்குதலின்போது,
2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்பொழுது,
3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்போது,
4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்துகொள்ளும் கருத்துடன் தாக்கும்போது,
5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்பொழுது,
6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில் ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்போது,
மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதலில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம்.
.
இந்தச் சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயங்களை விளைவிப்பதோ குற்றமாவதில்லை என்று பிரிவு 101 கூறுகிறது.
.
எனினும், பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கே தற்காப்புரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும், அதைவிட அதிகமாகக்கேடு விளைவிக்கும் வகையில் தற்காப்புரிமையை பயன்படுத்தக்கூடாது என்றும் பிரிவு 99 உட்பிரிவு 3 எச்சரிக்கிறது.

கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் குண்டர்கள் மிரட்டினால் என்ன செய்வது ?

கிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.
.
அந்தப்புகாரில் வசூல் முகவர்களுடன் மற்றும் வங்கி அதிகாரிகளையும் எதிர் தரப்பினராக சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல் படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.
.
காவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக்கொண்டதற்காக ரசீது ஒன்றை அளிப்பார்கள். அதை பெற்றுக்கொள்ளுங்கள். அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.
.
காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள். அப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும்.
.
நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.
.
மிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள்.
.
சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள். கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை.
.
கடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம்.
-ஆசிரியர் குழு

தடை செய்யப்பட்ட, தேவையற்ற மருந்துகளை அரசாங்கம் ஏன் அனுமதிக்கின்றது?

தடை செய்யப்பட்ட, தேவையற்ற மருந்துகளை ஏன் மருந்து கம்பெனிகள் உற்பத்தி செய்கின்றன?

லாபமே குறிக்கோள் என்பதில் கம்பெனிகள் தெளிவாக இருப்பது தான் காரணம்.

மற்ற அனைத்துத் தொழில்களையும் விட மருந்து தயாரிப்புத் தொழில் அதிக லாபம் தரக்கூடியது. அதாவது ஆயுத உற்பத்தித் தொழிலுக்கும் சிகரெட் தயாரிப்புத் தொழிலுக்கும் அடுத்து 3வது இடத்தில் இந்த மருந்து தயாரிப்புத் தொழில் இருக்கிறது. பொருளாதார மந்தம் இருக்கின்ற இந்தக் காலத்தில் கூட பல புதிய கம்பெனிகள் உருவாகிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கின்றன. அவசியமானது என்ற பட்டியலில் வரும் மருந்துகளில் லாபம் குறைவு. அவசியமற்ற மருந்துகளில் நோயாளிகளிடமிருந்து எவ்வளவு பறிக்க முடியுமோ அதைப் பொறுத்தது லாபம். ஆனால், இதற்கு மருத்துவர்கள் அந்த மருந்தை எழுதிக் கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் ஏன் இந்த மருந்துகளை அனுமதிக்கின்றது?

அரசுக்கு இரு நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவர்களுக்குச் சார்பாக அரசின் முடிவுகள் இருக்கின்றன. மருந்து உற்பத்தித் தொழிலில் ஏராளமான பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் பணபலம் பயங்கரமானது. இவற்றில் பல கம்பெனிகளின் ஆண்டு வரவுசெலவு நமது தேசத்தின் பட்ஜெட் போல் பெரியது.


அதோடு மருந்து உற்பத்தித் தொழில் மிகப்பெரிய இந்தியக் கம்பெனிகளும் இருக்கின்றன. இந்தக் கம்பெனிகள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியையும் தமது செல்வாக்கையும் தங்களுக்கு ஆதரவான கொள்கையை உருவாக்குவதற்காகச் செலவிடுகின்றன. ஒரு புறத்தில் கம்பெனிகளின் இந்த அசுரபலம் என்றால் மறுபக்கத்தில் மக்கள் இருக்கின்றனர். மக்களின் குரல், குறிப்பாக, மருந்துக் கொள்கை போன்ற பிரச்சனைகளில் பலவீனமாக இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு இந்த மருந்துக் கொள்கை பற்றிய விபரம் தெரிவதில்லை.


நடுத்தர வர்க்கம் குறிப்பாக, அரசியல் அடிப்படையில் அணி திரண்டு இருப்பவர்களுக்கு இது தெரியும். ஆனால், மருத்துவத் தொழில்மீது இருக்கக்கூடிய மரியாதை மற்றும் நவீன விஞ்ஞானத்தோடு தொடர்புடைய ஒன்றை எதிர்ப்பதா என்ற எண்ணம் ஆகிய காரணங்களால் இவர்கள் ஏதும் செய்யாமல் இருக்கின்றனர்.


சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் அவை சக்தியற்ற, தாக்கத்தை ஏற்படுத்தாத, அமைப்பு ரீதியாக வலு இல்லாததாகவும் உள்ளன. சுகாதாரத் துறையில் செயலாற்றும் சில அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அறிவியல் இயக்கங்களும் இப்பிரச்னையைக் கையில் எடுக்கின்றன. இவர்களின் உறுதியான அறிவியல் ரீதியான நிலைப்பாடும் பல நேரங்களில் உச்சநீதிமன்றத்தின் தலையீடும்தான் பல்வேறு சூழலில் ஆபத்தான மருந்துகளைப் புழக்கத்திலிருந்து தடை செய்தது. உண்மையில் உச்சநீதிமன்றத்தின் மூலம்தான் ஆபத்தான மருந்துகளை இக்குழுக்களால் தடை செய்ய முடிந்துள்ளது.


மருந்துத் தொழில்துறையை ஊக்குவிப்பது ரசாயன மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் முக்கியப் பொறுப்பு. ஆனால் மருந்துத் தொழில்துறை தொடர்பான பிரச்னையையும் இந்த அமைச்சகம்தான் பார்த்துக் கொள்கிறது. சுகாதார அமைச்சகத்தின் பங்கு இதில் மிக மிகக் குறைவாக உள்ளது. மருந்து உற்பத்தித் தொழில் துறையை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்துவதிலும் வளர்ப்பதிலும் தான் இத்துறை குறியாக இருக்கிறது. அதையே இலக்காகவும் கொண்டுள்ளனர். எனவே, அவசியமான மருந்துகள் எவை, அவசியமற்ற மருந்துகள் எவை, தேவையானவை எவை என்பதை இத்துறை வேறுபடுத்திப் பார்ப்பதே கிடையாது.

இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு டாக்டர்கள் ஏன் எழுதிக் கொடுக்கிறார்கள்?

இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் ஓர் அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். மருந்து என்பது ஒரு பண்டம் (ஒரு பொருள்) சந்தையிலிருக்கிற இதர பண்டங்களிலிருந்து அது மாறுபட்டது. நாம் ஒரு பேனாவோ, சட்டையோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியோ வாங்குவதற்குச் சென்றால், எதை வாங்க வேண்டும் என்பதை, மற்ற கம்பெனி பொருள்களின் தரம் மற்றும் விலையோடு ஒப்பிட்டுப் பார்த்து சிறந்ததை வாங்க முடியும். ஆனால், நீங்கள் மருந்து வாங்கச் சென்றால், எந்த மருந்தை வாங்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. எதை வாங்க வேண்டும் என்பதை டாக்டர்தான் உங்களுக்காகத் தீர்மானிப்பார். அந்த மருந்தை எதற்குக் கொடுக்கிறார், எந்த மருந்து சிறந்தது, அதைச் சாப்பிட்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும், எழுதிக் கொடுத்த மருந்துக்கு மாற்றாக விலை குறைந்த மருந்து எதுவும் இருக்கிறதா என்பதைக் கூட உங்களால் தீர்மானிக்க முடியாது; தெரிந்து கொள்ளவும் இயலாது. இந்த முடிவுகள் அனைத்தும் எடுப்பதற்கு நீங்கள் டாக்டர்கள் மீது நம்பிக்கை வைத்தாக வேண்டும்.

மருந்துக் கம்பெனிகள் தங்களது மருந்துகளை விற்பனை செய்வதற்கு எடுக்கின்ற பிரதான முயற்சி என்னவென்றால், தனது கம்பெனியின் மருந்தை டாக்டர்களை எழுத வைப்பதுதான், மருத்துவத் தொழிலின் கட்டமைப்பை இந்த வேலையைச் செய்வதற்கு அக்கம்பெனிகள் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதைச் செயல்படுத்துவதற்குக் கையாளும் சில உத்திகளைக் கீழே காண்போம்.

* ஒவ்வொரு மருந்துக் கம்பெனியும், தமது மருந்து விற்பனைப் பிரதிநிதி மூலம் தொடர்ச்சியாக டாக்டரைச் சந்திக்கின்றன. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை இவர்கள் டாக்டரைச் சந்தித்து கம்பெனியின் பெயர்களுடன் மருந்துகளை அறிமுகப்படுத்தி, இலவசமாக சில மருந்துகளையும், பரிசுப்பொருட்களையும் கொடுத்துச் செல்லுவார்கள்.

* இதற்கு அடுத்தபடியாக, இந்தக் கம்பெனிகள் டாக்டர்களின் கூட்டங்களை நடத்தி மருந்துகளைப் பிரபலப்படுத்தி அவற்றின் விற்பனையைப் பெருக்க நடவடிக்கை எடுக்கின்றன. கம்பெனிகளின் மருந்துகளை எழுதுவதற்காக டாக்டர்களுக்குப் பரிசுகளையும், சிறப்புச் சலுகைகளையும் அவை கொடுக்கின்றன.

* மருந்து எழுதுகிற சீட்டுகள், மருத்துவமனைகளில் ஒட்டுகிற சுவரொட்டிகள் இதர பரிசுப்பொருட்களில் தங்கள் கம்பெனியின் பெயர்களை அச்சடித்து டாக்டர்களிடம் கொடுப்பதன் மூலம் தங்கள் கம்பெனியின் பெயர்களைத் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இவ்வகை பிரசாரம் அக்கம்பெனியின் பெயரை டாக்டர்களின் மனதில் ஆழப்பதிய வைக்கிறது. கடைசியில் அந்த மருந்தின் வர்த்தகப் பெயரை மட்டுமே டாக்டர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.

* அக்கம்பெனிகள் அளிக்கும் தகவல்கள் மூலம் தான் மருந்துகளைப் பற்றி டாக்டர்கள் தெரிந்து கொள்கின்றனர். இவர்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் மருந்துகளைப் பற்றிப் படித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. நவீன கால மருந்துகளை டாக்டர்கள் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள், நவீன முன்னேற்றத்துக்கு ஏற்ப மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் டாக்டர்களின் தற்போதைய அறிவை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஏற்பாடு இல்லை. டாக்டர்கள் சிறப்பு முயற்சி எடுத்து, கூட்டங்களில் கலந்து கொண்டோ, புத்தகங்களை வாங்கிப் படித்தோ தெரிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி முயற்சி மேற்கொள்ளாத டாக்டர்கள், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் தான் புதிய மருந்துகளை பற்றித் தெரிந்து கொள்கின்றனர். வளர்ந்த நாடுகளில் டாக்டர்களுக்கென கட்டாய தொடர்கல்விமுறை உள்ளது. ஆனால் இந்தியாவில் அவ்வகை ஏற்பாடுகள் இல்லை.

* என்ன நோய்க்கு என்ன மருந்தைக் கொடுக்கலாம் என்று விவரங்கள், அக்கம்பெனிகள் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், அவற்றால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்ற விவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகிய தகவல்கள் அடங்கிய புத்தகத்தை மாதம் தோறும் அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறை வளர்ந்த நாடுகளின் அரசுகள் வெளியிடுகின்றன. இந்தப் புத்தகங்களில் மருந்துக் கம்பெனிகளின் விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை. இந்த முறைக்கு தேசிய மருந்து விதிமுறைகள் என்று பெயர். இந்தியாவில் மருந்துக் கம்பெனிகளே தயாரித்து வெளியிடுகின்ற புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. தாம் தயாரிக்கும் மருந்துகளின் விற்பனையைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்ட விளம்பரங்களும் அத்தகைய புத்தகங்களை மருந்துக் கம்பெனிகள் வெளியிடுகின்றன. மருந்துகளைப் பற்றிய வர்த்தக நோக்கம் இல்லாத நம்பகமான உடனடி தகவல்கள் இந்தியாவில் டாக்கடர்களுக்குக் கிடைப்பது இல்லை.

மற்றொரு முக்கியக் காரணம் வியாதி. அதைக் குணப்படுத்துவது சுகாதாரம் ஆகியவை தொடர்பான தற்போதைய பழக்கவழக்கங்கள் ஆகும். டாக்டரைப் பார்த்து ஏன் இந்த மருந்தை எழுதிக் கொடுத்தீர்கள்? என்று கேட்டால் நோயாளிகள் கேட்டார்கள் அதனால் எழுதிக் கொடுத்தோம் என்கிறார்கள். தொழிலை நடத்துவதில் டாக்டர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு இடையிலான போட்டி மேலும் கடுமையாகிறது. தங்களிடம் வருகிற நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கவில்லை என்றால், வேறு டாக்டரிடம் அவர்கள் சென்று விடுவார்கள் என பயப்படுகின்றனர்; அதனால் ஊசிகளைப் போட்டு இந்த மருந்துகளை எழுதுகின்றனர். ஊசிகள், மாத்திரைகளின் சக்தியைப் பார்த்து பரவசமடைந்த டாக்டர்களே இந்தப் பழக்கவழக்கத்தையும் தொடங்கி வைத்திருக்கலாம்.


ஆனால், எப்படியோ டாக்டர்கள் தொடங்கி விட்டு விட்ட பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் ஊசி போடுதல், மாத்திரை வழங்கல் என்ற வட்டத்துக்குள் அவர்கள் சிக்கிக் கொண்டு விட்டனர். நோயாளிகளிடம் நோயின் தன்மைகள் அதற்கு எவ்வகையான சிகிச்சை தேவை என்பதை விளக்கிக் கூறினால் நோயாளிகள் அச்சிகிச்சை முறைகளைச் செய்து பார்க்க ஒப்புக் கொள்வார்கள். இதனைச் செய்தால் நோயாளிகள் மருந்துகளை நாட வேண்டிய அவசியம் குறையும். பெரும்பாலும் டாக்டர் நோயாளிகளிடம் இது சிறு கோளாறு தான்; தானே சரியாகிவிடும் என்றோ, அல்லது இது என்ன நோய் என எனக்குத் தெரியவில்லை என்றோ அல்லது இது என்ன நோய் என்று தெரிகிறது; ஆனால் இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றோதான் கூற வேண்டியிருக்கும்.


ஆனால் டாக்டர்கள் என்றால் அவர் ஏதோ மந்திரவாதி. மாயம் செய்யக்கூடியவர் என்ற கருத்தே நிலவுகிறது. எனவே நோயாளி வந்தவுடன் டாக்டர் அவரது கையைப் பிடித்து நாடி பார்க்க வேண்டும். நாக்கை நீட்டச் சொல்லி, கண்களை இழுத்துப் பார்க்க வேண்டும். ஸ்டெத்தாஸ்கோப்பை நெஞ்சிலும் முதுகிலும் வைத்துப் பார்ப்பதுடன் மேலும் சோதனைகளை உடனே நடத்த வேண்டுமென்ற கருத்தும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அதோடு அந்த நோய் என்ன என்பதை அவர் எப்போதும் கண்டுபிடித்து விடுவார். அதை குணமாக்கிட மருந்துகளையும் அவர் அறிந்திருப்பார் என்கிற அளவுக்கு டாக்டர்களைப் பற்றி மாயையான கருத்து ஏற்பட்டு விட்டது. அறிவியலையே மந்திரவாதம் போலச் சித்திரிக்கத் தொடங்கி விட்டனர். டாக்டருக்கு அது அற்புத சுகமளிக்கும் சக்தியைக் கொடுத்திருப்பதாக நினைக்கத் தொடங்கி விட்டனர்.


ஆனால் உண்மை என்னவெனில், விஞ்ஞானம் இன்னும் பலவற்றிற்கு விடை கண்டுபிடிக்கவில்லை. வினோதம் என்னவென்றால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலாக டாக்டர்கள் தங்களது மாயத் தோற்றத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டியது தமது கடமை என நம்புகின்றனர். டானிக்குகள் அவசியமற்ற மருந்துகளை எழுதிக் கொடுப்பதை நியாயம் என்று கருதினர். பெரும்பாலான நேரங்களில், நோயாளிக்கு வந்துள்ள நோய்க்குக் காரணம் என்ன என்று தெரியாவிட்டாலும் கூட அல்லது, தானாகவே அந்தக் கோளாறு சரியாகிவிடும் என அவர்கள் கருதினாலும் கூட அல்லது முக்கியமாக, அது என்ன நோய் என்பதை தெரிந்திருப்பதோடு, அதற்கு மருந்து ஏதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் அறிந்திருந்தாலும் கூட, தேவை இல்லாமல் பல மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கின்றனர். அது தவறானது என்ற உணர்வே டாக்டர்களுக்கு பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது.

உதாரணத்திற்கு, மஞ்சள் காமாலையை எடுத்துக் கொள்வோம். மஞ்சள் காமாலை வந்து விட்டால் போதும். நோயாளி பெரும் கவலையில் மூழ்கிவிடுவார். அதில் நியாயம் இருக்கிறது. அதை உடனே டாக்டரிடம் காட்ட வேண்டும். கல்லீரல் சுரக்கும் பித்த நீர் இரைப்பைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஏற்படும் அடைப்பினால் சில நேரங்களில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதுண்டு. டாக்டர் இதை அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துவார். இருந்தாலும் மஞ்சள் காமாலை அதிகமாக ஏற்படுவது கிருமிகளால்தான். இதைக் குணப்படுத்த, பயனுள்ள ஒரு சிகிச்சை முறையை இன்னும் விஞ்ஞானம் கண்டுபிடிக்கவில்லை. இருந்தாலும் ஓய்வெடுப்பதன் மூலமும், சிலவகை மருந்துகளைத் தவிர்ப்பதன் மூலமும் சாதாரண வகைப்பட்ட மஞ்சள் காமாலை தானாகவே குணமாகிவிட வாய்ப்புண்டு. சில நேரத்தில் நோய் கடுமையாகி விடும். அதையும் தடுக்க முடியாது. அது மருத்துவ விஞ்ஞானத்தினால் கணிக்க முடியாததும் கூட.


மஞ்சள் காமாலையில் இரு வகைகள் உள்ளன என்பதை தற்போது மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது ஒரு சாதனை ஆகும். அவற்றில் கல்லீரலில் இருந்து பித்த நீர் செல்லும் பாதையில் தடை ஏற்படுவதால் வரக்கூடிய மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி விட முடியும். உண்மை இப்படியிருக்க, தானாகவே குணமாகக்கூடிய இன்னொரு வகை மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மருந்துகளைக் கொடுப்பதன் அவசியம் என்ன? அவர்களுக்கு வந்துள்ள நோய் என்ன? இந்த நோய் தானாகவே குணமாகிவிடும். அல்லது குணமாக விடுங்கள் என்று ஏன் நோயாளிகளிடம் சொல்லக்கூடாது? இப்படிச் சொன்னால் நோயாளிக்கு நிறைய பணம் மிச்சமாகாதா? எனினும், மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுக்காமல் இருப்பதை நோயாளிகளும் சரி, டாக்டர்களும் சரி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.


இதை நோயாளிகளிடம் விளக்கினால், நோயாளிகள் தங்களை நம்பமாட்டார்கள் என டாக்டர்கள் கருதுகின்றனர். அதோடு நோயாளியிடம் விளக்கிக் கூற டாக்டர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. அந்தச் சிந்தனையும் வருவதில்லை. பரவலாகக் காணப்படும் இச்சாதாரண நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தை டாக்டர் வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் நோயாளி. ஆயுர்வேத மருத்துவ முறையிலும் நாட்டு மருந்துகள் மூலமும் மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறும்போது, நவீன அறிவியல் இந்நோய்க்கு மருந்தை நிச்சயம் கண்டுபிடித்திருக்கும் என நோயாளி நம்புகிறார்.


இதற்கு டாக்டர்கள் மருந்து கொடுக்கவில்லையென்றால் டாக்டரிடம் தான் ஏதோ கோளாறு என்றோ, அல்லது ஆங்கில மருத்துவ முறையில் தான் ஏதோ கோளாறு என்றோ நோயாளி நினைக்கத் தொடங்கி விடுகிறார். நோயாளிகளிடம் காணப்படும் இந்தப் பழக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் மேலும் ஊக்குவிப்பதன் மூலமும் மருந்துக் கம்பெனிகள் தமது வியாபாரத்தைப் பெருமளவு பெருக்கி அதன் மூலம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. தானாகவே குணமாகக் கூடிய மஞ்சள் காமாலைக்குக் கூட மருந்தை உற்பத்தி செய்து கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கின்றனர்.

ஏன் மக்கள் இந்த மருந்துகளை உட்கொள்கின்றனர்?

நாம் ஏற்கெனவே 2 முக்கியக் காரணங்களை விவாதித்துள்ளோம். முதலாவதாக மருந்து என்பது ஒரு பண்டம். மற்ற பண்டங்களிலிருந்து மாறுபட்டது. இங்கு எந்த வகை மருந்துகளை வாங்க வேண்டும் என்பதை நோயாளியாகிய நுகர்வோர் தீர்மானிப்பது இல்லை; டாக்டர் தான் தீர்மானிக்கிறார். தேவையற்ற இத்தனை மருந்துகளையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்தை ஒரு நோயாளிக்கு டாக்டர் ஏற்படுத்த முடியாது என்பது தெளிவு. அப்படியானால், நோயாளிக்கு இந்த விருப்பம் எப்படி உருவாக்கப்படுகிறது.

பலவித உடல்நலக் கோளாறுகள் நோயாளிக்கு ஏற்படக்கூடும் என்பது முதல் விஷயம். அந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதும் அதற்கு மருந்துகள் அவசியம் தேவை என்பதையும் மறுக்க முடியாது. பிரச்னை என்னவென்றால் தமக்குத் தேவையான மருந்துகள் எவை, தேவையற்ற மருந்துகள் எவை என்பதை வேறுபடுத்திப் பார்க்க நோயாளிக்குத் தெரியாது. இதற்குக் காரணம் நோயாளிக்கு மருந்தைப் பற்றி சரியான தகவல்கள் கிடைக்காததுதான்.

டாக்டர்களோ, என்ன நோய் வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் கொடுக்கப்படுகிற மருந்துகளைப் பற்றியும் நோயாளிக்கு விளக்குவதில்லை. நோயாளிகளும் இதைப்பற்றி டாக்டர்களிடம் கேட்பதில்லை. மருந்துகளின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்றனர். ஒரு மருந்தை எதற்குப் பயன்படுத்துவது என்பது பற்றியும் அதன் பக்கவிளைவுகள் என்ன என்பது பற்றியும் எந்தத் தகவலும் பெரும்பாலும் மருந்துகளுடன் கொடுக்கப்படுவதில்லை. ஒருவேளை, மேற்படி விவரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவை ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. மருந்துகளின் பெயர்களை தமிழிலோ, அந்தந்த மாநில மொழிகளிலோ எழுதப்படுவதில்லை. மருந்துகளின் பெயர்களை பல மொழிகளில் அச்சிடுவது கம்பெனிக்கு கஷ்டமான காரியம் என நீங்கள் நினைத்து விடக்ககூடாது.


நீங்கள் ஒரு குலோப் ஜாமூன் மாவு பாக்கெட் வாங்கிப் பாருங்கள். அந்தப் பாக்கெட்டில் கூட அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி 15 மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். பிரான்ஸ் நாட்டு மக்கள் தொகையைவிட தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாகும்.


ஆனால், தமிழகத்தில் விற்பனையாகும் மருந்துகளில் அவற்றின் பெயர்கள் தமிழில் எழுதப்படுவதில்லை. எனவே, தமிழில் மருந்துப் பெயர்களை அச்சிட முடியாது என்பதெல்லாம் உண்மையல்ல. மருத்துவரின் சீட்டுகளைத் தமிழில்தான் எழுத வேண்டும். மருந்துப் பெயர்களையும் தமிழில் தான் எழுத வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் டாக்டர்கள் சங்கம் இம்முயற்சியை எதிர்த்தது. நோயாளிகள் நலனைக் கருத்தில் கொண்டு, மருந்துகளின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியக்கூடாது என டாக்டர்கள் வாதிட்டனர். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதா?

மருந்துகளைப் பற்றிப் போதிய அறிவு இல்லாதிருப்பது மற்றொரு முக்கியக் காரணம். அவை பெரும்பாலும் வர்த்தகப் பெயர்களில் விற்கப்படுவதாகும். ஒவ்வொரு மருந்துக்கும் 2 பெயர்கள் உண்டு. ஒன்று மருத்துவ விஞ்ஞானத்தால் வழங்கப்பட்ட மருந்தின் வேதியியல் மூலத் தொகுதிப் பெயர். (இது வேதிப் பொருளின் பெயர்) மற்றொன்று வர்த்தகப் பெயர். இது மருந்தைத் தயாரிக்கும் கம்பெனி சூட்டிக் கொண்ட பெயர். வேதிப் பொருளால் தயாரிக்கப்படும் மருந்தை ஒவ்வொரு கம்பெனியும் வெவ்வேறு வர்த்தகப் பெயர்களில் விற்கின்றன. இப்படி ஒரே வகை மருந்துக்கு நூற்றுக்கணக்கான வர்த்தகப் பெயர்கள் உள்ளன.


பிளஸ்பிரின், கால்பால், மெலிடன்ஸ், இஃபிமால், குரோசின் இவை அனைத்தும் பாராசிட்டமால் என்ற ஒரே மருந்துதான். பாராசிட்டமால் என்பது அதில் உள்ள வேதிப்பொருளின் மருத்துவ விஞ்ஞானப் பெயர். மற்றவை அனைத்தும் வர்த்தகப் பெயர்கள். சட்டப்படி மூல மருத்துவப் பெயர்களை ஒவ்வொரு மருந்திலும் கட்டாயமாக அச்சிட வேண்டும் இதையும் கம்பெனிகள் செய்கின்றன. ஆனால் மிகமிகச் சிறிய எழுத்தில் அவை அச்சிடப்பட்டு இருக்கும். டாக்டர்கள் வர்த்தகப் பெயரை மட்டும் தான் எழுதிக் கொடுக்கின்றனர். எனவே, டாக்டர் கொடுப்பது என்ன மருந்து என்பதை அறிந்து கொள்ளமுடிவதில்லை; ஏற்கெனவே நாம் சாப்பிட்ட மருந்துதானா இது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு, இந்த மருந்தைச் சாப்பிட்டால் நமக்கு ஒத்துக் கொள்ளுமா அல்லது ஒவ்வாமை ஏற்படுமா என்பன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

ஒரு டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் என்ன மருந்தை அவர் எழுதியிருக்கிறார் என்பதை மற்றொரு டாக்டரால் கூட படித்துப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் இருநூறு, முந்நூறு மருந்துப் (வர்த்தப்பெயர்) பெயர்களுக்கு மேல் யாராலும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் பல்வேறு மருந்துகள் 40,000க்கும் மேற்பட்ட வர்த்தகப் பெயர்களில் சந்தையில் விற்கப்படுகின்றன.

ஒரு மருந்தின் வேதியியல் மூலத் தொகுதிப் பெயரை அதாவது மருத்துவ அறிவியல் பெயரை மட்டுமே மருந்து அட்டை மீது எழுத வேண்டும் என சட்டம் இயற்றினால் அவற்றின் எண்ணிக்கை சுமார் 300 தான் வரும். எனவே, அம்மருந்துகளின் பெயர்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதும் எளிது. அதோடு ஒவ்வொரு நோயாளியும் தான் உட்கொள்ளும் மருந்து என்ன என்பதையும் நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும்.

மருத்துவ அறிவியல் பெயர்களை மட்டும் அச்சிட்டால் போதும், வர்த்தகப் பெயர்கள் கூடாது என்பதை எதிர்க்கும் கம்பெனிகளும் டாக்டர்களும் அதற்கு ஒரு காரணத்தைக் கூறுகின்றனர். மருத்துவ அறிவியல் பெயரை (வேதிப் பொருளின்) மட்டும் வைத்தால், தரக்குறைவான மருந்துகளை உற்பத்தி செய்யும் சிறிய கம்பெனிகளும், ஓரளவு தரமான மருந்துகளைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களைப் போல தமது மட்டமான மருந்துகளை விற்றுவிடமுடியும் என்று வாதிடுகின்றனர்.


இது சொத்தையான வாதமாகும். மருந்துகளின் அறிவியல் (வேதிப் பொருளின்) பெயருக்குக் கீழே அவற்றைத் தயாரிக்கும் கம்பெனிகளின் பெயர் கட்டாயமாக இடம் பெற்றாக வேண்டும். ஒரு மருந்தின் எந்தக் கம்பெனியின் தயாரிப்பு வேண்டும் என்று டாக்டர்களும் நோயாளிகளும் விரும்புகிறார்களோ, அந்தக் கம்பெனியின் பெயரைப் பார்த்து மருந்துகளை வாங்க முடியும். பெரிய கம்பெனியோ, சிறிய கம்பெனியோ எல்லாவற்றின் தயாரிப்பிலும்தான் தரக் குறைவான மருந்து பிரச்னை இருக்கிறது. மருந்துப் பரிசோதனை முறையையும் தரக்கட்டுப்பாட்டை பலப்படுத்துவதும் தான் தரக்குறைவான மருந்துப் பிரச்னைக்குத் தீர்வாகும்.

நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருப்பதற்கு உடல் நலம் பற்றிய கருத்தும் பழக்க வழக்கங்களும் கூட மற்றொரு முக்கியக் காரணமாகும். நல்ல உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள், தூய்மையான சுற்றுச்சூழல், தகுதிக்கேற்ற வேலை, போதுமான வருமானம் மற்றும் பிற காரணங்களைப் பொறுத்ததே உடல் நலமாகும். சுகாதாரத் துறையின் மிக முக்கிய கடமை, நோய்கள் வராமல் தடுப்பதாகும். தாய் சேய் நலத்தைக் காப்பது தான் அடுத்த முக்கியப் பணி; ஏனென்றால் எளிதில் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகக் கூடியவர்கள் அவர்கள். இதையும் மீறி நோய்கள் மக்களைத் தாக்கும் போது தான் டாக்டருக்கும் மருந்துகளுக்கும் அங்கு வேலை. அப்போதும் கூட ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த மருந்துகளிலும் பெரும்பாலானவை வீரியம் குறைவான சாதாரண மருந்துகள் தான். அவற்றை துணை மருத்துவ ஊழியர்கள் (சுகாதார ஊழியர்கள்), மருந்தாளர்கள், பயிற்சி பெற்ற ஊழியர்களே கூட கொடுத்து விட முடியும். அவர்களால் சிகிச்சை அளிக்க முடியாத நோயாக இருந்தால் மட்டுமே பெரிய மருத்துவமனைகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டும்.

மருந்து மாத்திரைகளைக் கொடுப்பதன் மூலமும், நோய்க்குச் சிகிச்சை அளிப்பதன் மூலமும் நமது ஆரோக்கியமான வாழ்க்கையை டாக்டரால் தான் உத்தரவாதப்படுத்த முடியும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். நமது சமூக அமைப்பும், அதிலிருந்து கிடைத்த அறிவும் தான் இதற்குக் காரணம். ஒரு நோய்க்கு உண்மையில் மருந்து தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் எல்லாவித நோய்களுக்கும் மருந்து எழுதிக் கொடுக்குமாறு வற்புறுத்துவதற்குக் காரணமும் இதுதான். மருந்து உற்பத்தித் தொழிலின் வியாபாரத்தைப் பெருக்க இந்த மனோபாவத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.



-தி. சுந்தரராமன்



நன்றி:

கடன் பெறும் நுகர்வோருக்கு, கடன் ஒப்பந்த நகலை வங்கிகள் அளிக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி.

வங்கியில் கடன் பெறும் பலரும் கடன் பெறும் அவசரத்தில் அதற்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ள தவறிவிடுவது வழக்கமாகி வருகிறது. பின்னர் கடன் குறித்த விதிமுறைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்யும்போது வங்கிகளின் அலைக்கழிப்புக்கு ஆளாகவும் நேர்கிறது.
.
வங்கி நுகர்வோர்களின் இந்த பிரசினையை தீர்ப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி கடன் பெறும் நுகர்வோர் அனைவருக்கும் கடன் ஒப்பந்தத்தை கட்டாயமாக வங்கிகள் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆகஸ்ட் 22ம் தேதி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
.
RBI/2007-08/119
DBOD.No.Leg.BC.28/09.07.05/2007-0-8 ஆகஸ்ட் 22, 2007
அட்டவணைப்படுத்தப்பட்ட அனைத்து
வணிக வங்கிகள் / அகில இந்திய
நிதி நிறுவனங்கள் (பிராந்திய
கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்,

கடன் கொடுப்பவர்களுக்கான நியாயமான
பழக்கவழக்கங்களுக்கான நெறிமுறைகளுக்கு
வழிகாட்டுதல் – கடன் ஒப்பந்த நகல் அளித்தல்

எங்களின் 2003ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை DBOD.leg.No.BC.104/09.07.002/2002-03ஐப் பார்க்கவும். கடன் கொடுப்பவர்களுக்கான நியாயமான பழக்கவழக்கங்களுக்கான நெறிமுறைகளை வகுப்பது பற்றி வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்கள்குக்கும் அதில் சொல்லியிருந்தோம்.

2. அச் சுற்றறிக்கை பத்தி 2(ii)(C)யின் படி, வங்கிகளும் நிதி நிறுவனங்களும், கடன் வசதி சம்பந்தப்பட்ட விதிமுறைகள் / வரையறைகள் ஆகியவைகளை வகுக்கும்போது, கடன் கொடுக்கும் நிறுவனம் கடன் வாங்குபவரிடம் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுருக்கமாக எழுதப்பட்டு வங்கி / நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அதிகாரியால் கையொப்பமிடப்பட வேண்டும். இக் கடன் ஒப்பந்தத்தின் நகலையும், அதில் சொல்லப்பட்ட இணைப்புகளின் நகல்களையும் கடன் வாங்குபவருக்கு வங்கி நிறுவனம் அளிக்க வேண்டும் எனவும் அச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

3. சில வங்கிகள், கடன் வாங்குபவர்கள் கேட்டால்தான் கடன் நகலைக் கொடுப்பதாக அறிகிறோம். கடன் ஒப்பந்த நகல், அதில் சொல்லபபட்ட இணைப்புகளின் நகல்கள் ஆகியவைகளைக் கொடுப்பாமல் இருப்பது ஒரு நியாயமற்ற பழக்க வழக்கமாகவே கருதப்படும். மேலும், வங்கிக்கும் கடன் வாங்கியவருக்கும் இடையே சச்சரவு / தகராறுகளை எழுப்பவும் இது வழி கோலும்.

4. எனவே கடன் ஒப்பந்த நகலையும் அதில் சொல்லப்பட்ட இணைப்புகளின் நகல்களையும், கடன் வாங்குபவர் அனைவருக்கும், கடன் அளிக்கப்படும் போதே, வங்கி / நிறுவனங்கள் கொடுக்க வேண்டும்.

அன்புடன்

பிரசாந்த் சரன்
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)
.
கடன் ஒப்பந்த நகலைப் பெறும் வாடிக்கையாளர்கள் அதனை முழுமையாக படித்து புரி்ந்து கொண்டால் பல பிரசினைகளை தவிர்க்க முடியும்.
.
ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தின் சில பகுதிகள் தமிழிலும் கொடுக்கப் பட்டுள்ளது. அதனை படிப்பது வங்கி நுகர்வோர்கள் பலருக்கும் பயன் அளிக்கலாம்.
-ஆசிரியர் குழு

சிறப்பு பொருளாதார மண்டலம் – ஓர் சிறப்பு பார்வை

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவையா? இல்லையா? என்ற கேள்விக்கு விடை தேட, அதைப்பற்றி ஆழமாக புரிந்து கொள்வது அவசியமாகிறது. அதற்கு ஒரு நாட்டின் வளர்ச்சியை எப்படி எடை போட நினைக்கிறோம்? என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

பொருள் உற்பத்தி அதிகமாவது மட்டும் ஒரு நாட்டிற்கு போதுமா? அது சமமாக அல்லது சமூக நீதி அடிப்படையில் பங்கிடப்படுவது அதைவிட முக்கியல்லவா?

உதாரணமாக, மின்சாரம் தயாரிக்க அணு சக்தி அவசியமானது என்று கூறும்போது, அணுசக்தியால் கிடைக்கும் மின்சாரம் யாருக்கு அதிகம் கிடைக்கிறது? யாருக்கு கிடைக்கவில்லை? என்பதையும் இணைத்தே சிந்திப்பது நல்லதல்லவா?! சாதாரண, ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு திட்டம் அமையுமானால் (அந்த மின்சாரம் சேர்ந்தடைந்தால்) அதை வரவேற்பது நல்லது தான்.

சுகாதாரத்தில் சமீபத்திய இந்திய புள்ளிவிபரங்களை பாருங்கள்:
.
*பேறுகாலத்தில் இரத்த சோகை (Anemia) யால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகம் (88 சதவீதம் ) இருக்கும் நாடு.
.
*5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளில் 80% இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.46% பேர் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். (எத்தியோப்பியா, சோமாலியாவில்கூட இது 36 சதவீதம்தான்)

*பெரியவர்களிடம் சத்துக்குறைவு 40 சதவீதம் உள்ளது. 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 50% சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*இந்தியாவில் 77% மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே கூலியாக பெறுகின்றனர். அதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்தான் அதிகம் (88%), இஸ்லாமியர்கள் (85%), OBC- 80%.

இதைச்சொல்லும் பத்திரிகைகள், அது அடித்தட்டு மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம்தான் அதிகம் இருப்பதை சொல்லாமல் விடுவது எதனால்? அவர்கள் அப்படியே இருக்கட்டும், மீதமுள்ள மக்கள் பயனடைந்தால் சரிதான் என்னும் போக்கை சரியான திசையிலான வளர்ச்சிதான் என்று ஏற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதுதான் முக்கியம்.

என்னைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் (குறிப்பாக பெண்கள், சிறு குழந்தைகள் அதிலும் அடித்தட்டு, தாழ்த்தப்பட்ட சாதி மக்கள்) வறுமையால் வாடுகையில் (சத்துக்குறைவு எனும் வார்த்தை வறுமையை மறைக்க எவ்வாறெல்லாம் உதவுகிறது) நாடு சரியான வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவையா? இல்லையா? என்பதைவிட அவை யாருக்கு அதிக நன்மை பயக்கிறது என்பது முக்கியம். அவை சாதாரண ஏழை மக்களுக்கு (குறிப்பாக அடித்தட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு) அதிக பயனை கொடுத்து அவர்களை தற்சார்பு நிலைக்கு கொண்டு சென்றால் அதை ஆதரிப்பது தவறில்லை.

மேலும் விளைநிலங்கள் கைப்பற்றப்படுவது சரியா? தவறா? என்பதைவிட, நில உச்சவரம்பு சட்டம் மூலம் உபரியாக உள்ள விளைநிலங்கள் கைப்பற்றப்பட்டு சாதாரண மக்கள் பயனுறும் வகையில் அவற்றைப் பயன்படுத்துவதும் தவறில்லை.

இந்திய, தமிழக சூழலில் வறுமையால் (சத்துக்குறைவால்) வாடும் மக்களுக்கு அவை அதிக பயனளிக்குமாறு மாற்றுத்திட்டத்தை முன்வைத்து செயல்படுத்த முடியும். மேலும் வணிக நலன்களை அதிகம் கட்டிகாக்கும் சுய உதவி குழுக்களுக்கு பதிலாக சுய சார்பை உயர்த்தி பிடிக்கும் சுய உதவிக்குழுக்களை வளர்த்தெடுக்கலாம்.

தேவையை ஒட்டி, ஒவ்வொரு தெரு, சுயஉதவிக்குழுக்கள், வார்டு, சிறு கிராமம், பெரிய கிராமம், வட்டம், மாவட்டந்தோறும் இவைகளுக்கு அங்கு வாழும் மக்களின் சுகாதாரத்திற்கு ஏற்ப சிறு, பெரு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட வேண்டும். அங்கு சத்துக்குறைவால் பாதிக்கப்படும் மக்களை பட்டியலிட்டு அது அனைவரது பார்வைக்கும் படும்படி பொது இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

எங்கெல்லாம் விளைநிலங்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் சமூக வேளாண்மைக்கூடங்கள் (Community Agricultural Farms for Exploited – CAFÉ) உருவாக்கப்படவேண்டும். சத்துக்குறைவை போக்க பணபயிர்களுக்கு பதிலாக ஊட்டசத்து நிறைந்த உணவுப்பொருட்களை (தானியங்கள், பயிறு வகைகள், காய்-கனிகள்) உற்பத்தி செய்ய வேண்டும். சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதில் வேலை, உரிய கூலிக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். முடிந்தவரை இயற்கை வேளாண் முறையையே பின்பற்ற வேண்டும்.

விளைந்த பொருட்கள் முதலில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். (தேவையெனில் அதற்கென சட்டம் கொண்டு வரலாம்). உபரியாக இருக்கும் பொருட்களின் மீதியை மட்டும் சந்தைக்கு கொண்டு சென்று, அதனால் கிடைக்கும் பணத்தை அரசுக்கு ஒரு பகுதியும், ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் சமூக சொத்தாகவும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மாதம் ஒரு முறையாவது சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஏற்படும் மாற்றம்/ முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு படும்படி வைக்கப்படவேண்டும்.

விளைநிலங்கள் அல்லாத பிற நிலங்களிலும், அந்தந்த இடத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப என்னென்ன தொழில் தொடங்கலாம் என்பதை அப்பகுதி மக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். அந்த தொழிற்கூடங்களிலும்கூட வேலை முன்னுரிமை அடிப்படையில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் நியமிக்கப்படவேண்டும். நிரந்தர வேலை/ உரியகூலி... போன்றவற்றை நடைமுறைப்படுத்தி ஏழை மக்களுக்கான சமூக பாதுகாப்பினை உறுதி செய்தல் வேண்டும். இவற்றை நடைமுறைபடுத்த உள்ளூர் சமூக அமைப்புகள் / அரசு அதிகாரிகள் கொண்ட குழு உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

சத்துக்குறைவு என்பது தேசிய/மாநில அளவில் சட்டரீதியான குற்றமாக கருதப்பட்டு ஒவ்வொரு நபர்/குடும்ப அளவில் அதற்கான விரிவான காரணங்கள், மற்றும் அதை போக்கவல்ல நடைமுறை செயல்பாடுகள் எழுத்து வடிவில் எழுதப்பட்டு, அவர்கள் சத்துக்குறைவில் இருந்து மீளும்வரை தொடர் கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு, மீண்டபின் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து (சிக்கல்/சிரமங்கள், லாபம்/நட்டங்கள்...) அவற்றை மேலும் செழுமைப்படுத்த தேவையான திட்டங்கள்/ உத்திகள்/ நடைமுறை செயல்பாடுகள்/ சுயசார்பு, உள்ளூர் மக்களின் தேவைகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

வறுமைக்கான (சத்துக்குறைவிற்கான) சரியான காரணங்கள் முறையாக விளக்கப்படவும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஏற்படும் சிரமங்களை எடுத்துரைக்க உரிய இடைவேளையில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இலவசமாக சத்துணவு வழங்குவது சட்டரீதியாக கட்டாயப்படுத்தப்பட்டு, மேற்படி செயல்பாடுகளை செய்யாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உரிய கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கொள்ளை இலாபம் ஒன்றையே குறியாக வைத்து செயல்படும் பெரு நிறுவனங்கள் / தொழிற்கூடங்களுக்கு பதிலாக, சமூக அக்கறையுடன் செயல்படும் வணிக நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.

சுருக்கமாக தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர்/ மனித நலன்/ உரிமைகள் மீறும், சுற்றுச்சூழல் சுத்தத்தை உதாசீனப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு பதில் சாதாரண ஏழை மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தி, வறுமையை போக்கி, அவர்களுக்கு சத்தான உணவு, சுத்தமான நீர், அடிப்படை வசதிகள் (வீடு, உடை) உறுதி செய்யப்படுதல், சுற்றுச்சூழலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மாசுபடாமல் காத்தல், வேலைக்கு உத்தரவாதம், மன அமைதி, சுரண்டலற்ற மனித உறவுகள், இவற்றை ஏற்படுத்தி, நாட்டின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவை என சந்தேகமின்றி தெளிவாக கூறலாம்.





-மரு. வீ. புகழேந்தி, MBBS,
சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு,
கல்பாக்கம்

நுகர்வோர் உரிமைக்கோட்பாட்டின் (சுருக்கமான) வரலாறு

மனித சமூகம் உருவான காலத்தில் வேட்டையாடுதலும், விவசாயமும் தொழிலாக இருந்த காலத்தில் நுகர்வோர் உரிமைக்கான தேவைகள் இருக்கவில்லை. அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் தேவைகளுக்கு, தங்களையே சார்ந்திருந்தனர்.
.
பின் ஏற்பட்ட தொழிற்புரட்சி - உற்பத்தி ஓரிடத்திலும், அதை பயன்படுத்தும் நுகர்வோர் மற்றோர் இடத்திலும் இருக்கும் சமூக சூழ்நிலையை ஏற்படுத்தியது.


இதன் பின்னரே மூலதனக்குவிப்புக்காக தொழிலாளர்களையும், நுகர்வோரையும் ஏமாற்றுவது என்பது வெற்றிகரமான வணிகத்திற்கான கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது.
.
முதலாளித்துவ கொள்கைகளில் முன்னணி வகித்த அமெரிக்காவில்தான் அதற்கு எதிரான விழிப்புணர்வும் ஏற்பட்டது. நுகர்வோர் நலன்களை பாதுகாப்பதற்காக பல அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆட்சிப்பொறுப்பிற்கு வரும் திட்டம் உள்ளவர்கள் நுகர்வோர் நலன்கள் குறித்து சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் தோன்றியது.
.
இந்நிலையில் 1936ம் ஆண்டில் டாக்டர் கால்ஸ்டன் வார்னன் நுகர்வோர் ஒருங்கமைப்பு (CONSUMERS UNION) என்ற நுகர்வோர் அமைப்பை நிறுவினார்.
.
இதையடுத்து அமெரிக்க குடியரசுத்தலைவரான ஜான் எஃப் கென்னடி 1962ம் ஆண்டு மார்ச் 15ம் நாள் நுகர்வோர் உரிமைகள் சட்டத்தை உருவாக்கினார்.
.
இந்த சட்டத்தின் கீழ் பின்வரும் உரிமைகள் நுகர்வோர் உரிமைகளாக பிரகடனம் செய்யப்பட்டன:
.
1. பாதுகாப்பு உரிமை
2. தகவல் பெறும் உரிமை
3. தேர்ந்தெடுக்கும் உரிமை
4. முறையீட்டு உரிமை
.
இந்த பிரகடனத்தின் அடிப்படையில், 'நுகர்வோர் சர்வதேசியம்' (CONSUMERS INTERNATIONAL) என்ற அமைப்பு நுகர்வோர் உரிமைகளை உலகெங்கும் பரவ முயற்சி செய்தது.
.
இதன் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் அவை, நுகர்வோர் உரிமைகளை அங்கிகரித்து அவற்றை உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டு முறைகளாக வழங்கியது.
.
இதையடுத்து இந்தியாவில் 1986ம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
.
உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையின் விளைவாக உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் கடன் பெற வேண்டுமானால் இதுபோன்ற சில சட்டங்களை உறுப்பு நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் இந்த சட்டம் இந்தியாவில் அமல் படுத்தப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

சட்டத்தின் பார்வையில் நுகர்வோர்

ஒரு பொருளை (GOOD) அல்லது சேவையை (SERVICE) உரிய விலை(PRICE) அல்லது கட்டணம்(CHARGE) கொடுத்து சொந்த உபயோகத்திற்காக வாங்கும் அனைவரும் நுகர்வோரே!
.
ஒரு பொருளை பெறும்போது அதற்கான விலையை முழுதாக கொடுத்தாலும், கொடுப்பதாக உறுதியளித்தாலும், விலையின் ஒரு பகுதியை செலுத்திவிட்டு மீதியை தவணை முறையில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டாலும் பொருளை பெற்றவர் நுகர்வோராக கருதப்படுவார்.
.
இவ்வாறு ஒரு பொருளை விலை கொடுத்து அல்லது கொடுப்பதாக ஒப்புக்கொண்டு வாங்கியவர் தவிர அவருடைய அனுமதியுடன் அந்த பொருட்களை பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோராகவே கருதப்படுவார்.
.
அதேபோல, ஒரு சேவையை பெறுவதற்கு / பயன்படுத்துவதற்கு, அதற்கான கட்டணத்தை முழுமையாகவோ, தவணை முறையிலோ செலுத்துபவரும், அவ்வாறு செலுத்துவதாக ஒப்புக்கொண்டவரும் நுகர்வோராக கருதப்படுவர்.
.
இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்துபவரின் / செலுத்த ஒப்புக் கொண்டவரின் அனுமதியுடன் பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.
.
பொருட்களை சொந்த உபயோகத்திற்கு வாங்குபவர் மட்டுமே நுகர்வோராக கருதப்படுவார். அந்த பொருட்களை மீண்டும் விற்பதற்காகவோ, வணிக நோக்கத்திலோ வாங்குபவர் சட்டத்தின் பார்வையில் நுகர்வோராக கருதப்பட மாட்டார்.
.
அதேபோல சேவைகளிலும் கட்டணம் செலுத்தி சேவையை பெறுபவரே நுகர்வோராவார். இலவச சேவைகள் மற்றும் தனி ஒப்பந்தத்தின் கீழான பிரத்யேக தனிநபர் சேவைகள் ஆகியவற்றை பெறுபவர்களை நுகர்வோராக சட்டம் கருதாது.
.
இந்த நுகர்வோர் என்ற கருத்து தனியார் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அரசுக்கும் பொருந்தும். அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ தயாரிக்கும் / விற்பனை செய்யும் பொருட்களை (டாஸ்மாக் உட்பட) அதற்கான விலை கொடுத்து வாங்கும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.
.
அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ அளிக்கும் சேவைகளை உரிய கட்டணம் செலுத்தி பயன்படு்ததும் அனைவரும் நுகர்வோர்தான்.
.
இந்த அடிப்படையில், ஒரு பொருளை - சேவையை உரிய விலை/கட்டணம் செலுத்தி வாங்கும் அனைவரும், அந்த பொருளில்/சேவையில் குறைகள் இருந்தால் சட்டத்தின் துணையுடன் அந்த பொருளை/சேவையை வழங்கியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
.
அரசுக்கு எதிராகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த பொருள் / சேவை இலவசமாக வழங்கப்பட்டதாக இருக்கக்கூடாது.
.
அதேபோல அரசோ, அரசு அதிகாரியோ தவறாக செய்த காரியத்திற்காகவோ, கடமையை செய்யத் தவறியதற்காகவோ நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. அதற்கு வேறு சட்டங்கள் உள்ளன.

நுகர்வோர்களுக்கு வணக்கம்!

மனித சமூகத்தில் உள்ள அனைவரும் நாடு, இனம், மதம், மொழி, பாலினம் போன்ற எந்த குழும(GROUP)த்தில் பிரிந்து நின்றாலும் அனைத்து மக்களையும் பிரிக்க முடியாத குழுமம் "நுகர்வோர்" என்ற குழுமமே!
.
பிறந்த குழந்தை முதல், வயோதிகத்தின் விளிம்பில் நிற்கும் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் நுகர்வோராகவே வாழ்கிறோம். பொருளாதாரத்தில் மேன்மை நிலையில் உள்ள செல்வந்தர்கள் முதல், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பி்ச்சைக்காரர்கள்வரை அனைவருமே நுகர்வோர்தான். செல்வந்தர் ஒருவர் சொந்தமாக கார் வாங்கும்போது நுகர்வோர் ஆகிறார்; பிச்சைக்காரர் இரண்டு ரூபாய் கட்டணம் கொடுத்து பேருந்து பயணச்சீட்டு வாங்கும்போது நுகர்வோர் ஆகிறார்.
.
ஆக, அவரவர் தகுதிக்கு ஏற்ப அனைவருமே நுகர்வோர்தான். காட்டில் மறைந்துவாழ்ந்து சர்ச்சைக்குரிய மரணத்தை அடைந்த சந்தன கடத்தல் வீரப்பன் முதல், தலைமறைவு வாழ்க்கை வாழும் நக்ஸல்பாரிகள்வரை அனைவரும் நுகர்வோர்களே.
.
இந்த நுகர்வோர்களை நம்பித்தான் உலகப்பொருளாதாரமே இயங்குகிறது. இந்த நுகர்வோர்கள் கொடுக்கும் வரியிலிருந்துதான் உலகின் அரசுகள் இயங்குகின்றன. பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தும் மக்கள்கூட காசு கொடுத்துதான் உணவு உண்கின்றனர். கட்டணம் செலுத்தியே பயணம் செய்கின்றனர். இம்மக்கள் உண்ணும் உணவுப்பொருட்களுக்கு வரிகள் செலுத்தப்பட்ட பிறகே அந்த பொருள் உணவாக மாறுகிறது. எனவே இந்த மக்களும், அரசுக்கு (மறைமுகமாக) வரி செலுத்துகின்றனர் என்பதே உண்மை.
இந்த நுகர்வோர்கள் செலுத்தும் விலை /கட்டணத்துக்கு உரிய பொருளை/சேவையை வழங்க வேண்டியது அந்த பொருளை/சேவையை வழங்கும் வணிக/அரசு நிறுவனத்தின் கடமையும், பொறுப்புமாகும். இதனை மேற்பார்வையிட்டு சீர்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
.
நடைமுறையில் நுகர்வோரின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா? அவ்வாறு நுகர்வோர் நலன்கள் பாதுகாக்கப்படுவதை அரசு கண்காணிக்கிறதா?