சிறப்பு பொருளாதார மண்டலம் – ஓர் சிறப்பு பார்வை

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவையா? இல்லையா? என்ற கேள்விக்கு விடை தேட, அதைப்பற்றி ஆழமாக புரிந்து கொள்வது அவசியமாகிறது. அதற்கு ஒரு நாட்டின் வளர்ச்சியை எப்படி எடை போட நினைக்கிறோம்? என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

பொருள் உற்பத்தி அதிகமாவது மட்டும் ஒரு நாட்டிற்கு போதுமா? அது சமமாக அல்லது சமூக நீதி அடிப்படையில் பங்கிடப்படுவது அதைவிட முக்கியல்லவா?

உதாரணமாக, மின்சாரம் தயாரிக்க அணு சக்தி அவசியமானது என்று கூறும்போது, அணுசக்தியால் கிடைக்கும் மின்சாரம் யாருக்கு அதிகம் கிடைக்கிறது? யாருக்கு கிடைக்கவில்லை? என்பதையும் இணைத்தே சிந்திப்பது நல்லதல்லவா?! சாதாரண, ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு திட்டம் அமையுமானால் (அந்த மின்சாரம் சேர்ந்தடைந்தால்) அதை வரவேற்பது நல்லது தான்.

சுகாதாரத்தில் சமீபத்திய இந்திய புள்ளிவிபரங்களை பாருங்கள்:
.
*பேறுகாலத்தில் இரத்த சோகை (Anemia) யால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகம் (88 சதவீதம் ) இருக்கும் நாடு.
.
*5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளில் 80% இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.46% பேர் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். (எத்தியோப்பியா, சோமாலியாவில்கூட இது 36 சதவீதம்தான்)

*பெரியவர்களிடம் சத்துக்குறைவு 40 சதவீதம் உள்ளது. 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 50% சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*இந்தியாவில் 77% மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே கூலியாக பெறுகின்றனர். அதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்தான் அதிகம் (88%), இஸ்லாமியர்கள் (85%), OBC- 80%.

இதைச்சொல்லும் பத்திரிகைகள், அது அடித்தட்டு மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம்தான் அதிகம் இருப்பதை சொல்லாமல் விடுவது எதனால்? அவர்கள் அப்படியே இருக்கட்டும், மீதமுள்ள மக்கள் பயனடைந்தால் சரிதான் என்னும் போக்கை சரியான திசையிலான வளர்ச்சிதான் என்று ஏற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதுதான் முக்கியம்.

என்னைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் (குறிப்பாக பெண்கள், சிறு குழந்தைகள் அதிலும் அடித்தட்டு, தாழ்த்தப்பட்ட சாதி மக்கள்) வறுமையால் வாடுகையில் (சத்துக்குறைவு எனும் வார்த்தை வறுமையை மறைக்க எவ்வாறெல்லாம் உதவுகிறது) நாடு சரியான வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவையா? இல்லையா? என்பதைவிட அவை யாருக்கு அதிக நன்மை பயக்கிறது என்பது முக்கியம். அவை சாதாரண ஏழை மக்களுக்கு (குறிப்பாக அடித்தட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு) அதிக பயனை கொடுத்து அவர்களை தற்சார்பு நிலைக்கு கொண்டு சென்றால் அதை ஆதரிப்பது தவறில்லை.

மேலும் விளைநிலங்கள் கைப்பற்றப்படுவது சரியா? தவறா? என்பதைவிட, நில உச்சவரம்பு சட்டம் மூலம் உபரியாக உள்ள விளைநிலங்கள் கைப்பற்றப்பட்டு சாதாரண மக்கள் பயனுறும் வகையில் அவற்றைப் பயன்படுத்துவதும் தவறில்லை.

இந்திய, தமிழக சூழலில் வறுமையால் (சத்துக்குறைவால்) வாடும் மக்களுக்கு அவை அதிக பயனளிக்குமாறு மாற்றுத்திட்டத்தை முன்வைத்து செயல்படுத்த முடியும். மேலும் வணிக நலன்களை அதிகம் கட்டிகாக்கும் சுய உதவி குழுக்களுக்கு பதிலாக சுய சார்பை உயர்த்தி பிடிக்கும் சுய உதவிக்குழுக்களை வளர்த்தெடுக்கலாம்.

தேவையை ஒட்டி, ஒவ்வொரு தெரு, சுயஉதவிக்குழுக்கள், வார்டு, சிறு கிராமம், பெரிய கிராமம், வட்டம், மாவட்டந்தோறும் இவைகளுக்கு அங்கு வாழும் மக்களின் சுகாதாரத்திற்கு ஏற்ப சிறு, பெரு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட வேண்டும். அங்கு சத்துக்குறைவால் பாதிக்கப்படும் மக்களை பட்டியலிட்டு அது அனைவரது பார்வைக்கும் படும்படி பொது இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

எங்கெல்லாம் விளைநிலங்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் சமூக வேளாண்மைக்கூடங்கள் (Community Agricultural Farms for Exploited – CAFÉ) உருவாக்கப்படவேண்டும். சத்துக்குறைவை போக்க பணபயிர்களுக்கு பதிலாக ஊட்டசத்து நிறைந்த உணவுப்பொருட்களை (தானியங்கள், பயிறு வகைகள், காய்-கனிகள்) உற்பத்தி செய்ய வேண்டும். சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதில் வேலை, உரிய கூலிக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். முடிந்தவரை இயற்கை வேளாண் முறையையே பின்பற்ற வேண்டும்.

விளைந்த பொருட்கள் முதலில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். (தேவையெனில் அதற்கென சட்டம் கொண்டு வரலாம்). உபரியாக இருக்கும் பொருட்களின் மீதியை மட்டும் சந்தைக்கு கொண்டு சென்று, அதனால் கிடைக்கும் பணத்தை அரசுக்கு ஒரு பகுதியும், ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் சமூக சொத்தாகவும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மாதம் ஒரு முறையாவது சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஏற்படும் மாற்றம்/ முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு படும்படி வைக்கப்படவேண்டும்.

விளைநிலங்கள் அல்லாத பிற நிலங்களிலும், அந்தந்த இடத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப என்னென்ன தொழில் தொடங்கலாம் என்பதை அப்பகுதி மக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். அந்த தொழிற்கூடங்களிலும்கூட வேலை முன்னுரிமை அடிப்படையில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் நியமிக்கப்படவேண்டும். நிரந்தர வேலை/ உரியகூலி... போன்றவற்றை நடைமுறைப்படுத்தி ஏழை மக்களுக்கான சமூக பாதுகாப்பினை உறுதி செய்தல் வேண்டும். இவற்றை நடைமுறைபடுத்த உள்ளூர் சமூக அமைப்புகள் / அரசு அதிகாரிகள் கொண்ட குழு உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

சத்துக்குறைவு என்பது தேசிய/மாநில அளவில் சட்டரீதியான குற்றமாக கருதப்பட்டு ஒவ்வொரு நபர்/குடும்ப அளவில் அதற்கான விரிவான காரணங்கள், மற்றும் அதை போக்கவல்ல நடைமுறை செயல்பாடுகள் எழுத்து வடிவில் எழுதப்பட்டு, அவர்கள் சத்துக்குறைவில் இருந்து மீளும்வரை தொடர் கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு, மீண்டபின் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து (சிக்கல்/சிரமங்கள், லாபம்/நட்டங்கள்...) அவற்றை மேலும் செழுமைப்படுத்த தேவையான திட்டங்கள்/ உத்திகள்/ நடைமுறை செயல்பாடுகள்/ சுயசார்பு, உள்ளூர் மக்களின் தேவைகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

வறுமைக்கான (சத்துக்குறைவிற்கான) சரியான காரணங்கள் முறையாக விளக்கப்படவும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஏற்படும் சிரமங்களை எடுத்துரைக்க உரிய இடைவேளையில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இலவசமாக சத்துணவு வழங்குவது சட்டரீதியாக கட்டாயப்படுத்தப்பட்டு, மேற்படி செயல்பாடுகளை செய்யாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உரிய கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கொள்ளை இலாபம் ஒன்றையே குறியாக வைத்து செயல்படும் பெரு நிறுவனங்கள் / தொழிற்கூடங்களுக்கு பதிலாக, சமூக அக்கறையுடன் செயல்படும் வணிக நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.

சுருக்கமாக தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர்/ மனித நலன்/ உரிமைகள் மீறும், சுற்றுச்சூழல் சுத்தத்தை உதாசீனப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு பதில் சாதாரண ஏழை மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தி, வறுமையை போக்கி, அவர்களுக்கு சத்தான உணவு, சுத்தமான நீர், அடிப்படை வசதிகள் (வீடு, உடை) உறுதி செய்யப்படுதல், சுற்றுச்சூழலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மாசுபடாமல் காத்தல், வேலைக்கு உத்தரவாதம், மன அமைதி, சுரண்டலற்ற மனித உறவுகள், இவற்றை ஏற்படுத்தி, நாட்டின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவை என சந்தேகமின்றி தெளிவாக கூறலாம்.





-மரு. வீ. புகழேந்தி, MBBS,
சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு,
கல்பாக்கம்

2 மறுமொழிகள்:

Anonymous said...

குமுதம் ஹெல்த் இதழில் இந்திய மருத்துவ உலகின் இருண்ட பக்கங்கள் என்ற நல்லதோர் தொடரினை எழுதிவரும் டாக்டர் புகழேந்தியின் எழுத்துகளை வலையுலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியை வரவேற்கிறேன்.

அவரது தொலைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரியை பதிவில் வெளியிட்டால், எங்களைப்போன்றவர்கள் அவரை தொடர்பு கொள்ள பேருதவியாக அமையும்.

Anonymous said...

Oru Maruthuvar intha maathiri samuga paarvaiyodu eluthuvathu
migavum varaverkapadavendiyathu

cirappu porulathara mandalam

patti oru nalla pathivaikoduthamaikku nanti

thodarunkal ungal thondai