தேர்வுத்துறை கவனக்குறைவால் நன்றாக படிக்கும் மாணவியின் விடைத்தாள் மாறியது !

பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்திருப்பது, விடைத்தாள் நகல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நன்றாக படிக்கும் மாணவியின் விடைத்தாள் மாறியதால் அவரது மதிப்பெண் குறைந்துபோனது.
விடைத்தாள் நகல்
பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக மாணவ-மாணவிகளுக்கு விடைத்தாள் நகல்கள் தரப்படுகின்றன. இதற்கு தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக தேர்வில் குறைவாக மதிப்பெண் பெறும் நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளும், பெயிலானவர்களும் விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிப்பார்கள்.
.
அதேபோல், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தபால் மூலம் விடைத்தாள் ஜெராக்ஸ் பிரதி அனுப்பப்பட்டது. கூட்டல் தவறு, விடைத்தாள் மாற்றம், சரியாக மார்க் வழங்காதது என ஏராளமான குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
.
குளறுபடி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி சுவிதா விலங்கியல் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்திருந்தார். நன்றாக படிக்கக்கூடிய இந்த மாணவிக்கு உயிரியல் பாடத்தில் வெறும் 80 மதிப்பெண்தான் வந்திருந்தது. ஆனால் அவரது உண்மையான மதிப்பெண் 143 என்பது நகல் மூலம் தெரிய வந்தது.
.
இதேபோல், இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி சிவசக்தி. ஆயிரத்திற்கு மேல் மார்க் வாங்கி எல்லா பாடங்களிலும் 170-க்கு மேல் வாங்கிய சிவசக்திக்கு உயிரியல் பாடத்தில் தேர்வில் வெறும் 30 மதிப்பெண்ணே (செய்முறைத்தேர்வு மார்க் தனி) கிடைத்தது. டாக்டர் ஆக வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்த இந்த மாணவிக்கு உயிரியல் தேர்வில் 30 மதிப்பெண் கிடைத்த அதிர்ச்சியில் உறைந்து போனார்.
.
விடைத்தாள் மாறியது
மகள் நல்ல மார்க் வாங்கி டாக்டர் ஆவார் என்று கனவு கொண்டிருந்த அவரது பெற்றோர் திட்டித் தீர்த்தனர். இருந்தாலும் நன்றாக தேர்வு எழுதி இருந்த நம்பிக்கையில் மாணவி சிவசக்தி விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தார்.
.
தபாலில் விடைத்தாள் நகலைப் பெற்றார். தபால் உறையை பிரித்துப் பார்த்த அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார். காரணம், அவரது தேர்வு எண்ணில் இருந்த விடைத்தாள் மதுரையில் தனித்தேர்வராக தேர்வு எழுதிய ஒரு மாணவரின் விடைத்தாள் ஆகும்.
.
சிவசக்தியின் மதிப்பெண் வேறு யாருக்கோ வழங்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் முறையிட்டார். தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்தபோது அந்த மாணவியின் விடைத்தாள் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையில் இருந்த அவரது விடைத்தாளை கண்டுபிடித்து சரிபார்த்தபோது, அவரது உண்மையான மதிப்பெண் 174 என்பது தெரிய வந்தது. தவறை ஒப்புக்கொண்ட தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் அந்த மாணவிக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
.
மன உளைச்சல்
இதேபோல் சென்னை மாணவர் ஒருவரின் கணித மதிப்பெண் 171 என்பதற்குப் பதிலாக தவறாக 117 என்று குறிப்பிடப்பட்டதும் தெரிய வந்தது. இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுபோன்று ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வுத்துறையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் நொந்து போய்விடுகிறார்கள். தவறே செய்யாமல் யாரோ செய்த தவறுக்காக தாங்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் பரிதாபமுடன் கூறினார்கள்.
.

நன்றி: தினத்தந்தி, 11-06-2008
.

விவகாரம் இத்தோடு முடியவில்லை. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலவரம்.
.

இதற்கான முழுமையான காரணம், தேவையான அளவில் பணியாட்கள் இல்லாததே. கடந்த பல வருடங்களாக அரசுத்துறையில் காலியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளது. மிகவும் அத்தியாவசியமான இடங்களில் தினக்கூலி அடிப்படையிலோ, ஒப்பந்த அடிப்படையிலோ மிகக்குறைந்த ஊதியத்திற்கு நிரந்தரம் அல்லாத பணியாளர்கள் நிரப்பப் படுகின்றனர்.
.

சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் கீழ்நிலை எழுத்தர்(Lower Division Clerk) , கணிப்பொறி இயக்குனர்(Computer Operator) போன்ற அனைத்து இடங்களுமே இத்தகைய தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவதாக தெரிகிறது. இவர்கள்தான் மாணவர்களின் விண்ணப்பங்கள், கட்டணங்கள், தேர்வு அனுமதி சீட்டுகள், மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை கையாளுகின்றனர்.
.

எந்தவிதமான வேலை உத்தரவாதமோ, மற்ற பணிப்பாதுகாப்பு அம்சங்களோ இல்லாமல் மேலதிகாரிகளின் அனுசரணையுடன் மட்டுமே பணியாற்றும் இவர்களிடம்தான் நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் கல்வி உள்ளது.
.

தனியார் நிறுவனங்களில் மனிதவள சுரண்டல் நடந்தால் அதை கண்காணிக்கும் அதிகாரம் படைத்த தொழிலாளர் நலச்சட்டங்களும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் இந்த கல்வி நிலையங்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
.

அரசுத்துறைகளின் இத்தகையப்போக்கு இந்த அமைப்புகளில் பணியாற்றும் மனிதவளத்தை மட்டும் சுரண்டவில்லை. இந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் சுரண்டப்படுகிறது.

-நுகர்வோர் நலன் குழு

1 மறுமொழிகள்:

Anonymous said...

[:(]